Friday, December 30, 2005

To Hell With the Song List.

Dec 23 @ Music Academy, S.Sowmya, Pakkala Ramadas, Neyveli Narayanan, Madipakkam Murali

23-ஆம் தேதி ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகள் இரண்டுமே மியூசிக் அகாடமியில் தேறிவிட (எப்போவாவது ஒரு முறைதான் தேறும்) முதலில் மாண்டலின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சௌம்யாவின் கச்சேரிக்கும் உட்கார்ந்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாண்டலின் ஸ்ர்நிவாஸின் தீவிர ரசிகனான எனக்கு அவர் வாசித்தது மிகவும் பிடித்திருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர் கச்சேரிகளைப் பற்றி கடந்த இரண்ட வருடங்களிலும் எழுதியுள்ளதால் அந்த கச்சேரியைப் பற்றி நாலு வரி மட்டுமே....

ஸ்ர்நிவாஸின் கச்சேரிகளில் எஸ்.டி.ஸ்ர்தர் இல்லாத கச்சேரிகள் சீஸனுக்கு ஏதாவது ஓரிடத்திலாவது அமையும். தகரத்தை தரையில் தேய்ப்பது போல வில்லை போடும் ஸ்ர்தரின் வயலின் இல்லாத இடமாக நான் போவது வழக்கம். இந்த முறை எல்லா இடங்களிலுமே ஸ்ர்தரே வாசித்து என்னை சோதனைக்குள்ளாக்கிவிட்டார். இதற்கு விடிவே இல்லையா? யாராவது ஸ்ர்நிவாஸின் காதில் ஓதினால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இந்திய கிரிக்கெட் அணியிலாவது தமிழகத்தை சேர்ந்த ஸ்ர்ராமுக்கு இடம் கொடுக்கலாம். அவர் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கச்சேரிக்கு வந்து நமது காதை பதம் பார்க்கும் பரோபகாரத்தை ஸ்ர்ராமின் தந்தை ஸ்ர்தர் செய்யாமல் இருப்பார் (என்று நம்பிக்கைதான்). முதல் இரண்டு பாடல்களுக்கு வேகம் வேகம் தொடர்ந்து வேகம் மட்டுமே பிரதானமாக்கி வாசித்த ஸ்ர்நிவாஸும் ராஜேஷும், பின்பு விவேகமாக வாசித்த கௌரிமனோஹரியும், கல்யாணியும் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக கல்யாணியில், நாதஸ்வர பாணிபிரயோகங்களை, ஒரு மீட்டு மீட்டிவிட்டு, அந்த மீட்டலின் அதிர்வு அடங்கும் முன் ராகத்தின் பல இடங்களுக்கு தொடர்ந்து சன்சரித்து, உச்சஸ்தாயியில் நிறுத்திய போது பிரம்மிப்பாக இருந்தது. அதி அற்புதமான pick up-உம் amplification-உம் இருந்தாலொழிய இவ்வாறு வாசிக்க இயலாது. பல்லவி ராகமாலிகையில் ராகவர்த்தினி ராகத்தை சரியாககண்டுபிடித்ததில் எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. (நாலு வரிக்கு மேலேயே ஆயிடுச்சோ?)

ஸ்ர்நிவாஸ் கச்சேரியில் பக்கத்திலிருந்தவரிடம் மியூசிக் அகாடமியின் இந்த வருட சொவினியர் இருந்ததால், சௌம்யா என்ன பாட மாட்டார் என்பதை அந்த லிஸ்டிலிருந்த தெரிந்து கொண்டேன். நீங்கள் சௌம்யாவின் அகாடமி கச்சேரிகளுக்கு முன்னமே சென்றிருப்பின், முந்தைய வாக்கியம் உங்களை ஆச்சரியப்படுத்தாது. நான் சென்ற கச்சேரிகளில் எல்லாம் அந்த லிஸ்டில் இருக்கும் பிரதான ராகத்தை பாடியதில்லை. பிரதான ராகமாக சாவேரியும், தோடியில் ராகம் தான்ம் பல்லவியும் லிஸ்டில் இருந்ததால், காம்போதுயும் பைரவியும் பாடுவார் என்று நினைத்துக் கொண்டேன்.

அட தாளத்தின் யதுகுல காம்போதி வர்ணத்தில் கச்சேரி ஆரம்பமானது. சௌம்யாவின் கச்சேரிகளின் இன்னொரு விஷயம், சில நாட்கள் ஏதோ பாடி ஒப்பேத்தி விடுவார் (ஒன்றேகால் மணி நேரத்தின் முடித்த கச்சேரி ஒன்றிற்கு நான் சென்றிருக்கிறேன்), அலல்து குரல் சில நாட்களின் படுத்தும். அகாடமி கச்சேரிகளில் அப்படி அசிரத்தை யாரும் காட்டமாட்டார்கள் எனினும், அன்றைய தினம் குரலும் நல்ல நிலையில் அமைந்தது வர்ணத்திலேயே தெரிந்தது. சக்ரவாக ராகத்தை கோடி காட்டிவிட்டு 'சுகணுமுலே' பாடி, இரண்டாம் காலத்தில் விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரம் பாடினார். நான் அதுவரை பக்கல ராமதாஸின் வயலினைக் கேட்டதில்லை, நல்ல இனிமையான bowing, கையில் வேகமும் பேசுகிறது. சௌம்யாவின் ஸ்வரங்களுக்கு தக்க ரெஸ்பான்ஸ்களை அள்ளி வீசினார் ராமதாஸ். ஆனந்த பைரவியின் 'மரிவேரே' லிஸ்டில் இருந்ததால், அந்தப் பாடலை மட்டும்தான் பாடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஓரளவு விஸ்தாரமாகவே பாடி, cliche சஞ்சாரங்களைத் தவிர சில அரிய பிடிகள் மற்றும் சில folkish பிடிகளை எல்லாம் பாடினார். அந்த ஆலாபனைக்குப் பின் 'மரிவேரே' பாடினால், அப்புறம் ஒரு ராகம்தான் பாட நேரமிருக்கும் என்று நான் நினைத்திருக்கையில், 'ஹிமாசல தனய' என்ற ஷ்யாமா சாஸ்திரியின் மத்யம கால கிருதி ஆரம்பமானது.

ஆனந்த பைரவியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதி மத்யம கோட்டாவை நிறைவு செய்யும் வகையில் சாரங்காவின் 'எந்த பாக்யமு' விறுவிறுப்பாக பாடி அதற்கு காண்ட்ராஸ்டாக தேவ காந்தாரியின் ஓர் அரிய கிருதி ("ஷீர சாகர", "சீதா வர", "துலசம்மா", "வினராதா" என்று நாம் கேட்கக் கிடைக்கும் எந்த பாட்லும் அல்லாத ஒரு பாடல், பல்லவி சரியாகப் புரியவில்லை, தியாகராஜர் கீர்த்தனையாக இல்லாமலும் இருக்கலாம்) பாடும் போதே அடுத்த ஐட்டம் மெய்ன் பீஸ்தான் என்று புரிந்தது. அதுவரை ஓரளவு லிஸ்டை ஃபாலோ செய்ததால் அடுத்த வரும் சாவேரியை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் வகையில் தோடி ஆரம்பமானது. தோடியில் சில ஸ்வரங்கள் எல்லாம் ரப்பருக்கு ஒப்பாகும், அதை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளுவு இழுத்து அடுத்த ஸ்வரத்துக்குச் செல்லும் போதுதான் ஆலாபனையில் அழுத்தம் ஏற்படும். இதை அழகாகக்ச் செய்து, ராகத்தின் பல சஞ்சாரங்களை அறிமுகப்படுத்தி விஸ்தாரமாகப் பாடி மற்றொரு அரிய கிருதியான "ஸ்ர் சுப்ரமண்யோ" பாடினார். (தியாகராஜரே 30-க்கும் மேலான கிருதிகளில் தோடியின் வெவ்வேறு ஸ்வரூபங்களைப் படப்பிடித்துக் காட்டிவிட்ட நிலையின் எப்போதோ ஒருமுறைதான் 'ஸ்ர் கிருஷ்ணம்', 'ராவே ஹிமகிரி', 'கார்த்திகேய காங்கேய', 'கலி தீர வந்தருள்வாய்' போன்ற பாடல்களைக் கேட்க முடிகிறது. 28-ஆம் தேதி ஒரு லெக்சரில் மாரிமுத்தாப் பிள்ளையின் "எந்நேரமும் காலைத் தூக்கி" என்ற தோடி ராகப் பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு களையில் நல்ல கம்பீரத்துடன் மிளிரும் இது போன்ற கீர்த்தனைகள் வெளியே வருதல் வேண்டும்.") கீர்த்தனையில் கல்ப்னை ஸ்வரங்களுக்குப் பின் தனி நாவர்த்தன்ம் ஆரம்பமானது.

அனுசரணையாக அடக்கி வாசித்த நெய்வேலி நாரயணன், அதிக கணக்கு வழக்கிலெல்லாம் ஈடுபடாமல், சதுஸ்ர நடையை நன்றாக அமைத்துக் கொண்டு மடிப்பாக்கம் முரளியுடன் சேர்ந்து குறைப்பு செய்து கோர்வை வைத்து முடித்த போதுஅரை மணிக்கு மேல் நேரம் இருந்தது. விவர்த்தினியில் கடகடவென 'வினவே ஓ மனசா' பாடி மாயாமாளவ கௌளையை ஆலாபனை செய்தார். ஐந்து நிமிட ஆலாபனையில் பாவமும், பிருகாக்களும் நிறைந்திருந்தன. அவரின் ஆலாபனைக்குச் சற்றும் குறையாமல் வயலிஸ்டிஞ் ரெஸ்பான்ஸும் இருந்தது கச்சேரியை மேலும் மெருகேற்றியது. ராகத்தில் விட்ட இடங்களை தானத்தில் தொட்டுவிட்டு "மாயா தீர்த்த ஸ்வரூபிணி நன்னு ப்ரோவம்மா" என்ற பல்லவியை கண்ட ஜாதி திரிபடை (இரண்டு களை) தாளத்தில் நிரடலான "ஒன்றேகால் இடம் offset" எடுப்பில் (ஒன்பது அக்ஷரம் தள்ளி) பாடி திரிகாலம் செய்தது லய வின்யாசங்களை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். ராகமாலிகை ஸ்வரங்களில் சுநாத வினோதினி, ரேவதி மற்றும் சுருட்டியைப் பாடி பல்லவியை நிறைவு செய்தார்.

பல்லவியைத் தொடர்ந்து மதுவந்தியில் அஷ்டபதியும், கானடாவில் (ஜாவளியோ பதமோ) பாடி மங்களம் பாடும் போது பத்து மணிக்கு முடிக்க வேண்டிய கச்சேரி பத்து நிமிடம் நீண்டிருந்தது.

எனக்கு பிடித்த பெண் பாடகரின் கச்சேரி அன்றைய தினம் அற்புதமாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தபடி வீட்டை நோக்கி வண்டியைச் ச்லுத்தினேன். அடுத்த நாள் சஞ்சயின் கச்சேரி "My concert of the season"-ஆக அமையும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அத்தோடு இந்த சீஸனுக்கு "பவமான" (மங்களம்) பாடி விடுவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 28, 2005

இரண்டு கரஹரப்ரியாக்கள்

21 Dec @ Naradha Gana Sabha, Nisha Rajagopal, Charumathy Raghuraman

22 Dec @ Music Academy, Sangeetha Sivakumar, Charulatha Ramanujam

நிஷா ராஜகோபால் சங்கீத குடும்பத்தில் வந்தவர். சிறு வயதிலிருந்து அசுர சாதகம் செய்து குரலை நன்றாக தயார் படுத்திக் கொண்டு அதே சமயத்தில் வேலையிலும் கலக்குகிறாராம். 21-ஆம் தேதி ஹிந்துவில் இப்படி வெற்றிகரமாக இரட்டை மாட்டு வண்டி ஓட்டுகிறவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. 2.00 மணி ஸ்லாட்டில், நான் 4.45-க்கு செல்ல இருந்த மியூசிக் அகாடமிக்கு அருகில் இருக்கும் நாரத கான சபாவில் அவரின் கச்சேரி இருந்ததால், அதிகம் எதிர்பார்ப்பில்லொமல் அரங்கிற்குள் நுழைந்த பொழுது பலமஞ்சரி ராகத்தில் 'சனாதன' பாடிக் கொண்டிருந்தார்.

நிஷா ராஜகோபாலின் குரல் பல பெண் பாடகர்களுக்கு இருபது போல கீச்சு குரலாக இல்லாதது விசேஷம். மந்திர ஸ்தாயியில் நல்ல கனமுடன் மிளிர்கிறது. அன்றைய தினம், நல்ல சளியால் அவதிப்பட்டது கண்கூடக் காண முடிந்தது. மனம் இருந்தால் விதியையே வெல்ல முடியும் என்னும் போது சளியை வெல்ல முடியாதா என்ன? நல்ல பாடல் தேர்வினாலும், பாடிய ராகங்களை தன் குரல் சென்ற இடங்களுக்குள் முழுமையாக பாடியதாலும் கச்சேரி அற்புதமாய் அமைந்தது.

கச்சேரியின் முதல் பாதியில் நல்ல விறுவிறுப்பான காலப்பிரமாணத்தில் அமைந்த 'எடி யோசனாலு' (கிரனாவளி), 'ரா ரா மா இண்டி' (அசாவேரி), 'அபராத' (லதாங்கி), 'ராகா சசிவதன' கீர்த்தனைகளைப் பாடி கச்சேரியில் தொய்வு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொண்டார். சப் மெய்ன் ராகமாக லதாங்கியை ஆலாபனை செய்தார். முதல் பிடியிலேயே லதாங்கி என்று காட்டிவிட்டு படிப்படியாய் ஆலாபனையை வளர்த்து, எட்டாத தார ஸ்தாயியில் மல்லுக்கு நிற்காமல் crisp ஆலாபனையாக அமைந்தது. இந்த சீசனில் எக்கச்செக்க இளஞர்களும் யுவதிகளும் அற்புதமாய் பாடுவது போலவே அற்புதமாய் பக்க வாத்யம் வாசிக்கும் இளைய சமுதாயமும் காணக்கிடைக்கிறது. அவர்களுள், இரண்டு சீசன்களாகவே அக்கரை சுப்புலக்ஷ்மி மற்றும் சாருமதி ரகுராமின் பெயர் அடிக்கடிக் காண/கேட்கக் கிடைக்கிறது. முத்லில் கூறிய்வர்ரின் வாசிப்பை முன்னால் கேட்டுக் களித்திருக்கிறேன் என்றாலும் அடுத்தவரின் வாசிப்பை இன்றுதான் கேட்க முடிந்தது. ரத்தினச் சுருக்கமான ராகப் படப்பிடிப்பாகட்டும், ராக ஸ்வரூபங்களின் காட்டும் முழுமையாகட்டும், படகர் ஆலாபனை செய்யும் போது செய்யும் 'ஃபில் அப்' ஆகட்டும், கல்பனை ஸ்வரங்களில் பாடரை நிழல் போலதொடர்வதாகட்டும், அனைத்திலும் இந்த இரு யுவதிகளின் வாசிப்பில் தென்படுகிறது.

ஆட்டத்தின் கதாநாயகனாக (OR SHUD IT BE NAYAKI?) எங்கே மீண்டும் ஒருய் முறை மத்யமாவதியோ சங்கராபரணமோ வந்துவிடுமோ என்று நான் கவலைப்பப்பட்து போல நடக்காமல் (இந்த சீசனில் இந்த இரண்டு ராகங்களும் விடாமல் துரத்துகின்றன.) அதுவரை சீஸனில் கேட்டிராத கரஹரப்ரியாவை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். கரஹரப்ரியாவில் ரிஷபத்தில் நின்று கொண்டும் அதனைச் சுற்று பல நகாசு வேலைகள் செய்து பாடியதும், நிஷாதத்தில் மெல்லிய அசைவுகளான கமகங்களை நிறைவாக அளித்தபடியும் அழகிய ஆலாபனைஅயி முடித்தார். இவர் தொட்டதையெல்லாம் தொட்டி கொஞ்சம் விட்டதையும் சேர்த்து வாசித்து பலத்த அப்ளாசைப் பெற்றார் சாருமதி.

அன்று அதுவரை பாடிய பாடல்களில் ஒரு பாடலைத் தவிர அனைத்தும் தியாகராஜரின் கீர்த்தனைகளே. கரஹரப்ரியா என்றாலே முதலில் நினைவில் வருவது தியாகராஜரின் 'சக்கனி ராஜ', 'பக்கல நிலபடி' அன்னலது 'ராம நீ சமான' என்ற பாடல்கள்தான். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் மற்ற வாகேயக்காரர்களுக்கு ஓர வஞ்சனை செய்த பாவத்துக்கு உள்ளாவாரே என்று நான் கவலையில் ஆழ்ந்த பொழுது, அதற்கு இடமளிக்காமல், அதிகம் கேட்கக் கிடைக்காத அழகிய பாடலான, பாபனாசம் சிவனின் 'ஸ்ர்நிவாச தவசரணம்' பாடினார். (இதை கே.வி.என் மற்றும் எம்.எல்.வி பாடி கேட்டிருக்கிறேன். அதற்குப் பின் இவர்தான்.) "ஸ்ர் வேங்கட கிரி ரமண" என்ற இடத்தில் நிரவலும் ஸ்வரங்களும் பாடி தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். எனக்கு ஆதி தாளத்தில் தனி ஆவர்த்தனம் புரிகின்ற அளவுக்கு மற்ற தாளங்கள் புரியாததால், அந்த தனியைப் அதிகம் எழுதாவிடினும் உளராமல் இருக்கலாம் என்று விட்டுவிடுகிறேன்.

கர்நாடக காபியில், 'பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்', பீம்ப்ளாசில் (இல்லைனா ஆபேரியோ, கர்நாடக தேவகாந்தாரியோ) 'எப்படிப் பாடினரோ', மற்றும் தேஷ் ராகத்தில் தஞ்சாவூர் சங்கர ஐயரின் 'ராம நாமமே' பாடி இரண்டு மணி நேர கச்சேரியை நிறைவாக அளித்தார். விரைவில் ப்ரைம் ஸ்லாட்டுக்கு முன்னேற பிரார்திப்போம்.

இன்னொரு கரஹரப்ரியா அடுத்த நாள் மதியம் இரண்டு மணிக்கு சங்கீதா சிவகுமாரின் கச்சேரியில் கேட்கக் கிடைத்தது. கச்சேரியை சஹானா வர்ணத்தில் ஆரம்பித்து, நாட்டையில் 'சுவாமிநாத பரிபாலயாசுமாம்' பாடி கல்பனை ஸ்வரம் பாடிய போதும், சங்கீதாவின் குரல் முழுமையாக warm up ஆகவில்லை. கல்யாணி ராகத்தை short and brisk piece-ஆக பலர் உபயோகப்படுத்தியிருப்பதை முன்னமே கூறியிருந்தேன். அவ்வாறு பாடும் போது பெரும்பாலாக பாடப்படும் கீர்த்தனை (செம்மங்குடி fame) 'பிரான வராலிச்சி'. இக்கச்சேரியில் அதையேதான் சங்கீதா எடுத்துக் கொண்டார். கீர்த்தனைக்கு முன் பாடிய breezy ஆலாபனை, கல்யாணியில் upper half-க்கு பிரதானம் அளிக்கப்பட்டது. மேல் ஸ்தாயியில் சில அழகிய கோவைகளைப் பாடிய போதும், அவர் கொடுத்த பிருகாக்கள் அவர் எதைப் பாட நினைத்தார் என்பதை suggest செய்யும் விதமாக இருந்ததே தவிர முழுமையாக காட்டும் விதமாக இல்லை. கீர்த்தனை முடிந்து நிரவல் ஆரம்பித்தவுடன் அவரின் குரல் நன்றாக warm up ஆகியிருந்தது. இவருக்கு பக்க வாத்தியம் வாசித்தவரும் இன்னொரு 'சாரு'-தான். இவரின் வாசிப்பும் முன் கூறியவரின் வாச்சிப்பைப் போலவே கச்சிதமாய் இருந்தது. முதலில் களை கட்டாவிடினும் கல்யாணியின் சௌந்தரியத்தை விறுவிறுப்பாய் கல்ப்னை ஸ்வரங்களில் சங்கீதா அளித்த போது கச்சேரி களை கட்டியது. கல்யாணிக்கு நல்ல contrast-aaka பாவம் சொட்டும் ஹிந்தோளத்தில் 'சாம கான லோலனே' பாடினார்.

குரல் நல்ல நிலையை அடைந்துவிட்ட நிலையில் கச்சேரியின் பிரதான ராகமான கரஹரப்ரியாவை எடுத்துக் கொண்டார். அழகான அளவான கமகங்களை இழைத்த பின், பிருகா மழையில் கரஹரப்ரியாவின் சஞ்சாரங்களைக் காட்டி அரங்கை நனைக்க ஆரம்பித்தார் சங்கீதா. கல்யாணியில் suggestive-ஆக இருந்த பிருகாக்கள் அனைத்தும் கரஹரப்ரியாவில் பூர்ணத்துவம் பெற்று மிளிர்ந்தன. ஆலாபனைக்குப் பின் பாடிய பக்கல நிலபடியின், tried and tested, 'மனஸூன' என்ற இடத்தில் விஸ்தாரமான நிரவலும், கல்பனை ஸ்வரங்களும் பாடி முடித்த போது அரங்கம் அதிர்ந்தது. என் பக்கத்து சீட் மாமா மாத்திரம், "இதுக்கு முன்னாடி நடந்த ரசிகாவோட கச்சேரியிலையும் கரஹரப்ரியாதான் மெய்ன்", என்று அலுத்துக் கொண்டார். ம்யூசிக் அகாடமியில்தான் முதலிலேயே லிஸ்ட் கேட்டுவிடுவார்களே. அப்படியிருக்கையில் எப்படி அடுத்த அடுத்த கச்சேரியில் ஒரே பிரதான ராகத்தை வைத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

ஸ்வரங்களுக்குப் பின் நடந்த மிஸ்ர சாபு தனியைப் பற்றியும் எனக்கு தனியாக ஒன்றும் சொல்லத் தெரியாததால், அதனைத் தொடர்ந்த சாவேரிக்குச் செல்கிறேன். தனி முடிந்த போது கையில் 50 நிமிடம் இருந்ததால் நிச்சயம் ராகம் தானம் பல்லவி பாடுவார் என்று அனுமானத்தேன். என் அனுமானத்தைச் சரியாக்கும் வகையில் சாவேரியை ஆலாபனை செய்தார். குறிப்பாக மேல் ஸ்தாயி ரிஷபத்தில் நின்றும் அதனைச் சுற்றிச் சுற்றியும் அவர் பாடிய சஞ்சாரங்கள் அமர்க்களமாய் இருந்தது. தானம் யாரும் விரிவாகப் பாடுவதில்லை என்ற எனது குறை நீங்கும் வகையில் ராகத்தின் தொடர்ச்சியாய், ராகத்துக்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கு தானமும் பாடி என்னை மகிழ்வித்தார். அவர் பாஅடிய பல்லவி, "கரிமொர வின லேதா ஹரே கிருஷ்ணா". இப்பல்லவியை ஆலத்தூர் சகோதரர்களும், 2003-இல் நாத இன்பத்தில் டி.என்.கிருஷ்ணனும் இசைத்து கேட்டு இருக்கிறேன். 2003-இல் கிருஷ்ணன் ஆதி தாளத்தில் இசைத்ததை சங்கீதா திஸ்ர திருபுடை தாளத்தில், கால் இடம் அதீத எடுப்பில் எடுத்துப் பாடினார். அவர் செய்த த்ரிகாலமும், அதனைத் தொடர்ந்து பாடிய ஸ்வரங்களும் ராகமாலிகையும் விறுவிறுப்பை நன்றாக தக்க வைத்துக் கொண்டன. ராகமாலிகையில் முதலில் பாடிய ராகம் வராளி போல தோற்றம் அளிக்கும் 'விஜய ஸ்ர்' என்று நினைக்கிறேன். அதன் பின் கானடாவும் பெஹாகும் பாடினார். post pallavi pieces-க்கு உட்கார்ந்தால் அடுத்த கச்சேற்ரிக்கு தாமதமாகிவிடும் என்பதால் கிளம்பிவிட்டேன்.

ஓரளவுக்கு சீனியரான சங்கீதா இத்தனை நாளில் ப்ரைம் ஸ்லாட்டுக்கு வராதது ஆச்சரியமே. விரைவில் ப்ரைம் ஸ்லாட் கச்சேரி ப்ராப்திரஸ்து.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 27, 2005

தேரும் காரும் ஜெட்டும்...

போன வருடம் 'my concert of the season'-ஆக அமைந்தது கிருஷ்ண கான சபாவில் டி.எம்.கிருஷ்ணா, நாகை முரளீதரன் மற்றும் திருச்சி சங்கரனுடன் பாடிய கச்சேரிதான். செண்டிமெண்டை விட்டுவிடா மற தமிழனுக்குரிய இலக்கணத்தை விட்டுவிடாமல் 20-ஆம் தேதி கிருஷ்ண கான சபாவை நோக்கி நடையைக் கட்டினேன். (இன்னாபா செய்ய, மழையில ரண்டு தபா மாட்டிக்கிட்டதால, நம்மளாண்ட இருக்குற பழைய மொபெட்டை நம்பி போவ முடில). இந்த வருடம் கிருஷ்ண கான சபாவில் பக்க வாத்தியங்கள் வேறு எனினும், எம்பார் கண்ணன் நான் விரும்பி கேட்கும் வயலின் வித்வான்களிள் ஒருவரானதாலும், மன்னார்குடி ஈஸ்வரன் சௌக்கியமாய் வாசிக்கும் சீனியர் வித்வான் ஆனதாலும் கச்சேரிக்கு நம்பிச் சென்றேன்.

என் பத்து நிமிட தாமதத்துக்குள் என்னென்ன உருப்படிகள் போனதோ தெரியவில்லை, நான் அரங்கில் நுழையும் போது 'சேஷாசல நாயகம்' ஆரம்பித்தது. சாஹித்யம் தெளிவாய் புரியும்படி விறுவிறுப்பான காலப் பிரமாணத்தில், கொஞ்சம் கூட கள்ளக் குரல் கலக்காமல் பாடி, 'அரவிந்த பத்ர நயனம்' என்னும் இடத்தில் நிரவல் ஸ்வரம் பாடினார். எம்பார் கண்ணன் ஆலாபனைகளில் ஃபாலோ செய்வதிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்த வாய்ப்புகளில் 'சோலோ' செய்ததும் அவரது வாசிப்பின் முதிர்ச்சியைக் காட்டின. கச்சேரியில் இன்னொரு welcome change, டி.எம்.கிருஷ்ணாவின் வாயிலிருந்து போட்டி போட்டு அளவுக்கதிகமாய் வந்து கொண்டிருந்த 'பலே', 'சபாஷ்' போன்ற வார்த்தைகள் கணிசமானதாளவில் குறைந்திருப்பது.

நல்ல விறுவிறுப்பான வராளியைத் தொடர்ந்த 'மார்க ஹிந்தோளம்' (சல மேலரா), நல்ல contrast-ஐ ஏற்படுத்தியது. (மார்க ஹிந்தோளம் சாரமதியின் ட்வின் சிஸ்டர் போல் இருக்கிறது. சில இரட்டையர்களைப் பல முறை கண்டாலொழிய வித்தியாசப்படுத்துவது கடினம். இந்த அந்த வகை. இன்னும் நிறைய கேட்க வேண்டும்.)

மத்யம காலக் கிருதிகளில் இருக்கும் விறுவிறுப்பான சங்கதிகளும், தாள கதிகளும் கேட்க அலுப்பில்லாமலிருப்பினும், ராகத்தின் உண்மை அழகு வெளிப்படும் வழியில் அமைந்திருக்கும் கிருதிகள் விளம்ப காலத்தில் அமைந்திருக்கும் கிருதிகளிலும்தான். (சும்மா சும்மா விளம்பம், துரிதம், மத்யமம்-னு எல்லாம் பீட்டர் உடாத. அப்படீனா இன்னானு சொல்லு மாமே-னு ஒலித்த குரலுக்கு: விளம்ப காலம்-னா சுலோவா பழனில தேரு போற ஸ்பீடு. மத்யம காலம்னா மெர்சடிஸ் பென்ஸு cruise-ல ஹைவேல போற ஸ்பீடு, துரிதம்னா ஜெட்டு ஸ்பீடு. மூணும் சவாரியும் சுகம்தான்.) வசந்தா ராகத்தின் அழகிய படபிடிப்பைத் தொடர்ந்து, கிருஷ்ணாவின் குரு செம்மங்குடியை நினைவுபடுத்திய 'ஹரிஹரபுத்ரம்' பாடலை அதி விளம்ப காலத்தில் பாடினார். (பாடிலின் தாளம் 'கண்ட ஏகம்' என்று நினைக்கிறேன்.). பாடலில் கல்பனை ஸ்வரம் பாடும் போது முதல் கால ஸ்வரங்கள் (முதல் காலம்னா பாட்டோட ஸ்பீடு, இரண்டாம் காலம்னா பாட்டோட ஸ்பீடுக்கு டபுள் ஸ்பீடு, அஷ்டே விஷையாளு). மட்டும் பாடி முடித்தது அவர் அதுவரை ஏற்படுத்திய mood-ஐ தக்க வைக்க வகையில் அமைந்த்தது.

கிருஷ்ணாவின் கச்சேரி எனக்கு மிக மிக நிறைவாக அமைந்தாலும், அவரின் கச்சேரி அமைப்பைப் பற்றி ஒரு விஷயம். விளம்ப காலம் எத்தனை அழகாக இருந்தாலும் ஒரு கச்சேரியில் ஓரிரு கீர்த்தனைகளைக் கேட்டால்தான் அலுப்பு தட்டாமல் இருக்கும். பாவம் சொட்டும் 'மார்க ஹிந்தோளம்', அதனைத் தொடர்ந்து வழக்கமான இரண்டு களை சவுக்கத்தைவிட கொஞ்சம் விளம்பமான காலத்தில் வசந்தா அதே காலப் பிரமாணத்தில் 'க்ஷீர சாகர' தேவகாந்தாரியில். அதனைத் தொடர்ந்து இழைத்து இழைத்துப், மருந்துக்குக் கூட பிருகாக்கள் பக்கம் போகாமல் பாடிய சங்கராபரணம் அதனைத் தொடர்ந்த இன்னொரு இரண்டு களை பாடலான 'எந்துகு பெத்தல', என்று விளம்பத்துக்கு மேல் விளம்பமே அடுக்கினால் அடுக்குமா?

அரியக்குடியும், செம்மங்குடியும், ஜி.என்.பி-யும் (இன்னும் பல ஜாம்பவான்கள்), கச்சேரியில் 70% இட ஒதுக்கீடு மத்யம காலத்துக்குக் கொடுத்ததில் காரணமில்லாமல் இல்லை. அதி விளம்பமாக அமைந்திருக்கும் கீர்த்தனைகளில் கூட மத்யமா கால சரணங்கள் தீக்ஷதர் அமைத்திருப்பது எதனால்? ஜி.என்.பி தனது சங்கீத கலாநிதி ஏற்புரையில் மத்யம கால கீர்த்தனங்களின் முக்கியத்துவத்தைக் கூறும் போது வால்மீகி ராமாயணத்தில் சீதையை அனுமன் சந்தித்த இடத்தைக் குறிப்பிடுகிறார். சீதையிடம் பேசும் போது அனுமனின் குரல் அதிக சத்தமாகவும் அல்லாமல் குறைந்த ஒலியுடனும் அல்லாமல், அவரது பேசும் முறை அதிக வேகமாகவும் அல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் இருந்தது என்கிறாராம் வால்மீகி. இதுவே ஒரு சிறந்த கச்சேரிக்கும் உரிய இலக்கணமாகும் என்கிறார் ஜி.என்.பி.

பல்லவி முடிந்து துக்கடாவில்கூட 12 நிமிடத்துக்கு பைரவி ராகத்தை இழைத்த போது அரங்கைவிட்டு வெளியேறியவர்கள் ஏராளம். முன் சொன்ன உதாரணத்தின் படி பார்த்தால்கூட, வருடத்தில் எத்தனை முறை காரில் செல்வோம், எத்தனை முறை தேரின் மெதுவான ஆனால் கம்பீரமான ஓட்டத்தைக் காணச் செய்வோம் அல்லது எத்தனை முறை ஜெட்டில் செல்வோம் என்று பார்த்தால், மத்யம காலக் கிருதிகளுக்கு கிடைக்க வேண்டிய due என்ன என்பது தெளிவாகிவிடும். 'வேத சாஸ்த்ர தத்வார்தமு' என்ற இடத்தில் நிரவல் செய்த போது, முதல் சில ரவுண்டுகளுக்குப் பிறகு சில விறுவிறுப்பான சங்கதிகளூடன் பாடிய பொழுது அதற்குக் கிடைத்த அப்ளாஸுக்கு அவர் நன்றாக பாடியது மட்டும் காரணமல்ல என்பது என் அபிப்ராயம். சரி மீண்டும் கச்சேரிக்கு....

சங்கராபரண ராகத்தை படிப்படியாய், முதலில் காந்தாரத்தை மையமாக வைத்தும், பின்பு படிபடிப்படியாய் மேலேறி தார ஸ்தாயி ஷட்ஜமத்தில் நின்று கார்வைகள் கொடுத்து, அதன் பின், காம்போதி, சங்கராபரணம் போன்ற ராகங்களைப் பாடும் போது "இங்கே வா, வா" என்று அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கும் தார ஸ்தாயி காந்தாரத்திலும் நின்று அவர் உதிர்த்த முத்துக்கள் கணக்கிலடங்கா. மொத்தத்தில் சங்கராபரண ராகத்தின் சாரத்தைப் பிழிந்து ஒவ்வொரு ஸ்வரமும் ஜொலிக்கும் படி இழைத்து, ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்திற்குச் செல்லும் போது அந்த transition-ஐ காதலர்கள் பிரியும் போது பிரிவை எவ்வளவு தாமதப்படுத்துவார்களொ, அவ்வாறு இழைத்து இழைத்துப் பாடி அரங்கை இன்பத்தில் ஆழ்த்தினார். கிருஷ்ணா மேல் ஸ்தாயியில் இழைத்ததை எம்பார் கண்ணன் கீழ் ஸ்தாயியில் இழைத்தார். கீழிலிருந்து மேல் வரை சென்று மீண்டும் கீழே வந்ததும் எம்பார் கண்ணன் வாசித்த வேகமான பிரயோகங்களுக்கு பலத்த வரவேற்பு அமைந்தது. தன் லய விந்யாசங்களையெல்லாம் பல்லவி பாடும் போது காட்டிக் கொள்ளலாம். மற்றபடி கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது ராகத்தின் ஸ்வரூபம் வெளிப்படுத்துவது மட்டுமே பிரதானமாகக் கருது 'சர்வ லகுவாய்' ஸ்வரம் பாடியதும், தனது ஒவ்வொரு செய்கைக்குப் பின்னும் வயலினில் ரெஸ்பான்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தற்காகவும், கச்சேரியின் நடுவில் எழுந்த போக விரும்புவோற் பாட்லின் நடுவிலோ, தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தவுடனோ, மங்களம் ஆரம்பித்தவுடனோ செல்ல வேண்டாம், என்று கேட்டுக் கொண்டதற்காகவும் பல சபாஷ்கள் போடலாம். (அப்படியும் மங்களம் ஆரம்பித்தவுடன் கிளம்பிய கூட்டத்தைப் பார்த்து கடுப்பான கிருஷ்ணா "மங்களத்துக்கு மாத்திரம் உட்காருங்கோ-னு சொன்னேன். இரண்டு நிமிஷம் ஆகுமா?", என்ற போட்ட ஒரு மிரட்டலில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு எழுந்தவர்கள் எல்லாம் மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர்.) வயலினின் ஒரு ரெஸ்பான்ஸில் எம்பார் கண்ணன், மதுரை மணி ஐயர் தனதாக்கிக் கொண்ட 'க ம ப ம க; ரி க ச ரி க' என்ற இடத்தை வாசித்தது must have kindled nostalgia. அதனால் பல 'ஆஹாகாரங்கள்' புறப்பட்டன.

கல்பனை ஸ்வரங்களைத் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது. அன்று வாசித்த கஞ்சிரா கலைஞர் (கணேஷ் குமார்) புதிதாக இருகிறார் (ஹி ஹி எனக்கு புதிது. ஃபீல்டுக்கு சீனியராக இருக்கலாம்). ராக் ஸ்டார் தோற்றத்தில் இருக்கும் அவரின் கைகள் வேகமும் விவகாரமும் நிறைந்ததாக இருக்கின்றன. இரண்டு களை ஆதி தாளம்தான் அடிக்ண்டிக் கேட்கக் கிடைக்கும் தாளமாகினும், மிஸ்ரக் குறைப்பு கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அன்றுதான் நினைத்தேன். முதல் சில ரவுண்டுகளில் சதுஸ்ரமும், பின்பு திஸ்ர நடையும் வாசித்துவிட்டு, குறைப்பில் மிஸ்ர குறைப்பை வாசித்து என் ஏக்கம் நீங்கச் செய்யும் வகையில் தனி ஆவர்த்தனம் சௌக்கியமாக அமைந்தது.

விளம்ப காலம் கிருஷ்ணாவுக்கே அலுத்ததோ என்னமோ தெரியவில்லை நல்ல விறுவிறுப்பான வகையில் சுருட்டியில் ராகம் தானம் பல்லவி பாடினார். தானம் இன்னும் கூட பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் பாடிய வரையில் அற்புதமாகத்தான் இருந்தது. " ராமசந்திர தயாநிதே ஸ்ர்நிதே சுகுணநிதே" என்னும் பல்லவி சதுஸ்ர ஜம்பை தாளத்தில், முக்கால் இடம் தள்ளி அமைந்த எடுப்புடன் அமைந்திருந்தது. பல்லவியில் வழக்கமாய் நிகழ்த்தப்படும் நிரவல்,மூன்று கால்ப்பிரமாணங்களில் பாடுவது போன்ற விஷயங்களுக்குப் பின் ஸ்வரங்கள் பாடி ராகமாலிகையில் தன்யாசி, சஹானா, காபி ராகங்களை ஏதோ சடங்கு போலப் பாடாமல், அந்த ராகங்களைக் கேட்ட நிறைவை அளிக்கும் வகையில் பாடினார்.

post pallavi pieces-ஆக அதி விளம்ப பைரவியும், மத்யம கால பரஸும், துரித காலத்தில் கமாஸ் ராக தில்லானாவும் பாடி, மேற்கூரிய வகையில் மங்களமும் பாடி கச்சேரியை முடித்தார். போன வருடம் போல இக்கச்சேரியை 'My concert of the season' என்று நான் கூறம் வகையில் இல்லையெனினும், மிக மிக ரசிக்கும் வகையில் gimmick free, pure raga based concert-ஆக கச்சேரி அமைந்தது.

நேற்று இந்த கட்டுரையை எழுதி முடித்துவிட்டு காலையில் ஒரு கையில் காப்பியும் மறு கையில் ஹிந்துவும் கொண்டு நாளைத் தொடங்கிய போது கண்ணில் பட்ட விஷயம் கீழே:

இந்த கச்சேரியைப் பற்றிய விமர்சனம், நான் முன்பு கூறிய விமர்சகர் எஸ்.வி.கே எழுத, இன்றைய (27 dec) இந்துவில் வந்துள்ளது. பிருகாக்களை அரவே தவிர்த்து, விளம்ப காலமாகப் பாடி, தியாகராஜர் கிருதிகளை கணிசமான அளவு பாடினால் சாதகமான விமர்சனம்தான் எழுதுவார் என்று உலகறிந்ததே. இதில் வேடிக்கை என்னவென்றால் அதிசயமாய் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி ஒரு வரியோடு நிற்காமல், இன்னொரு வரியும் எழுதியுள்ளார். அதில்தான் வந்தது வினை, கச்சேரியில் கடமே இடம் பெறாத நிலையில், கணேஷ் குமாரின் கஞ்சிரா வாசிப்பு இவருக்கு மட்டும் எப்படி கடமாகக் கேட்டிருக்கும்? உண்மையில் கச்சேரியைக் கேட்டுதான் இவரைப் போன்றோர் விமர்சனம் செய்கிறார்களா அல்லது அவ்வப்பொழுது தலையைக் காட்டிவிட்டு எதையாவது இட்டு நிரப்புகிறார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 25, 2005

கொத்துப் பரோட்டா

19th Dec 2005 @ IFAS, OST, Mysore Manjunath, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam, 5.00 P.M

19-ஆம் தேதி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் என்னுடைய ஃபேவரிட் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜனின் கச்சேரி. அவரின் கச்சேரளைப் பற்றி 2003 மற்றும் 2004-இல் ஏற்கெனவே எழுதிவிட்டதால் (2003-ஐ மரத்தடியிலும், 2004-ஐ இந்த வலைப்பூவிலும் படிக்கலாம்), சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறிவிட்டு அடுத்த நாளுக்கு தாவி விடுகிறேன்.

19-ஆம் தேதி சென்னையை நனைத்த பலத்த மழைக்கு இடையிலும் கணிசமான ரசிகர்கள் அரங்கை நிறைத்திருந்தனர். கச்சேரியும் நேரத்துக்கு 'ஸ்ர் ரகுகுலவில்' தொடங்கியது. கச்சேரியில் வயலின் வாசிப்பதாக இருந்த டெல்லி சுந்தரராஜனுக்கு பதிலாக மைசூர் மஞ்சுநாத் அமர்ந்திருந்தார். (சுந்தரராஜன் அன்று ஏதோ விபத்தில் மாட்டிக் கொண்டாராம். அவர் விரைவில் தன் வில் வித்தையை காட்டும் வண்ணம் குணம் பெற பிரார்த்திப்போம்.) கச்சேரிக்கு முன் ஸ்ருதி கூட்டி உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கத்திலிருந்து இரண்டு 'சாப்பு' உதிர்ந்தவுடனேயே என்னை பொறுத்தவரையில், கச்சேரி களை கட்டிவிட்டது.

போன வருடம், அரங்கின் பின் வரிசையில் இருந்த தகர நாற்காலிகள் இழுபடும் ஓசை உண்டாக்கும் அவதியைக் கூறியிருந்தேன். அது அமைப்பாளர்கள் காதில் விழுந்தோ கண்ணின் பட்டதோ தெரியவில்லை. இம்முறை தகர நாற்காலிகளின் இடத்தில் அதிகம் அசைக்கமுடியாத, அதிகம் சத்தம் போடாத மர நாற்காலிகள் இடம் பெற்றிருந்தன. நம் குரல் காதில் விழும் என்னும் நம்பிக்கையில், அடுத்த வருடத்திற்கான கோரிக்கையாக, அரங்கின் தொலைபேசியை இடம் மாற்றக் கேட்டுக் கொள்வோம். அவ்வப் போது, அது அலறி, 30 ரூபாய் டிக்கெட் ஆசாமிகளின் கச்சேரி கேட்கும் சுகானுபத்தைக் கெடுத்த வண்ணமே இருக்கிறது. எந்த ஒரு call-ஐயும் 10 ' ட்ரிங்குக்கு' முன்னால் எடுக்கக்கூடாத என்ற விரதம் பூண்டிருக்கும் சபா செகரட்டரியின் (அவரது வேலை தொலைபேசுவதில்லாத போது, அப்பொறுப்பை வகிக்கும் நபர்) மனம் மாறவும் கோரிக்கை வைப்போம்.

முப்பது ரூபாய் டிக்கட் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது (I realise that my digressions are not only frequent but also seem get a higher share than the topic intended in the essay...well....). நான் டிசம்பர் சீஸன் கச்சேரிகளுக்கு போக ஆரம்பித்த நாட்களில் கையில் அத்தனை காசு புழங்காது. மாணவப் பருவத்தில் அவ்வப்போது கிடைக்கும் காசில்தான் கச்சேரிக்குச் செல்வது, காஸெட் வாங்குவது எல்லாம். அப்பொழுது எல்லாம் எனக்கு 'stage ticket' பெரிதும் உதவியது. மியூசிக் அகாடமியில் ஐந்து ரூபாய்க்கு 'stage ticket' வாங்கினால், ஒரு நாள் முழுக்க இசையில் முங்கலாம். காலை நேர ஃப்ரீ கச்சேரிகளுக்குப் பின் ஐந்து ரூபாய் டிக்கட்டில் இரண்டு ப்ரைம் டைம் கச்சேரிகளையும் கேட்கலாம். இப்பொழுது கிருஷ்ண கான சபா முதலான சபாக்களில் ஸ்டேஜ் டெக்கட்டே ஐம்பது ரூபாய். இப்பொழுது அதிர்ஷ்ட வசமாக, என் நிலை அவர்கள் 200 ரூபாய்க்கு ஸ்டேஜ் டிக்கெட் விற்றாலும், ஹால் டிக்கட் (பரிட்சை ஹால் டிக்கெட் இல்லை, இது ஹாலில் அமர்ந்து கேட்கக் கொடுக்கும் ஹால் டிக்கெட்;-) வாங்கக்கூடிய நிலையில் இருப்பதால் பிரச்சனையில்லை. உடைந்த மரநாற்காலிகளும், கீற்றுக் கொட்டகையுமாய் இருந்த கிருஷ்ண கான சபா, இன்று அற்புதமாய் மாறி, நல்ல acoustics-உடன் இருக்கும் போது விலை ஏற்றம் நியாயமானதே. நூறு ரூபாய் டிக்கெட்டை பொருட்படுத்தாமல் ஹால் டிக்கெட் வாங்க, IT industry இளைஞர்களும் அவர்கள் பெற்றோர்களும், என்.ஆர்.ஐ-க்களும் இருக்கிறார்கள். என்னுடைய கவலையெல்லாம், நான் மாணவனாக இருந்த போது கச்சேரி கேட்க தோதாய் இருந்த ஸ்டேஜ் டிக்கெட்டின் மேல்தான். இதனால் எத்தனை பேருக்கு நல்ல கச்சேரி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமோ தெரியவில்லை. ஆனால், இன்றைய மாணவர்களைப் பற்றியும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. கல்லூரி முடித்து ஐந்து வருடங்களுக்குள் எனக்கும், கல்லூரிக்குள் இப்பொழுது மாணவர்களுக்கும் இடையிலேயேகூட ஏதோ பெரிய ஜெனரேஷன் கேப் இருப்பதாகத் தோன்றுகிறது. சைக்களில் பல கிலோமீட்டர்களை அனாயாசமாக கடந்த நாட்களே என் பள்ளிப் பருவத்தையும் கல்லூரிப் பருவத்தையும் நிறைத்தன. இப்பொழுது அத்தனை மாணவரும் குறைந்த பட்சம் மொபெட், கையில் செல் ஃபோன் என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ஐந்து ரூபாய் ஸ்டேஜ் டிக்கெட்டுக்கும் ஐம்பது ரூபாய் ஸ்டேஜ் டிக்கெட்டுக்கும் வித்தியாசம் தெரியுமோ தெரிய்வில்லை. அப்படி வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் சபாக்கள் ஸ்டூடண்ட் டிஸ்கௌண்ட் கொடுக்கலாம். (அமெரிக்க அருங்காட்சியகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களில் எல்லாம் மாணவ அடையாள அட்டைக்கு கணிசமான டிஸ்கௌண்ட் கிடைக்கும். எது எதுக்கோ அமெரிக்காவை காப்பி அடிக்கும் நாம்,புபயோகமாய் இருக்குமெனில், இது போன்ற விஷயங்களில் காப்பி அடித்தால் தவிறில்லை)

ஜெயந்தி குமரேஷின் கச்சேரியில் தியாகராஜரின் கிருதி ஒன்று கூட இல்லாத போதும் நன்றாக இருந்தது என்று கூறியிருந்தேன். இக்கச்சேரியில் துக்கடாவுக்கு முன் பாடப் பெற்ற அனைத்து கிருதிகளுமே தியாகராஜரின் கீர்த்தனைகள்தான். ஜெயந்தி செய்தது போன்று சொற்பமான கச்சேரிகள்தான் செய்ய முடியும். ஓ.எஸ்.டி செய்ததைப் போல நூறு கச்சேரிகளாவது செய்யலாம். அதற்கான காரணம் (அடுத்த digression), தியாகராஜர் எண்ணற்ற ராகங்களின் நூற்றுக் கணக்கான கீர்த்தனைகள் செய்திருப்பது மட்டுமல்ல. சீர்காழி மூவரும் கூட அத்தனை கீர்த்தனைகள் செய்திருக்கலாம். தியாகராஜரின் கீர்த்தனைகள், அவர் எப்படிச் செய்தாரோ அதே நிலையில் நொடேஷனுடன், சங்கதிகளுடன் கிடைக்கிறது. தியாகராஜருக்கு இருந்த எண்ணற்ற சிஷ்யர்கள் அவர் கீர்த்தனைகளைக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததும், அவருக்கு அடுத்த தலைமுறைக்குள்ளேயே the transition from composers to performers, அதாவது சமஸ்தானங்களில் வித்தையைக் காட்டும் வகையில் இருந்த இசை, மக்கள் மத்தியில் பாடப் பெற்ற, மக்களின் முக்கியமான பொழுது போக்காக மாற ஆரம்பித்த காலம், trinity என்றழைக்கப் படும் தியாகராஜர், தீகஷதர், ஷ்யாமா சாஸ்திரி, வாழ்ந்த தலைமுறை வாழ்ந்த காலமாகும். (தமிழில் இசைப்பாட முடியாது. தமிழில் நல்ல பாட்டில்லை என்று கூறும் கோஷ்டி என்று மேல் தவறான முத்திரையை இவ்வரிகள் குத்திவிடாது என்று நம்புகிறேன்.) சரி மீண்டும் கச்சேரிக்கு...

'சேரராவ' ரீதிகௌளையில் மலர்ந்த அரிய கிருதியாகும். கல்யாணி ராகம் விரிவாகப் பாட ஏற்ற ராகமெனினும், இரண்டு பிரதான உருப்படிகளுக்கிடையில் விறிவிறுப்பான உருப்படி ஒன்றை பாட எற்ற ராகமாகவும் பலர் அதை உபயோகித்திருக்கின்றனர். உதாரணமாக, ஆலத்தூர் சகோதரர்கள் 'அம்ம ராவம்மா'-வையும், செம்மங்குடி 'பிரான வராலிச்சி'-யையும் பாடி கச்சேரியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஓ.எஸ்.டி கல்யாணியில் சில மின்னல் வெட்டுக்கள் வெட்டி ஆலாபனையை முடித்ததும் நான் எதிர்பார்த்தது, இவ்விரண்டு கீர்த்தனங்களில் ஒன்றைத்தான். அவர் தேர்ந்திடுத்ததோ, தியாகராஜரின் மற்றொரு கிருதியான 'ஈச பாஹிமாம்' என்பதை. இரண்டாம் கால கல்பனை ஸ்வரங்களில் சிவராமனின் anticipation-உம், ஸ்வரங்களை 'ஈஸ' மற்றும் 'ஜகதீஸ' என்ற இடங்களில் மாறி மாறி முடித்தும் பாடிய விதமும், சிவராமனின் பாராட்டை மீண்டும் மீண்டும் பெற்றபடி வாசித்த மஞ்சுநாதின் வாசிப்பும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

கல்யாணியைத் தொடர்ந்து, பிரதான ராகமாக மத்யமாவதியை ஆலாபனை செய்தார். 2003-இல் பனி பாடகர்களைப் படுத்திய பாட்டை இந்த வருடம் மழை செய்யுமோ என்று அச்சம் என்னுள் இருந்தது. மழை அத்தனை மோசம் செய்யவில்லை. பாடகர்களின் குரல்கள் நல்ல நிலையிலேயே இருக்கிறது. அதனால், ஸ்ருதியிலிருந்து இம்மி பிசகா வண்ணம் ஓ.எஸ்.டி கொடுத்த கார்வைகளும், பிருகாக்களும், ஆலாபனையில் செய்த ஸ்ருதி பேதமும் (the shift was to hindholam) மத்யமாவதியின் அழகை நிறைவாக வெளிப்படுத்தின. மத்யமாவதி main item என்றால் கீர்த்தனை 'பாலிந்த்ஸு காமாட்சி' அல்லது 'ராம கதா'-வாகத்தான் பெரும்பாலும் இருக்கும். தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற காலப் பிரமாணத்தில் அமைந்த கீர்த்தனைகளான இவற்றுள் இரண்டாவதை ஓ.எஸ்.டி தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அனுபல்லவியில் நிரவலும் , கல்பனை ஸ்வரங்களும் பாடிய பின் தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது.

இப்பொழுதும் தனி ஆவர்தனத்தில் அரங்கை விட்டு வெளியே செல்லும் கூட்டம் பல இடங்களில் தென்பட்டாலும், உமையாள்புரம், திருச்சி சங்கரன் போன்றோர் வாசிக்கும் இடங்களில் சொற்பமான மக்களே இந்த வெட்கத்துக்குரிய செயலைச் செய்கின்றனர் (அவர்கள் அமர்ந்திருப்பது ஆர்வத்திலா மரியாதையிலா என்று நாமறியோம்). கீர்த்தனைகளுக்கு வாசிக்காமல், உடன் பாடிய உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கம் சில ரவுண்டுகளுக்கு அதற்கே உரிய 'சாப்பு' மாத்திரம் 'தாம் தாம் தாம்' என்று வெளிப்படுத்தி 'தனியின்' தனித்தன்மையை கட்டியம் கூறியது. அதன்பின் சதுஸ்ர நடையில் வாசித்த விஷயங்களும், அவ்வப்பொழுது 'தொப்பி' பக்கத்தில் இதமாய் எழுப்பப்பட்ட இனிய ஒலிகளும், பின்பு நிக்ழ்ந்த கதி பேதமும், அதில் கண்ட நடையில் வாசித்த மான்குட்டி பாய்ச்சல்களும் வார்த்தைகளூக்கு அப்பாற்பட்டவை. ஈ.எம்.சுப்ரமணியம் (கடம்), சிவராமன் அமைத்துக் கொடுத்த பாதையை அழகாகத் தொடர்ந்து அழகுக்கு அழகு சேர்த்தார்.

தனியைத் தொடர்ந்த துக்கடாக்களில் கே.வி.என் பிரபலப்படுத்திய அற்புதமான பாகேஸ்ரி பாடலான 'சாகர சயன விபோ'-வுக்கு முதல் இடம் (இப்பாடல் பிரபல வித்வான், எம்.டி.ராமநாதனின் படைப்பாகும், பல நாட்களுக்கு, இப்பாடலின் வரும் 'பத்மநாப' முத்திரையால் ஸ்வாதிதிருநாள் சாஹித்யம் என்று நினைத்திருந்தேன்!!!) கொடுக்கலாம் என்றாலும், ஜி.என்.பி-யை நினைவுபடுத்திய, சுத்தாநந்த பாரதியின் 'காரணம் கேட்டு வாடி' மற்றும் 'சரவண பவ என்னும் திருமந்திரம்' பாடல்களும் not far behind. துக்கடா என்றாலே காபி, சிந்து பைரவி, ரேவதி, கமாஸ் என்று ஆகிவிட்ட நிலையில், ஓ.எஸ்.டி பூர்விகல்யாணி, ஷண்முகப்ரியா போன்ற பாகங்களைப் பாடியது was a welcome change.

சுருக்கமாய் எழுதுகிறேன் பேர்வழி என்று 'திண்ணை அரட்டை' போல வளவளத்துவிட்டேன்:-)...மற்றவை அடுத்த பதிவில்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 24, 2005

செம்மங்குடி வழியில்....

18-ஆம் தேதி காலை வானம், சில சமயம் பளீர் வெளிச்சம் கக்கும் வெய்யிலுடனும், அடுத்த கணத்திலேயே அடை மழையை பொழிந்தபடியும், சென்னை கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. நான் ம்யூசிக் அகாடமிக்கு கிளம்பிய வேளையில் மழை இல்லையெனினும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் 'கல்பத்ருமா' அருகில் ஆரம்பித்த அடை மழை, ம்யூசிக் அகாடமியை அடைவதற்குள் பேயாட்டம் ஆடி "உனக்கும் பெப்பே உன் ரெயின் கோட்டுக்கும் பெப்பே", என்றது. மழையைப் பொருட்படுத்தாமல் நேரத்துக்கு போய்ச் சேர்ந்த பொழுது 12.45 கச்சேரிக்கும், ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னமோ, ஓரளவு கூட்டம் இருந்தது. (சஞ்சய் சுப்ரமணியம், அருண் பிரகாஷ், வரதராஜன் போன்ற முன்னணி வித்வான்கள் சிலர் கச்சேரி முழுவதும் அமர்ந்து இருந்தது, வளரும் கலைஞருக்கு நல்ல உற்சாகத்தை அளித்திருக்கும்).

ஒரு கச்சேரியை பல விதமாக தொடங்கலாம். இதில் tried and tested methods எனப்படுவது யாதெனில் வர்ணத்தில் தொடங்குவது அல்லது விநாயகர் மேல் அமைந்த மத்யம கால கிருதியில் தொடங்குவது. அப்படி இல்லாமலும் சிலர் கச்சேரியைத் தொடங்கி அதை களை கட்டவைப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். ரக்தி ராகமான சஹானாவில் "ஈ வசுதா நீவண்டி' என்ற கோவூர் சுந்தரேசர் மேல் தியாகராஜர் இயற்றிய கிருதியில், எனக்கு தெரிந்தவரை, ஜி.என்.பி கச்சேரிகளைத் தொடங்கியிருக்கிறார். அதே கிருதியைத்தான் சேலம் ஸ்ர்ராமும் கச்சேரியைத் தொடங்க தேர்வு செய்திருந்தார். பாவமும், விறுவிறுப்பும் கலந்து மத்யம காலப்ரமாணத்தில் கீர்த்தனையைப் பாடி, கல்ப்னை ஸ்வரங்கள் பாடிய பொழுது கச்சேரி களைகட்டிவிட்டது.

ஒன்றரை மணி நேரக் கச்சேரியில் இரண்டாவது உருப்படியையே சப்-மெய்னாகக் கொண்டால்தானே நிறைவான கச்சேரியை அளிக்க முடியும். வராளியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார் ஸ்ர்ராம். ஆலாபனையில் அழகிய கார்வைகள், சில ஸ்வரங்களை மையமாக நிறுத்தி அதனைச் சுற்றி நாதஸ்வர பாணியில் பாடுதல், ஜீவ ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ராகத்துக்குரிய கமகங்களை தெளிவாக வெளிப்படுத்துதல் (உதாரணமாக வராளியின் காந்தாரம்) போன்ற வி்ஷயங்கள் பெரிதும் ரசிக்கும்படி இருந்தது. ஆலாபனையில் அகாரங்களில் பாடிய அளவு இகாரமும் ஒலித்தது. இவரின் இகாரம் சமயத்தில் 'ஹிகாரமாக' மாறி செம்மங்குடியை நினைவுறுத்தினாலும், நறுக்குத் தெரித்தாற் போல் விழும் பிருகாக்கள் அகாரத்தில் இருக்கலாமே என்றுதான் தோன்றியது. செம்மங்குடியின் இசையின் தனிச் சிறப்பு அவரது ஆலாபனையில் பொதிந்து இருந்து விவகாரங்களின் இருக்கின்றதே தவிர அவர் உபயோகித்த இகாரங்களில் அல்ல. செம்மங்குடி, தனது குரலைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி உலகறிந்ததே. சாரீர சம்பத்து நிறைவாக இல்லாத நிலையில், செம்மங்குடி தன் உழைப்பாலும் கற்பனையாலும் விளைந்த அழகிய கோவைகளை வெளிப்படுத்த தனக்கேவுரிய முறையைக் கையாண்டார். அவர் செய்த கோவைகளை inspiration-ஆக கொள்வதில் நன்மை விளையும் என்பதில் ஐயமில்லை எனினும், அதை வெளிப்படுத்திய முறையை imitate செய்வதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் "மாமவ மீனாக்்ஷி" என்ற கனமான கிருதி விஸ்தாரமான ஆலாபனையைத் தொடர நல்ல தேர்வு. வராளி ஆலாபனை, நிரவல், ஸ்வரங்கள் அனைத்திலும் பக்க வாத்தியங்கள் 'பக்கா வாத்தியங்களாய்' விளங்கின. நிரவல், ஸ்வரம் மற்றும் தானம் பாடிய பெழுது, அந்தந்த வி்ஷயங்களின் உச்சகட்டமாய் பாடப்பட்ட இடங்களுக்குப் பின் வயலினுக்கு வாய்ப்பளிக்காமல் தவிர்த்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. பல வருடங்கள் சீனியராக இருந்த போதும் அரியக்குடி போன்ற ஜாம்பவான்கள் லால்குடி போன்றவர்களுக்கு சம வாய்ப்பு அளித்ததை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

வராளியில் செம்மங்குடியை நினைவு படுத்திய ஸ்ர்ராம், 'மாருபல்க'-வைத் தொடங்கியதும் அரங்கெங்கும் அவர் நினைவு பெருகுவதை அங்கு கிளம்பிய 'ஆஹாகாரங்களிலிருந்தும்', 'சிரக்கம்பங்களிலிருந்தும்' உணர முடிந்தது. அரபிய குதிரையில் சவாரி செய்வதற்கு ஒத்த "patended semmangudi" சங்கதிகளைத் தொடர்ந்து, அவர் நிரவலுக்குத் தேர்ந்துடுக்கும் 'தாரி நெரிகி'-யில் நிரவல் செய்தார். கல்பனை ஸ்வரங்களை சாஹித்யத்தில் முடிக்கும் விதம்கூட சங்கீத பிதாமகரை நினைவுபடுத்தும் வகையிலேயே இருந்தது. எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல் போல கீர்த்தனையை (infact the entire concert) நடத்திச் சென்ற விதம் பாராட்டுக்குரியது. அம்மன்குடி ராமநாரயணனின் மிருதங்க வாசிப்புக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு. இவர் சங்கதிகளை anticipate செய்த விதம் அற்புதமாய் இருந்தது.

மாருபல்க முடிந்த போது கச்சேரியை முடிக்க 50 நிமிடமே இருந்த நிலையில் முதல் இழையிலேயே சங்கராபணத்தைக் காட்டி, அதையே பிரதான ராகமாக ஆலாபனை செய்தார். ஆலாபனை செய்வதில் பல முறைகள் உண்டு. ராகத்தின் எல்லா ஸ்வரங்களை கோடி காட்டிவிட்டு பின்பு ஒவ்வொரு இடமாய் அலசி ஆராய்வது ஒரு வகையெனில், கீழ் ஸ்தாயியில் தொடங்கி, படிப் படியாய் ராகத்தை விரியச் செய்து, ராகம் விரிய விரிய ஸ்தாயியை மேல் நோக்கிச் செலுத்துவது என்பது வேறு வகை. ஸ்ர்ராம் இரண்டாவது வகையைக் கையாண்டார். விறுவிறுப்பான பிடிகளும், கமகத்தை வெளிப்படுத்தும் அழகான கோவைகளும் கலந்து அளித்த போது அரங்கம் அதிர்ந்தது. அழகிய ராகப் பிரவாகமான சங்கராபரணத்தை எங்கு தொடங்கி எங்கு வளர்ப்பது என்று சற்று தடுமாறியது போல இருந்தது வயலின் வித்வான் விஜயின் தொடக்கம். Initial hiccups தாண்டியதும் அவரும் இழைத்து இழைத்து சங்கரபரணத்தின் சௌந்தரியத்தை அரங்கிற்குக் காட்டினார். விஸ்தாரமான ஆலாபனையைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பாணியில், மிருதங்கத்துடன் தானம் பாடியது, கீர்த்தனையை எதிர்ப்பார்த்திருந்த என்னை ஆச்சரியப்படுத்தியது. விறுவிறுப்பான மத்யம கால தானத்துக்குப் பின் ரூபக தாளத்தில் அமைந்த எளிமையான "மஹிம தெலிய தரமா" பல்லவியைப் பாடினார். அவர் செய்த விரிவான ஆலாபனைக்கு "எந்துகு பெத்தல", 'சரோஜ தள நேத்ரி' போன்ற கீர்த்தனைகள் எடுப்பான தொடர்ச்சியாய் இருந்திருக்கும். அக்கீர்த்தனைகளுக்கு முழு justice செய்ய நேரம் பற்றாமல் இருந்திருக்கும் எனினும், ஐந்து நிமிடம் பாடிய தானத்தை தவிர்த்த்¢ருந்தால் நேரம் இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஒரு களை பல்லவிகள், பிரதான ராகம் பாடிய பின் பாடப் படும் பொழுது short and sweet-ஆக இருக்கும். பிரதான ராகமாக பாடும் பொழுது இரண்டு களை சவுக்கம் would be a better choice. பல்லவியில் நிரவல் செய்து ஸ்வரப்ரஸ்தாரம் செய்தபின் தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது. ஐந்து நிமிடத்துக்குள் காம்பேக்டாக ரூபக தாளத்தில் கொஞ்சம் திஸ்ர கதி கலந்து ராமநாரயணன் வாசித்த தனி கச்சிதமாய் இருந்தது.

post main pieces-ஆக அன்றைய தினத்துக்குரிய திருப்பாவையும், பூர்ணசந்த்ரிகா தில்லானாவும், காபி ராகத்தில் ஸ்லோகமும் துரிதமாக பாடி முடிக்கவும் மணி 2.15 ஆகவும் சரியாக இருந்தது. திருப்பாவையில் 'சாற்றி', 'பசுக்கள்' போன்ற வார்த்தைகளை "்ஷாற்றி", "ப்ஷுக்கள்" என்றும் எல்லோரும் பாடுவது போலவே பாடினார்.

மொத்ததில் கச்சேரி மிக விறுவிறுப்பாக மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இப்படிப்பட்ட கச்சேரியைப் பற்றி எழுதும் பொழுது, எனக்கு ரசிக்கும்படி இருந்த வி்ஷயங்களை குறிக்கும் தொடர்களைவிட எனக்கு குறையாகப் பட்ட வி்ஷயங்களே கட்டுரையில் மலிந்து கிடக்கும் காரணத்தை கொஞ்சம் யோசித்துப் பார்த்த போது தோன்றியது:

ஒரு இனிப்பு பிடிக்கவில்லை என்றால் 'சர்க்கரை அதிகம். திகட்டுகிறது.', 'பாகு கொஞ்சம் அதிகமாகி கெட்டியாகிவிட்டது', 'அரை நொடி முன்னால் எடுத்து இருந்தால் குலாப் ஜாமூன் இன்னும் மிருதுவா இருந்திருக்கும்' என்று ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். நன்றாக இருந்தால், பல சமயம் ஏன் நன்றாக இருக்கிறது என்று நமக்கு விளங்குவதேயில்லை. 'இத்தனை சிட்டிகை சர்க்கரை போட்டு, இத்தனை நேரம் அடுப்பில் வைத்து, இன்ன இன்ன மாதிரி செய்ததால் ஸ்வீட் நன்றாக இருந்தது', என்று ஸ்வீட்டை சாப்பிட்ட யாரும் கூறுவது கடினம். ஸ்வீட் கடைக்காரரைப் போலத்தான் பாடகர்களும், ஏதாவது குறைந்தால் கேட்பவருக்கு விளக்க வருமே தவிர, நன்றாக இருப்பின் "இதனால்தான் நன்றாக இருந்தது" என்று கூறுவது பல சமயங்களில் கடினமான காரியம். அதனால், எனக்கு நினைவில் நின்றவரை 'இன்ன இன்ன செய்தார்' என்பதை கூற முயல்கிறேன். பல சமயம் அம்முயற்சி தோல்வியிலேயே முடிகிறது:-).....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 23, 2005

சில எண்ணங்கள்...

18-ஆம் தேதி அனுபவங்களுக்குச் செல்லும் முன்னால் சில வி்ஷயங்கள்:


சீசனின் போது தினமும் அனைத்து சபாக்களிலும் விநியோகம் ஆகும் katcheribuzz.com கொடுக்கும் இரண்டு பக்க (நான்கு பக்கங்களை ஏன் இரண்டாக்கிவிட்டார்கள்?) சங்கீதக் கலவைக்கு பயங்கர டிமாண்ட். பல சமயங்களில் கச்சேரி முடிந்து வெளியில் வந்து பார்த்தால் அனைத்தும் தீர்த்து விடுகிறது. அண்ணாசாலை போஸ்ட் ஆபீஸில் எம்.எஸ்-இன் நினைவாய் வெளியான அஞ்சல் தலை கிடைக்கும் என்ற செய்தியை போட்ட kutcheribuzz-க்கு நன்றி. ஒருநாள் சென்று வாங்க வேண்டும்.


சீசனுக்கு பலத்த கவரேஜ் கொடுக்கும் ஹிந்து பத்திரிகையிலும் மாற்றங்கள். வெள்ளிக்கிழமை சப்ளிமெண்ட் டிசம்பரின் மாத்திரம் பல பக்கங்களுக்கு நீளும். பல விமர்சகர்கள் நகரெங்கும் நடக்கும் சபாக்களில் நடக்கும் கச்சேரிகளைப் பற்றி எழுதுவார்கள். இந்த வருடம் வெள்ளிக்கிழமைக்காக காத்திராமல், இந்த வாரத்திலேயே இரண்டு சிறப்பு சப்ளிமெண்ட் அளித்திருக்கிறார்கள் (புதன்கிழமைக்குள்). வழக்கமாய் வரும் விமர்சனங்கள் தவிர சில சுவாரசியமான பகுதிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவற்றில் ஒன்று இசைக் கலைஞரின் பார்வையில் இசை விழாவைப் பற்றி "My Festival" என்ற பகுதி. அதில் டி.எம்.கிருஷ்ணா கூறியிருக்கும் கருத்து முக்கியமானது. "உலகில் வேறு எங்குமே நடக்காத இசைத் திருவிழாவாக பல ஆண்டுகளாய் நடக்கும் டிசம்பர் இசை விழாவை நன்கு விளம்பரப் படுத்தி சென்னை நகரின் சார்பாக 'லான்ச்' செய்தல் அவசியம். அனைத்து சபாக்களும் சேர்ந்துகூட இதைச் செய்யலாம் என்கிறார். இப்படிப்பட்ட இசை உற்சவம் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருப்பதை இன்னும் நன்றாக உலகளவில் எட்டச் செய்யலாம். அவர் கூறியிருக்கும் இன்னொரு வி்ஷயம் அரங்குகளில் இருக்கும் ஆடியோ சிஸ்டத்தைப் பற்றியது. பல அரங்குகளில் ஒழுங்காக மைக் பேலன்ஸ் ஆவதற்குள் பாதி கச்சேரி முடிந்துவிடுகிறது. பரத் கலாசார் போன்ற ஓபன் ஏர் ஆடிடோரியங்கள் (இதை ஆடிடோரியம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஒரு மேடைக்கு முன்னால் ்ஷாமியானாவைப் போட்டு சேரை அடுக்கியிருக்கிறார்கள். ஆரம்பித்த புதிதில் வேண்டுமானால் அரங்கு கட்டுவது கடினமாக இருந்திருக்கலாம். ஆரம்பித்து பல வருடங்களாகி, பல நல்ல சபாக்களுக்கு சற்றும் குறையாமல் (சில சமயம் அதிகமாய்) பணம் வசூலிக்கும் பரத் கலாசார் ரசிகர்களையும் கொஞ்சம் மனதில் கொள்ளலாம். 18-ஆம் தேதி மாலை பெய்த மழையில் தண்ணீர் பல இடங்களில் ஒழுகியது.), வாகனச் சத்தம் அதிகம் கேட்கும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற இடங்களில் ஆடியோ சிஸ்டம் மாறினால் பாடகர்களுக்கு பாடும் அனுபவமும், கேட்பவர்களுக்கு ரசிக்கும் அனுபவமும் இன்னும் உயர்வாய் அமையும்.


பரத் கலாசாரில் நடந்த மேற்கூறிய கச்சேரியில், ச்ஷாங்கைப் புகழ்ந்து பேசியவர் "வருடத்திற்கு வருடம் திருவிக்கிரம அவதாரம் போல ச்ஷாங்கின் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகிறது...blablabla...", என்ற போது, அரியக்குடியைப் பற்றிய anec-dote-தான் நினைவிற்கு வந்தது. அரியக்குடியிடம் ஒரு ரசிகர்/போ்ஷகர் (patron) "போன வரு்ஷத்தைவிட இந்த வருடம் உங்க சங்கீதம் நல்ல விருத்தி அடைஞ்சிருக்கு" என்றாராம். அதற்கு அரியக்குடியின் பதில், "இவ்விடத்தில் வித்தை அப்படியேதான் இருக்கு அவ்விடத்தில்தான் கேட்கும் ஞானம் விருத்தி அகியிருக்கு", என்றாராம்.


Back on track to The Hindu Suppliment....


ஹிந்து (சில) விமர்சனங்கள் படிக்கும் போது எழும் சில கேள்விகள் (கௌரி ராம்நாரயண், சுலோசனா பட்டாபிராமன், லலிதா கிருஷ்ணன் போன்றோரின் விமர்சனங்கள் தெளிவான கருத்துக்களுடனேயே இருக்கின்றன. பின் வரும் என் கேள்விகள் மற்ற "எங்க ஆத்து விமர்சகரும் கச்சேரிக்கு போனார்" வகை விமர்சகர்களுக்கு)....


"Violin support was just adequate", "Radha Sundaresan on the violin provided satisfactory accompaniment", என்ற வரிகளில் adequate, satisfactory-க்கு எல்லாம் என்ன அளவுகோல்? "Kumbakonam Ramakrishnan and Rangachari rendered a brief thani", என்பதைத் தவிர அவர்கள் வாசிப்பில் சொல்ல ஏதும் வி்ஷயம் இல்லையா? "It contained all the good elements of the raga swaroopa along with good imagination", ராக ஸ்வரூபத்தை வெளிக் கொணர்வதும், பாடகரின் கற்பனை வளத்தைக் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? "Her raga alapana and kalpanaswaras are worthy of mention" (அந்த கச்சேரியைப் பற்றிய விமர்சகரின் கருத்து என்பது அந்த வரிதான், சாஸ்திரத்துக்கு அக்கச்சேரியில் பாடிய பாடல்களுள் ஒன்று இரண்டை குணாவில் கமல் "மானே தேனே பொன்மானே" என்று தூவுவது போலத் தூவிவிட வேண்டியதுதான். தயாராகிவிட்டது ஓர் பதிப்பிற்குரிய விமர்சனம்!!!) என்று கூறும் அதே 10 வரி கட்டுரையில் இன்னொரு கச்சேரியை "sruthi and layam of US based xyz - disciple of abc - were not upto the mark" என்று கூறிவிட்டு அடுத்த கச்சேரியைப் பற்றி தனது அபிப்ராயத்தைக் (அபிப்ராயம் என்று நினைத்து இவர்கள் எழுதுவதில்லை. judgemental -ஆக, தக்க காரணம் ஏதும் கூறாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவதே இவர்கள் வழக்கமாய் இருக்கிறது.) கூறுகிறார். ஸ்ருதியும் லயமும் சரியில்லாத கச்சேரியை வேலை மெனக்கெட்டு விமர்சனம் செய்து, பாடியவரின் குருவையும் சடுதியில் இழுத்து....இது எல்லாம் தேவையா? இன்ன கச்சேரி இன்ன இன்ன காரணங்களால் "எனக்குப்" பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்று கூறுவது விமர்சனத்திற்கு மிக்க அவசியம். முந்தைய வாக்கியத்தின் கீ-வோர்டு "எனக்கு". நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் செய்யும் கச்சேரியில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அது கேட்பவரின் அனுபவம். நன்றாக இல்லை என்று கூறும் போதுதான் அதன் காரணங்களை பட்டியலிட வேண்டியது அவசியம் ஆகிறது. குறிப்பாக ஹிந்துவில் தொடர்ந்து விமர்சனம் செய்யும் எஸ்.வி.கெ, தன் தலையில் தானே அட்சதையைப் போட்டுக் கொண்டவர் என்று கூறுவார்களே, அந்த ரக விமர்சகர்களில் முதல் இடம் வகிப்பவர். விட்டால் விகடன் சினிமாவுக்கு மார்க் அளிப்பது போல் மார்க்கெல்லாம் போட்டு இவர் பாஸ் இவர் ஃபெயில் என்று கூறினாலும் கூறுவார். எப்படி ஐயா மார்க் போடுகிறீர்கள் என்று யார் அவரைக் கேட்பது? (நல்ல காலம் அவர் விமர்சனம் புதன்கிழமை சப்ளிமெண்டில் வரவில்லை)


சரி, நமக்கு ஏன் வீண் வம்பு. யாரோ எப்படியோ போகட்டும். என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே நேரம் (இதனால் சொல்லாமல் சொல்லிக் கொள்வது யாதெனில் இக்கட்டுரைகள் விமர்சனங்கள் அல்ல. என் எண்ணங்களே. என் எண்ணங்கள் ஏன் உதித்தன என்பதை யோசிக்கும் பொழுது தக்க பதில் உதித்தால் எழுதுகிறேன், இல்லையேல் அவ்வெண்ணத்தைச் சொல்லாமல் விட்டுவிடுவதே க்்ஷேமம் என்று விட்டுவிடுகிறேன்) பற்றாத இக்கணத்தில் விமர்சனங்களுக்கு விமர்சனம் எழுதுவது அவசியம் இல்லாததால் நாம் சேலத்தில் அவதரித்து இருக்கும் செம்மங்குடி வாரிசைப் பற்றி (அடுத்த பதிவில்) எழுதுகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 22, 2005

முதல் நாள் புராணம் - மூன்றாவது நாளாக

Malladi Brothers @ Brahma Gana Sabha, 17/12/05

மழை நன்றாக பெய்து கொண்டிருந்து போதும் மல்லாடி சகோதரர்களின் கச்சேரிக்கு கணிசமான அளவில் கூட்டம் வந்திருந்தது. இவர்களின் கச்சேரியை போன முறையே முத்ராவில் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் (நாலு மணி நேர கச்சேரியில் உமையாள்புரக்காரருடன் சேர்ந்து கலக்கினார்களாம்!), தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. மைசூர் மஞ்சுநாதும், திருச்சி சங்கரனும் பக்க வாத்யம் வாசிக்கிறார்கள் என்பதைப் பார்த்ததும், எந்த கச்சேரிக்கு செல்வது என்று ஹிந்துவின் நான்காம் பக்கத்தை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் போராடும் இன்ப அவஸ்தை இல்லாமல் போனது.

6.40-க்கு தோடியை சிறிய கீற்றாகக் காட்டி "ஏரா நாபை" வர்ணத்தை இரண்டு காலப்பிரமாணங்களில் பாடி கச்சேரியைத் தொடங்கினார்கள். இந்த வர்ணத்தில்தான் தோடியின் ஸ்வரூபத்தை எத்தனை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்! எத்தனை விதமான பரிமாணங்கள்! ்ஷட்ஜமம் மற்றும் பஞ்சமத்தை வர்ஜமாக்கி (அதாவது இல்லாமல் ஆக்கி) எத்தனை பிரயோகங்கள்! புதுக்கோட்டை பாணி மிருதங்க வாசிப்பில் முதன்மை வித்வானாகிய திருச்சி சங்கரனின் கரங்கள் அழகான வர்ணத்தை இன்னும் மெருகேற்றின. பாடகர் கீர்த்தனை பாடும் பொழுது, பெரும்பாலும் அனுபல்லவியில் மற்றும் சரணங்களில் கார்வைகள் கொடுப்பார், அக்கார்வைகளை இன்னும் மிளிரச் செய்யும் பொருட்டு சில சொற்கட்டுகளை மிருதங்கக்காரர் வாசிப்பார். அதில் சிலவற்றை 'டேக்கா கொடுப்பது' என்று குறிப்பிடுவது உண்டு. சங்கரனின் தனிச் சிறப்பு அவரது 'டேக்கா சொற்களில்' கேட்கும் நாதம். உமையாள்புரம் சிவராமனின் 'சாப்பு' எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ அத்தனை சிறப்பு சங்கரனின் டேக்காவிற்கும் உண்டு. ஆங்காங்கே ஒலித்த தவில் சொற்கட்டுகளும், சங்கதிகளில் போதும், பல்லவி - அனுபல்லவி - சரணம் transitions போது வாசிக்கப்பட்ட மோராக்களும், கச்சேரிக்கு தனி களையை அளித்தன. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்....சரி மீண்டும் மல்லாடிக்கு வருவோம்.

மல்லாடி சகோதரர்களில், யார் ஸ்ர்ராமபிரசாத் யார் ரவி குமார் என்று (இவர்கள் ஊரில் எதுகையாய் ராமு-சோமு, ஹரி - கிரி, என்றெல்லாம் வைக்கும் ஃபா்ஷன் இன்னும் வரவில்லையோ? இப்படித்தான் என் நண்பர் ஒருவரின் முதல் மகனுக்கு வினீத் என்று பெயர் வைத்துவிட்டு இரண்டாவது பையனுக்கு நவநீத் என்று வைத்து இருக்கிறார். "பையனுக்கு "வெண்ணை-னு" பேரு வெச்சுருக்கியேடா வெண்ணை" என்று கேட்க வேண்டும் போல இருந்தது.) தெரியாத நிலையில், போன வருடம் மாம்பலம் சகோதரிகளைக் குறித்தது போல (இம்முறை தமிழில்)ம1, ம2 என்று குறித்துக் கொள்வோம். தோடியைத் தொடர்ந்து, வசந்தாவில், நல்ல விறுவிறுப்பான காலபிரமாணத்தில் 'வாடே வேங்கடாத்ரி' கல்பனை ஸ்வரங்களுடன் பாடப்பட்டது (அன்னமையா கீர்த்தனையோ?). இருவருக்கும் நல்ல குரல் வளம் அமைந்திருக்கிறது. ஸ்ருதி சுத்தமும், கமகங்களில் தெளிவும் மிளிர்கிறது. வசந்தாவைத் தொடர்ந்து தேவமனோஹரியை விஸ்தாரமாக ஆலாபனை செய்த ம1-க்கு நினத்த சங்கதிகள் எல்லாம் சாரீரத்தில் பேசுகின்றன. தேவமனோஹரி, சிலரால் மத்யமாவதியையும் சுத்த சாவேரியும் சேர்த்த கலவை போலப் பாடப்படுகிறது. அப்படியல்லாமல், அதற்கென தனி உருவம் கொடுத்து, வேறு ராகங்களின் சாயை தெரியாமல் கையாளப்பட்டதற்கு ம1-க்கு ஒரு சபாஷ்!! மைசூர் மஞ்சுநாத் நல்ல தேர்ந்த வயலின் வித்வான். 2003-இல் அவர் சகோதரர் நாகராஜுடன் சேர்ந்து நடத்திய டூயட் கச்சேரியில் வாசித்த காம்போஜி இன்னும் காதில் ஒலிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் முதல் நிலை வயலின் வித்வானாக சில காலமாகவே விளங்கி வரும் இவருக்கு சில சீஸன்களாக சென்னையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்தனை சொன்ன பின்பு அவர் தேவமனோஹரி ஆலாபனையை எப்படி வாசித்திருப்பார் என்று சொல்லத்தான் வேண்டுமா? மிஸ்ர சாபுவில் அமைந்த "எவரிகை" பாடலை சாஹித்ய சுத்தமாய் பாடி விஸ்தாரமாய் ஸ்வரப்பிரஸ்தாரம் செய்தார்கள்.

கச்சேரி தொடங்கியதிலிருந்தே திருச்சி சங்கரனுக்கு அரங்கில் இருந்த ஒலிப்பெருக்கியில் திருப்தி ஏற்படவில்லை. பால்கனியில் உட்கார்ந்து இருந்த எனக்கு அவரது வலந்தலைப் பக்கத்தின் ஒலி அளவைவிட தொப்பி பக்கத்தின் ஒலி அளவு அதிகமாகக் கேட்டது. ரசிகரொருவர், மிருதங்கம் பாடகர் பாடுவதைவிட அதிகமாக ஒலிக்கிறது என்று முறையிடவும் இன்னும் குழப்பம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மிருதங்கத்திலிருந்து கையை எடுத்த திருச்சி சங்கரனின் வேகத்தில் இருந்த கோபம் மின்னல் போல் வெட்டினாலும் அடுத்த நொடியிலேயே மறைந்ததையும் காண முடிந்தது. அவரே பாடச் சொல்லி கேட்டுக் கொண்டும், மைக் மேன் இங்கு வந்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடித்தனர் மல்லாடி சகோதரர்கள். இவை எல்லாம் நடந்த பத்து நிமிடங்களுக்குள்தான் என்றாலும், நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

நான் அதுவரை கேட்டிராத கிருதியான, மைசூர் சதாசிவ ராவின் "நினுவினா", பலஹம்ஸா ராகத்திலும், தீக்்ஷதரின் சாரங்கா ராகக் கிருதியான "அருணாசல நாதம்" short and sweet ஆலாபனைக்குப் பின்னும் பாடப்பட்டன. பல மத்யம கால கீர்த்தனைகளை ஆதி, ரூபகம், மிஸ்ர சாபு தாளங்களில் பாடி கச்சேரியை களை கட்ட வைத்து விட்ட நிலையில், கச்சேரியின் பிரதான ராகமாக முகாரியை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார் ம2. பைரவியின் சாயல் அரவேயில்லாமல், அற்புதமாய் இழைத்து இழைத்துப் பாடிய ம2, தார ஸ்தாயியில் கொஞ்சம் கஷ்டப்பட்டது போலவே தெரிந்தது. ஆங்காங்கே கொடுத்த கார்வைகள் மிளிர்ந்தாலும் அதனைத் தொடர்ந்து கொடுக்க முயன்ற பிருகாக்கள் கொஞ்சம் தேசலாகவே ஒலித்தன. மஞ்சுநாதின் ரெஸ்பானின்ஸில் இக்குறை நீக்கப் பெற்றது. நன்றாக உழைத்து இழைத்து பாடப்பட்ட ஆலாபனைக்குப் பின் "எந்த நின்னே" அல்லது "காரு பாரு" நல்ல விளம்ப காலத்தில் பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், விளம்ப காலத்தில், செம்மங்குடி என்றதும் நினைவிற்கு வரும் கிருதியான "க்்ஷீணமை" (some may feel itz other way around) பாடலை அவர் பாடுவதைவிட விளம்பமான காலபிரமாணத்தில் பாடினார்கள். நன்றாகத்தான் இருந்தது என்றாலும், செம்மங்குடிப் இப்பாடலைப் பாடுவது கேட்டுப் பழகிய காதுகளுக்கு இது அத்தனை ருசித்திருக்குமா என்பது சந்தேகமே. இது பாடகர்களின் குற்றமல்ல, கேட்பவர்களின் குற்றமே! "ஏதி ஜேஸின ஜகன் நாதுடு சிரமுன" என்ற இடத்தில் விஸ்தாரமான நிரவலும், ஸ்வரப் ப்ரஸ்தாரமும் அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து இருந்த தனி ஆவர்த்தனமும் இடம் பெற்றது. தனியில் தனியாகச் சொல்லும்படி இருந்தது சங்கரனின் "மிஸ்ர நடை". முதல் ரவுண்டிலேயே பலத்த அப்ளாசைப் பெற்ற சங்கரன், தொடர்ந்து வாசித்த ரவுண்டுகளிலும் குறைப்பிலும் வேறு சில கதிகளிலும் பேதம் செய்து வாசித்தார்.

பிரதான உருப்படியைத் தொடர்ந்து கமாஸ் ராகக் கிருதியான "இடது பதம் தூக்கி ஆடும்", காபியில் ஸ்லோகமும், கே.வி.என் புகழ், "ஜானகி ரமணா" பாடலும் பாடப்பட்டன. ரசிகர் குழாமிலிருந்து யாரோ சதாசிவ பிரம்மேந்திரரின் பாடலை வேண்டிக் "கத்த". 'சர்வம் பிரம்ம மயம்' ஹிந்துஸ்தானி பாணியில் தொடர்ந்தது. அதன் பின் பாடிய பாடல் 'ப்ரூஹி முகுந்தேதி'. இந்த பாடலில் இரண்டாவது வரி, எம்.எஸ் பாடியதை வைத்துப் பார்த்தால் 'ப்ரூஹி முகுந்தேதிதான்'. இவர்கள் 'பாஹி முகுந்தேதி' என்று பாடினார்கள். ஏதாவது பாட பேதமாக இருக்கும் என்று நினைத்தேன். கடைசியில் ஒரு சரணத்தில் 'நாராயண தீர்த்தரின்' பெயரும் வர, நான் உட்பட பல ரசிகர்கள் குழம்பினோம். சதாசிவ பிரம்மேந்திரரின் கிருதியில் நாராயண தீர்த்தர் எங்கிருந்து முளைத்தார் என்று. விசாரிக்க வேண்டும்...

'ஜங்கார ஸ்ருதி செய்குவாள்' மெட்டில் அமைந்த 'தெலுங்கு கீர்த்தனையும் (நீ மாட)' (எதைப் பார்த்து எது அமைந்தது என்று நானறியேன்), சுருட்டியில் மங்களமும், மத்யமாவதியில் ஸ்லோகமும் கச்சேரியை அழகுற நிறைவு செய்தன. அப்புறம் மழையில் நான் பட்ட பாடுதான் நேற்றே பாடியாகிவிட்டதே!

இவ்வாறாக என் முதல் நாள் புராணம் மூன்றாம் தவணையில் நிறைவு பெருகிறது!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 21, 2005

இசை மழையும் அடை மழையும்

17th December 2005 @ Brahma Gana Sabha, Jayanthi Kumaresh, Arjun Kumar and Sukanya, 4.30 P.M

ஜெயந்தியின் கச்சேரி 4.00 மணிக்கு 4.30-க்கா என்று உறுதியாகத் தெரியாத நிலையில், சகேதராமனின் கச்சேரி முடியும் வரை இருக்காமல் முன்னரே கிளம்ப்பிவிட்டதை போன பதிவில் கூறியிருந்தேன். கச்சேரி 4.30 மணிக்குதான். 4.00 மணிக்கு சிவகாமி பெத்தாச்சி அரங்கிற்குச் சென்ற போது சுபாஷிணி பார்த்தசாரதி பைரவி பாடிக் கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரம் இருக்கையில், காண்டீன் பக்கம் போய் ஃபில்டர் காபி சாப்பிடலாம் என்று பார்த்தால், 'காண்டீன்' என்று பலகை இருந்த புல் வெளி ஆவினங்களுக்குரிய காண்டீனாய் விளங்கியது. (மழை பேய்து கொண்டிருந்ததால் அரங்கின் பின்புறம் காண்டீன் மாற்றியிருக்கிறார்கள். ஜெயந்தி குமரேஷின் கச்சேரி முடிந்த பின் படையெடுத்த கூட்டத்தை பின் தொடர்ந்த போதுதான் எனக்கு விஷயம் விளங்கியது.) காபி கிடைக்காத நிலையில் துக்கடாவில் சுபாஷிணி காபி ராகத்தைத் தொடங்க அரங்கினுள் நுழைந்தேன். வழக்கம் போல 'என்ன தவம் செய்தனை'-தான் இங்கேயும். ஆனால், இந்த பாடல் யசோதையின் தவத்தைப் பற்றியதுதானா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், யசோதை கண்ணனை உரலில்தானே கட்டினார், சுபாஷிணியோ "குரலில் கட்டி வாய் பொத்தி, கண்ணனைக் கெஞ்ச வைத்த" 'யாரையோ' பற்றி பாடிக் கொண்டிருந்தார்.

4.35-க்கு ஸ்ருதியெல்லாம் சேர்த்து முடித்த ஜெயந்தி குமரேஷின் பார்ட்டி, திரை விலகியவுடன் வணக்கம் தெரிவிக்க, அரங்கில் கைதட்டல் ஒலித்தது. வெளியில் அடை மழை ஆரம்பித்து விட்ட நிலையில் இசை மழையைக் கேட்க பத்து பேராவது இருப்பார்களா என்று பார்த்த போது, சுமார் பத்து பேர் இருப்பது தெரிந்தது:-). பிலஹரி ராகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டு, நாராயண தீர்த்தரின் "பூரய மம காமம்" பாடலைத் தொடங்கினார் ஜெயந்தி. பெரும்பாலான நாராயண தீர்த்தர் தரங்கங்கள் துக்கடாவாக பாடப்படும் நிலையில், இவரின் முயற்சி இன்ப ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (இன்னும் பல ஆச்சரியங்கள் தொடரவிருப்பதை அப்பொழுது நான் உணர்ந்திருக்கவில்லை)

வீணை கமகங்களை இழைத்து வாசிக்க அற்புதமான வாத்தியம் எனினும், கீர்த்தனைகள் வாசிக்கும் பொழுது, சாஹித்யங்களை பாடகர் பாடும் பொழுது ஏற்படும் உணர்வை இக்கருவியில் கொண்டு வருவது கடினம். பல சமயங்களில், வாத்திய இசைகளில் சங்கதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சாஹித்யம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். அன்று ஜெயந்தி வாசித்த அத்தனை கீர்த்தனைகளிலும் சாஹித்யத்தை தெளிவாகக் கேட்க முடிந்தது. மத்யம காலத்தில், விறுவிறுப்பான கற்பனை ஸ்வரங்களை ஜெயந்தி வாசித்த போதே கச்சேரி களை கட்டிவிட்டது.

பிலஹரியைத் தொடர்ந்து, குமுதக்ரியாவில் தீக்ஷிதரின் 'அர்த்தநாரீஸ்வரம்' வாசிக்கப் போவதாக ஜெயந்தி அறிவித்தார். மும்மூர்த்திகளுள் வைணிகராக விளங்கிய தீக்ஷிதரின் கிருதியை ஜெயந்தி தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லையெனினும், வழக்கமாய் வரும் பந்துவராளியோ பூர்வி கல்யாணியோ இல்லாமல், பந்துவராளியின் அழகிய அரிய ஜன்யமான குமுதக்ரியாவை எடுத்துக் கொண்டது ஆச்சரியம் நம்பர் 2. ரூபக தாளத்தில் அமைந்த பாடலின் பல்லவியில் விஸ்தாரமான ஸ்வரப்ரஸ்தாரமும், குறைப்பும் செய்தார். அர்ஜுன் குமார் மற்றும் சுகன்யா (முதல் முறையாக ஒரு பெண் கட வித்வானைக் காண்கிறேன். நன்றாகவே வாசிக்கிறார்!).

குமுதக்ரியாவைத் தொடர்ந்து வந்ததும் ஒரு ஆச்சரியம்தான்! முத்தையா பாகவதரின் 'தரு வர்ணத்தை' மூன்றாவது ஐட்டமாக வாசித்தார் ஜெயந்தி. தரு வர்ணம் எனப்படுவது யாதெனில் அந்த வர்ணத்தின் சிட்டை ச்வரங்களில் ச்வரம், ஜதி மற்றும் சாஹித்யம் மூன்றும் வரும். (இதை விளக்கிச் சொன்னதும் ஜெயந்திதான்). இரண்டு களை ஆதி தாளத்தில் விளம்ப கால வர்ணத்தின் மூலம் அழகிய கமாஸ் ராகம் அரங்கை நிறைத்தது. (இதில் ஆச்சரியம் என்ன என்று கேட்பவர்களுக்கு: வர்ணம் 99.99% கச்சேரியின் முதல் ஐட்டமாக பாட/வாசிக்கப்படும் விஷயம், இதை மூன்றாவது இடத்துக்கு தள்ளியதுதான் ஆச்சரியம். கச்சேரி முடிந்தபின், இதை மூன்றாவதாக வாசித்ததன் காரணம் கேட்ட போது, "It is a relatively slow piece. So, I was not sure how it would come out if I had started the concert with it", என்றார்.) வர்ணத்தை மூன்றாவதாக வாசித்து tradition-ஐ உடைத்துதான் ஆச்சரியம் என்றால், இப்பொழுது வர்ணத்தை வாசித்ததால் அதனைத் தொடர்ந்து 'விநாயகர் கீர்த்தனை' வாசிக்கிறேன் என்று மீண்டும் tradition-க்குத் தாவியது கொஞ்சம் comedy-ஆக இருந்தது.

ரீதிகௌளை ஒரு அற்புத ரக்தி ராகம். எப்படி இழுத்தாலும் அழகாக வளரும் வகையில் அமைந்த ராகத்தை எம்.டி.ராமநாதன் எடுத்துக் கொண்டு அதி விளம்ப காலப்பிரமாணத்தில் 'ஜனனி நினுவினா' பாடினாலும் மிளிரும், ஜி.என்.பி எடுத்துக் கொண்டு, பல துரித சங்கதிகள் புகுத்தி "பரிபாலயமாம்" பாடினாலும் மிளிரும், மதுரை மணி மத்யம காலத்தில் "மதி சேகரன் மகனே"-வின் patesnded சர்வலக்ஹு ஸ்வரங்கள் பாடினாலும் களை கட்டிவிடும். அதை சப்-மெயின் ராகமாக தேர்ந்தெடுத்து ஆலாபனை செய்தார். ரீதிகௌளையின் சஞ்சாரங்களை மெல்ல மெல்ல விரிய வைத்த போது, ஆலாபனையில் 'வல்லினம்' 'மெல்லினம்' (அதாவது அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தி, அமுக்க வேண்டிய இடத்தில் அமுக்கி வாசிப்பது) உணர்ந்து வாசிப்பது என்று சொல்வார்களே, அதன் பொருள் நன்றாக விளங்கியது. கீர்த்தனை வாசித்த விதத்தையும் அதனைத் தொடர்ந்த கல்பனை ஸ்வரங்களையும் பற்றி சொன்னால், இக்கட்டுரையை எழுதுவது 'லலிதா ராமா?, அல்லது கிளிப்பிள்ளையா என்று ஒரு பின்னூட்டு வருவது நிச்சயம்!

ரீதிகௌளையை முடித்த பொழுது கையில் 45 நிமிடமே எஞ்சியிருந்த வேளையில் கச்சேரியின் பிரதான ராகமாக கல்யாணியை வாசிக்க ஆரம்பித்தார். கல்யாணியின் பல பரிமாணங்களை அரங்கிற்கு ஜெயந்தி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது சம்பந்தமேயில்லாமல் முந்தைய நாள் ஃப்ளோரிடா ஸ்டேட் யூனிவர்சிடியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஃபொரபசர் 'textile composites'-ஐப் பற்றி கூறியது நினைவிற்கு வந்தது. பல விதமான இழைகளை வலிமைக்காக, நிறத்திற்காக, தோல் மேல் படும் உணர்விற்காக பல விதமான வகைகளை இணைப்பதிலிருந்து மெக்கானிகல் இஞ்சினியர்கள் நிறைய கற்று கொள்ளலாம் என்றார். ஜெயந்தி வாசித்த கல்யாணியின் இழைகளும் அப்படித்தான், பத்து நிமிட ஆலாபனை நிறைவை நெருங்கிய போது, இழைகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு ஒரு அழகிய, கோவை உருவாகியிருந்தது.

தானம் நமது இசைக்குமட்டுமேயுரிய 'semi rythmic item' ஆகும். (ஹிந்துஸ்தானியிலும் தானம் போல சில ஐட்டங்கள் உண்டு என்பதால் நமது என்பதை 'இந்திய' என்று வைத்துக் கொள்வோம்). நிறைவான தானத்தை கேட்க அரிதாகிவிட்ட நிலையில், தானத்திற்கென்றே பெயர் பெற்ற வாத்தியத்தில் விஸ்தாரமான தானத்தை கீர்த்தனத்துக்கு முன் வாசித்தது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கச்சேரி ஆரம்பித்து ஒரு தியாகராஜர் கீர்த்தனை கூட வாசிக்காத நிலையில், பிரதான கீர்த்தனையாக "ஏதாவுனரா" வாசிக்க போகிறார் என்று நினைத்தேன். அதிலும் ஆச்சரியம்தான்! அவர் தேர்ந்தெடுத்தது மற்றுமொரு தீக்க்ஷிதர் கீர்த்தனையான, மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த கிருதியான "பஜரே ரே சித்த'. "தேவீம் சக்தி பீஜோத் பவ மாத்ருகார்ண சரீரிணீம்", என்ற வரியைத் தாண்டிச் செல்வதென்பது almost impossible. ஜெயந்தி மட்டும் விதிவிலக்கா என்ன?, அந்த இடத்தில் இழைத்து இழைத்து நிரவலும், இரண்டு காலங்களில் ஸ்வரமும் வாசித்து, குறைப்பில், மிருதங்க வித்வானுடனும், கட விதூஷியுடனும் சேர்ந்து நடத்திய "sawal javaab type" குறைப்பு மிகவும் ரசிக்கும்படியாகவும், ஜெயந்தியின் arithmetical skills-ஐ சபையோர் உணரும் வகையிலும் அமைந்தது. எத்தனைதான் இரண்டு களை ஆதி தாளத்தில் அமைந்த தனி ஆவர்தனத்தை கேட்டாலும் அலுக்காது என்றாலும், ஒரு மாறுதலுக்காய், பல நாட்களுக்குப் பின் கேட்கக் கிடைத்த மிஸ்ர சாபு தனி ஆவர்த்தனம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நல்ல அரங்கில், அற்புதமாய் அமைந்த கச்சேரியில் ஒரே குறை, அது இரண்டு மணி நேரக் கச்சேரியாக இருந்ததுதான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும், அதனைத் தொடர்ந்த கச்சேரியின் எனது fav. திருச்சி சங்கரன் வாசிக்க இருந்ததால் அத்தனை குறை தெரியவில்லை. மைசூர் மஞ்சுநாத், திருச்சி சங்கரன் புடை சூழ, மல்லாடி சகோதரர்கள் பாடிய கச்சேரி அற்புதமாக அமைந்தது. அதைப் பற்றி முடிந்தால் அடுத்த பதிவில்.

அதைவிட முக்கியம், இசை மழையில் நனைய வேண்டுமெனில் இந்த சீசனில் அடை மழையில் நனைந்துதான் ஆக வேண்டும் போலிருக்கிறது. சபா எல்லாம் டல்லடிக்கிறது. 17-ஆம் தேதி, 9.15-க்கு மழைக்கு ஒதுங்கிய நான், அவ்விடத்தைவிட்ட நகர 10.30 ஆகிவிட்டது (மழை அப்போதும் விடவில்லை). வருண பகவானின் கருணையை வரும் வருடங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வைத்துக் கொள்ள யாராவது சொன்னால் நன்றாயிருக்கும் (17-ஆம் தேதி கச்சேரியைப் பற்றி எழுதி முடிக்கவே 20-ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில், எல்லா கச்சேரிகளைப் பற்றியும் precise writing எழுதலாம் என்றால், அதற்கும் மனமில்லை...ஹும்....)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 20, 2005

இசை விழா 2005 - தொடக்கம் இங்கே! தொடர்ச்சி?.......

December 17 @ Bharathiya Vidhya Vhavan, 2.00 P.M

கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவை ஆரம்பித்து, டிசம்பர் சீசனின் என் கச்சேரி (கேட்கும்) அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அதன் பின் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை எதையோ இட்டு நிரப்பிய வண்ணம் என் எழுத்துப்பணி (அதிகம் எழுதாமல்) தமிழ் கூறும் நல்லுலகு போற்றும் படி தொடர்ந்து வருகிறது. இந்நிலையை மாற்றி, அடிக்கடி எழுதி, எழுத்துலகை துயரத்தில் ஆழ்த்த எண்ணம் இருப்பினும், அவ்வெண்ணத்தை அழுத்தும் வகையில் என் சோம்பேறித்தனம் இருந்து வருகிறது. எல்லோருக்கும் வருடத்திற்கு இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைப்பது கண்டு, 'எனக்கும் விடுமுறை வேண்டும்', என்று சோம்பலும் கேட்க, 'சரி, முயற்சி செய்கிறேன்', என்று நானும் கூறிவிட்டேன். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேனா என்பது மார்கழியில் 'எல்லே இலங்கிளியே'-வுக்கு உரிய நாள் வருவதற்குள் தெரிந்துவிடும்.

சென்ற வருடம் போலவே, இம்முறையும் டிசம்பர் 17-ஆம் நாள் என் கச்சேரி கேட்கும் படலம் தொடங்கியது. ஆனால், வரலாறு காணாத மழையாலும், 'அம்மா' முயூசிக் அகாடமிக்கு வருவதால், நுங்கம்பாக்கத்தில் உருவான வாகன நெரிசலாலும், 'இனிதே' என்ற பதத்தை 'தொடங்கியது' என்ற பதத்திற்கு முன்னொட்டாக்க முடியவில்லை.

சென்ற வருடம் காயத்ரியின் வீணை இசை கேட்க விழைந்து வீட்டை விட்டு கிளம்பிய வேளை நன்றாக அமைந்ததால், சீசனும் அமர்க்களமாய் அமைந்தது. அதே செண்டிமெண்டை ஃபாலோ செய்யலாம் என்று பார்த்தால், காயத்ரியின் கச்சேரி 18-ஆம் தேதிதான் இருப்பது தெரிந்தது. சரி, வேறு வீணை கச்சேரி இருக்கிறதா என்று பார்த்த பொழுது, ஜெயந்தி குமரேஷின் கச்சேரி இருப்பது தெரிய வந்தது (ஒரு வீடு இரு வாசல் படத்தின் ஒரு வீடு, சாரி, ஒரு ஹீரோவான பிரபல வயலின் வித்வான் குமரேஷின் மனைவிதான் ஜெயந்தி). 2003-இல் இருந்து இவரது கச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த போதும், ஏதோ ஏதோ காரணங்களால் செல்ல முடியவில்லை. இவரது இசையைக் கேட்க இதுதான் சமயம் என்று முடிவெடுத்தேன். 4.30 மணி கச்சேரிக்கு, 3.45 வரை வீட்டில் இருக்க இருப்பு கொள்ளாமல், 2.00 மணி வாக்கில் ஏதேனும் கச்சேரி தேறுமா என்று பார்த்த பொழுது, சாகேதராமன் 'கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்' பாரதிய வித்யா பவனில் நடத்தும் இசை விழாவில் பாடுவது தெரிந்தது. பெங்களூரில் இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், நன்றாக பாடுகிறார், என்று எனக்கு நல்ல சங்கீதத்தை அறிமுகப்படுத்தி வைத்த ஒருவர் சொல்ல, முதலில் பாரதிய வித்யா பவன், அங்கிருந்து ஒரு முறுக்கு முறுக்கினால் 5 நிமிடத்தில் சிவகாமி பெத்தாச்சி ஹாலுக்கு சென்றுவிடலாம் என்று கிளம்பினேன்.

வாகன நெரிசலை தாண்டி நான் கச்சேரிக்கு செல்வதற்குள் கச்சேரி ஆரம்பித்து, வலஜி ராகக் கீர்த்தனை (ஜாலந்தர) முடிந்து, 'பவ ரோக நிவாரிணி'-யில் நிரவல் போய்க் கொண்டிருந்தது. சாகேதராமனைப் பார்த்தால் 20 வயது இளைஞர் போலத்தான் தெரிகிறார். நல்ல இனிமையான சாரீரம். லால்குடியிடம் சிட்சையாம். ராகத்தின் ஜீவ ஸ்வரங்களை நன்று உணர்ந்து பாடுவதிலும், இழைத்து இழைத்து கமகங்களைக் கொடுப்பதிலும் குரு பரம்பரை தெளிவாய் தெரிகிறது. ஹாலின் நடு நாயகமாய் ஒரு பெரியவர் (சாகேதராமனின் தந்தையாக இருக்கலாம்), வருகிறவர்களை எல்லாம் வரவேற்று, அவ்வப்போது ஜோராக கைதட்டி, யாரேனும் பேசினால் அதட்டியபடி அமர்ந்திருந்தார். 30-40 பேர் அமரக் கூடிய அளவில் இருக்கும் மினி ஹால் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது.

நிரவலும் ஸ்வரமும் தங்கு தடையின்றி வலஜியின் ஸ்வரூபத்தை அரங்கில் பவனி வர வைத்தன. திடீர் என்று முடிவெடுத்துச் சென்றதால், பக்கவாத்யங்கள் யார் என்று கவனிக்க முடியவில்லை. வலஜியைப் பொருத்த மட்டில சாகேதராமனின் கற்பனைகளை நிழல் போலத் தொடர்ந்தது அந்த இளம் வயலின் வித்வானின் வில். மேடையில் இருந்த இளைஞர் கூட்டணியில், என்னைப் பெரிதும் கவர்ந்தது மிருதங்கம் வாசித்தவர்தான். நிறுத்தி நிதானமாய், பாடகர் பாட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வாசித்து அசத்தினார். பல்லவி to அனுபல்லவி, அனுபல்லவி to சரணம் transition அனைத்திலும் மோராக்கள் வைக்காவிடினும், வைத்த மோராக்கள் அத்தனையும் 'பளிச்'.

வலஜியைத் தொடர்ந்து, தன்யாசியை sub-main ராகமாக எடுத்து ஆலாபனை செய்தார். முதல் பிடியிலேயே 'இன்ன ராகம் தான் பாடுகிறேன்' என்று முத்திரை பதித்து காட்டியது சிறப்பு. 'தோடி ஆரம்பிக்கறாரோ? இல்லையே பைரவி மாதிரி இருக்கே! ஓ! தன்யாசியா...', என்றெல்லாம் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. படிப் படியாய் விஸ்தாரம் செய்த ராகத்தில், கீழ் ஸ்தாயி ஷட்ஜமத்துக்கு கீழே செல்லும் பொழுது கொஞ்சம் சிரமப் பட்டது தெரிந்தது. (மழையும் பனியும் இருக்கும் காலத்தில் கீழ் ஸ்தாயியில் காத்து வராமல், குரல் கேட்பதே பெரிய விஷமல்லவா?).

ஆலாபனை செய்யும் பொழுது அந்த ராகத்தில் தோன்றும் அனைத்து பிடிகளையும் காட்ட வேண்டும் என்று அவசியம் அல்ல. ஒரு lecture demonstration-இல் ஒரு ஆய்வாளர் கூறியது போல, ஆலாபனைக்கும் 'காலப் பிரமாணம்' உண்டு. அக்காலப் பிரமாணம், ஆலாபனையை தொடர்ந்து வரும் கீர்த்தனத்தை பொருத்தோ, அல்லது பல்லவியைப் பொருத்தோ அமையும். ஆலாபனையில் எந்த அளவு பாடுவதற்கு முக்கியம் தர வேண்டுமோ, அந்த அளவிற்கு எங்கெங்கே எந்தெந்த பிடியை நிறுத்த வேண்டும் என்பதும் முக்கியம். Many a times, the pause enhances the listening experience as it lets the listener grasp the imagination. Like the saying "hatred is the other side of love", probably, "silence is the other side of music". இவ்விஷயம் சாகேதராமனின் ஆலபனையில் மிளிர்ந்தாலும், வயலின் வித்வானின் ஆலாபனையில் சற்று குறைவாகத்தான் தென்பட்டது. தன்யாசி ராகத்தில் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவசர அவரமாக நிரப்பியது போலத் தோன்றியது. இளைஞர்தானே, நாள்பட நாள்பட சூட்சமம் பிடிபட்டு விடும்.

தன்யாசி ஆலாபனைக்குப் பின், கேட்பதற்கரிய கீர்த்தனையான 'மீனலோசனி ப்ரோவ'-வைத் தொடங்கினார். பாடலின் பல்லவியின் எடுப்பு மிஸ்ர சாபு தாளத்தில் இரண்டரை இடம் தள்ளி அமைந்திருந்தது (misra chapu is generally rendered as a beat that can be split as 1.5+1+1, the pallavi of this krithi was offset by 2.5 beats) கவனத்தைக் கவர்ந்தது. பல்லவியில் அவர் போட்ட சங்கதிகளும், அதற்கு மிருதங்க வித்வான் கொடுத்த flourish-களும் பெரிதும் ரசிக்கும்படி இருந்தது.

2 மணி நேரக் கச்சேரிகளில் இரண்டு ராகம்தானே பாட முடியும். ஏற்கெனவே தன்யாசியை விஸ்தாரமாய் பாடிவிட்ட நிலையில், அன்றைய கச்சேரியின் பிரதான ராகத்தை தொடுவதற்கு முன், விறுவிறுப்பான காலப் பிரமாணத்தில் 'வர ராக லய' (செஞ்சு காம்போதி) பாடினார். அதனைத் தொடர்ந்து மோகன ராகத்தை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு, அதில் பல அழகிய கோவைகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கமகங்களை இழைத்து இழைத்து பாடிய விதம் படு அற்புதம். மேல் ஸ்தாயியிலும், முன்பு குறிப்பிட்டது போல, மந்தர ஸ்தாயியிலும் சற்றே கஷ்டப்பட்டது போலத் தெரிந்தது. ராகத்தின் சஞ்சாரங்களையெல்லாம் அழகாக படம் பிடித்து காட்டியபின், மீண்டும் ஒருமுறை கீழ் ஷட்ஜமத்தில் தொடங்கி பிருகாக்கள் கொடுக்க முயன்றார் சாகேதராமன். முதல் தர பிருகாவானது, எத்தனை துரிதமாகப் பாடினாலும் அனைத்து ஸ்வரங்களையும் தெளிவாக வெளிப்படுத்தும். அதற்கு ஒரு மாற்று குறைந்த பிருகாக்கள் சற்றே தேசலாய் இருக்கும். இவரின் பிருகாக்கள் முதல் தரத்தை அடுத்த சீசனுக்குள் அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வயலின் வித்வானுக்கு மோகன ராகம் என்பது 'திலீப் வெங்க்சர்கருக்கு லார்ட்ஸ் மைதானம்' விளங்கியது போல தோன்றியிருக்க வேண்டும். தன்யாசியில் விட்டதையெல்லாம் மோகனத்தில் அற்புதமாய் பிடித்துவிட்டார். ஆலாபனையைத் தொடர்ந்து, எப்பொழுதும் கேட்கக் கிடைக்கும் 'மோஹன ராமா' அல்லது 'நன்னு பாலிம்ப' என்று அரைத்த மாவை அரைக்காமல், அப்பாடல்களுக்கு இணையான அழகிய ஆனால் சற்றே அரிதான 'ரா ரா ராஜீவ லோசன' பாடினார். இவரது கீர்த்தனை பாடும் முறையில் இன்னொரு நல்ல விஷயம், பாடுவது நன்றாகப் புரிகிறது. இப்பாடலுக்கு சிட்டை ஸ்வரம் அமைத்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அழகாய் அமைத்திருக்கிறார்கள். அனுபல்லவியைத் தொடர்ந்த சிட்டை ஸ்வரத்தை விளம்ப காலத்திலும், சரணத்தை அடுத்து வந்த சிட்டை ஸ்வரத்தை மத்யம காலத்திலும் பாடினார். (சிட்டை ஸ்வரம் பாடும் பொழுது கீழ் ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டு அதன் கீழ் இருந்த தைவதத்தைத் தொடும் இடத்தில் எல்லாம் ஸ்ருதி சற்றே விலகியபடியே இருந்தது.) கட்டுரையைப் படிக்கும் பொழுது நிறைகள் அளவிற்கு குறைகளும் இருப்பது போலத் தோன்றின் அது எனது குற்றமே. குறைகள் என்று குறிப்பிட்டது அனைத்தும் கச்சேரியின் 2% நேரத்திற்குக் கூட இருந்திருக்காது, மற்ற நேரங்களில் அவர் பாடியது அனைத்தும் நிறைவாகவே இருந்தது. அதற்கு மற்றுமொரு சான்றாக, அவரது நிரவலும் ஸ்வரமும் அமைந்தது. கல்பனை ஸ்வரங்களில் அவர் செய்த குறைப்பு கொஞ்சம் விவகாரம் கலந்து இருப்பினும், குறைப்பை முடித்து கடைசியில் வைக்க முயன்ற கோர்வையில் அவர் கோட்டை விட்டாரா அல்லது அதை கவனிப்பதில் நான் 'கோல்' விட்டேனா என்று தெரியவில்லை. 2 களை ஆதி தாளத்தில் ஆங்காங்கே கதி பேதங்களுடன் அற்புதமாய் தனி ஆவர்த்தனம் தொடர்ந்தது. அடுத்த முறை இந்த மிருதங்க வித்வானைப் பார்த்தால் விவரங்கள் விசாரிக்க வேண்டும்.

மேற் கூறியவை எல்லாம் நடந்த வேளையில், என் அருகில் உட்கார்ந்து ஆரவாரமாய் ரசித்த கொண்டிருந்த மஹானுபாவரின் செல் ஃபோன் மூன்று முறை சிணுங்கி, ஒருமுறை அந்த மினி ஹாலுக்குள்ளேயே பேச ஆரம்பித்து, நான் ஒருமுறை முறைத்தும், மறுமுறை வெளியே சென்று பேசுங்குள் என்று பணிவாகக் கேட்டுக் கொண்டும், மூன்றாம் முறை ஃபோனை அணையுங்கள் என்று கடுப்பாய் கூறிய படலமும் இனிதே நிறைவேறியது. கைப்பேசியை அணைக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத இந்த ஜென்மங்கள் உதிர்க்கும் சாபாஷ்களும் பலேக்களும் உள்ளத்தினின்று உதிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

தனி ஆவர்தனத்துக்குப் பின் 'சுந்தர காண்டத்தில்' வரும் ஸ்லோகமான 'வைதேகி சஹித'-த்தை எடுத்துக் கொண்டு முதலில் சஹானாவிலும், பின்பு ஹமீர் கல்யாணியிலும் பாடினார். அதற்குள் எனக்கு அடுத்த கச்சேரிக்கு செல்ல நேரமாகிவிட கிளம்பிவிட்டேன்.

ஸ்லோகத்தைக் கேட்ட வரையில் எனக்குத் தோன்றியது.......

பாடிய நாலு வரியை அவ்வப்பொழுது ஓரக் கண்ணால் கீழுருந்த பேப்பரில் பார்ப்பது, ரசிகர்களின் பார்வைக்கு மட்டுமல்ல செவிகளுக்கும் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது. சஹானாவில் சில ஸ்ருதி சறுக்கல்கள் நிச்சயம் பேப்பரைப் பார்த்த பொழுதுதான் நிகழ்ந்தது. இரண்டு மூன்று முறை நிகழ்ந்ததால் இது தற்செயல் என்று ஒதுக்காமல், சாஹித்யத்தைக் பேப்பரில் காணும் பொழுது ஏற்படும் கவனச் சிதைவால் ஏற்பட்ட குறை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஸ்லோகத்தைத்தான் பாட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே. ஸ்கூல் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் வரும் பெயர் வரிசையை ஸ்லோகமாகப் பாடினால் கூட யாரும் குறை கூறப் போவதில்லை. அரிய, அழகிய பாடல்களை எல்லாம் காகிதத்தின் துணையின்றி பாடிவிட்டு, இந்த 4 வரி ஸ்லோகத்த்கை பேப்பரில் எழுது அதை ஓரக் கண்ணால் பார்த்து மல்லுக்கு நிற்பானேன்?

மற்றவை அடுத்த பதிவில் (எழுதினால்) வரும்....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.