Wednesday, February 08, 2006

லேட்டாகவும் லேட்டஸ்டாக இல்லாமலும்....

மிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா? நானறியேன். என் கடன் இங்கு கொட்டித் தீர்த்துவிடுவது. அதன் பின் யாராவது திட்டித் தீர்த்தாலும் என் மனம் நிறைவாகவே இருக்குமென்றுதான் நினைக்கிறேன். over to kalarasana.......

2004 டிசம்பர் 24-ஆம் தேதி கலாரசனாவில் சஞ்சய், திருச்சி சங்கரன், நாகை முரளிதரன் ஆகியோரில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. 6.15 மணிக் கச்சேரிக்கு 6.00 மணிக்கு எட்டு பேராக நாங்கள் சென்ற போது, ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கட்டுகள் அனைத்துமே காலியாகியிருந்தது. எட்டு பேருக்கு இரு நூறு ரூபாய் டிக்கட் வாங்க மனமில்லாமல் மாம்பலத்தில் நடந்த சேஷகோபாலனின் ஃப்ரீ கச்சேரிக்குச் சென்றோம். கர்நாடக இசைக் கச்சேரிகள் கூட ஹவுஸ் ஃபுல் ஆவதைக் கண்டு நான் மகிழ்ந்தாலும், சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே. இம்முறையும் அதே தேதி, அதே பக்கவாத்தியங்களுடன், அதே இடத்தில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வாய்ப்பை நழுவ விட விரும்பாமல், 3.30 மணிக்கு ஏற்பாடாக இருந்த எம்.எஸ்.ஷீலாவின் கச்சேரிக்கே ராணி சீதை ஹாலில் ஆஜராகி, 3.00 மணிக்கே சஞ்சயின் கச்சேரிக்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டோம். எம்.எஸ்.ஷீலா பாடிய மலஹரி ராகமும் ஸ்வரங்களும், அந்த ராகத்தில் இத்தனை பிரயோகங்கள் இருக்கிறதா என்று வியக்க வைத்தன. அன்றைய மெய்ன் ஐட்டமான தோடியும் பைரவியும் மிகச் சிறப்பாக, அளவாக அமைந்தன. பக்கவாத்தியம் வாசித்த அக்கரை சுப்புலட்சுமியின் வாசிப்பு அவரை நிழலெனத் தொடர்ந்து கச்சேரிக்கு அழகு சேர்த்தது. பேருக்கு வாசித்த தனி ஆவர்த்தனத்துடன் ஷீலாவின் கச்சேரி முடிய, அடக்க முடியா ஆவலுடன் சஞ்சயின் கச்சேரியை எதிர் நோக்கி அமர்ந்திருந்தோம்.

ஐந்தரை மணி வாக்கிலேயே வித்வான்களெல்லாம் ஆஜர் ஆகி, 6.14-க்கு ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணம் முடிவதற்குள் கலைஞர்கள் மற்றும் இரசிகர்களின் திருப்திக்கு அரங்கின் ஒலி அமைப்பு அமைந்தது அதிர்ஷ்டம்தான். மாயாமாளவ கௌளையின் சிறிய கீற்றுக்குப் பின் 'துளசி தள' பாடினார். 'ஸரஸீருக புன்னாக' என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரங்கள் பாடினார், விறுவிறுப்பான சஞ்சயின் கற்பனைகளுக்கு முரளீதரனின் ஸ்வரக் கணைகள் தக்க வகையில் பதிலளித்தபடியிருந்தன. நிரவல் என்பது ஒரு வரியை எடுத்துக் கோண்டு ராகத்தின் பரிமாணத்தைக் காட்டும் சமாசாரம்தான். அங்கு ராக ஸ்வரூபத்துக்கே முதலிடம் என்பதில் ஐயமில்லை. அதற்காக என்ன பாடுகிறார் என்ற புரியாத வகையில் சில அழகிய இடங்களைப் பாடினால்தான் ராக ஸ்வரூபம் வெளிப்படுமா? அல்லது வார்த்தையும் புரிந்து அவ்விடங்களையும் பாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

மாயாமாளவகௌளையிலேயே சஞ்சயின் குரல் நல்ல நிலையில் இருப்பது தெரிந்தது. அன்றைய தினம் அவர் பாடிய பிருகாக்களெல்லாம் spot on. மாயாமாளவகௌளையை தொடர்ந்து ஆலாபனை செய்த ராகம் கொஞ்சம் சங்கராபரணம், கொஞ்சம் பூர்ணசந்திரிகா போலெல்லாம் எனக்கு பூச்சி காட்டிவிட்டி "நான்தான் ஜனரஞ்சனி, என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா?", என்றது. ஜனரஞ்சனியில் "நாடாடின மாட" பாடியபின், முதல் sub main-ஆக சாவேரியை எடுத்துக் கொண்டார். சாவேரி நல்ல பாவப்பூர்வமான ராகம். இந்த மாதிரியான ராகங்களில் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் அனைவர் மனதிலும் தோன்றும், பாடகரின் ஆலாபனையும் அதே சஞ்சாரங்களை ஒட்டி இருக்கும் போது ஆலாபனையே cliche-ஆகத் தோன்றும். அப்படியல்லாமல் பிரதானமான சஞ்சாரங்களினூடே பல கோவைகளை நுழைத்து ஆலாபனையில் ஒரிடத்தில் நின்றால் அடுத்து தாவும் இடம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா என்று அனுமானிக்க முடியா வகையில் ஆலாபனையை எடுத்துச் சென்றதற்கு ஒரு SPECIAL சபாஷ். சஞ்சயின் ஆலாபனையில் சிறப்பு அம்சமே அவர் ராகத்தை அடுக்கடுகாய் வளர்க்கும் போது, ஒரு அடுக்குக்கும் அடுத்ததற்கும் கொடுக்கும் இடைவெளி, அந்த இடைவெளி அவர் பாடியதை மனதில் வாங்கிக் கொள்ள இரசிகர்களுக்கு உதவுகிறது. அந்த இடைவெளியில், எத்தனை அரிய, கடினமான இடமாகயிருந்தாலும் நாகை முரளீதரனின் வில் அதை அப்படியே கன கச்சிதமாய் ஃபாலோ செய்தது. கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் போது, பாடகர் ஐந்து நிமிடம் ராகம் பாடினால், வயலினிஸ்ட் மூன்று நிமிடம் வாசிக்கலாம் என்பது, unwritten law. அந்த மூன்று நிமிடத்துக்கள் ஐந்து நிமிட ஆலாபனையை precise writing செய்து கேட்பவர்களுக்கு பாடகர் ஆலபனை அளித்த நிறைவையே அளிப்பதென்பது சிலரால் மட்டுமே முடிந்த கலை. அதில் இன்றைய தலை சிறந்த வித்வானாக விளங்குபவர் நாகை முரளீதரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று அவர் வாசித்த சாவேரியே அதற்குச் சான்று. சாவேரியில் அமைந்த தமிழ்ப் பாடலான (தமிழ் மாதிரிதான் இருந்தது) "முருகா முழு மதி" என்ற பாடலைப் பாடிய பின், பிரதான ராகமாக சங்கராபரணத்தை இழை ஓடவிட்டார்.

steady-ஆன காந்தாரத்தைற்கும் ஊஞ்சலாடும் ரிஷபத்திற்கும் இடையில் அழகிய பாலமமைத்து, சில ஸ்வரங்கள் அந்தப் பக்கம், சில ஸ்வரங்கள் இந்தப் பக்கம் என்று தோரணம் கட்டி, மேலும் கீழுமாக பாலத்தில் சங்கராபரண ராகத்தை ஓடி விளையாடி வைத்தார் பாருங்கள்...த்சொ..த்சொ...வர்ணிக்க வார்த்தையில்லை. ஆங்காங்கே சில westernised பிரயோகங்களையும் புகுத்தி ஆலாபனையில் சுவாரஸ்யப் படுத்தினார். காந்தாரம், பஞ்சமம், தார ஸ்தாயி ஷட்ஜம் என்ற ஸ்வர ஸ்தானங்களில் எல்லாம் நின்றபடியும், அவற்றை சுற்றி சுற்றி தட்டாமலை சுற்றியபடியும் படிப்படியாய் வளர்ந்த ராகம், சங்கராபரணத்தின் முக்கிய இடமான தார ஸ்தாயி காந்தாரத்தை நோக்கி நகர்ந்தது. சஞ்சயின் குரலில் ஒரு குறை என்னவென்றால், மேல் ஸ்தாயிக்குச் செல்லச் செல்ல கம்மலாகிவிடுகிறது. அதனால், கணீரென்று கேட்க வேண்டிய காந்தாரம் சிறிய கீற்றாய் கேட்டது. அந்த குறையை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அழகிய நிறைவான, விறுவிறுப்பான ஆலாபனையாகவே அமைந்தது. ஆலாபனையை முடிக்கும் தருவாயில் 'ஸ்வர ராக சுதா' என்ற கீர்த்தனைக்கேவுரிய சில சங்கதிகளை ஆலாபனையுள் கலந்தளித்த தான் பாடப்போகும் பாடலைக் குறிப்பால் உணர்த்தினார். காலம் காலமாக கையாளப்படும் ராகமான போதிலும் புதிய கலவைகளுக்கும், கோவைகளுக்கும் இன்னும் இடமுண்டு என்று முன் மொழிந்த சஞ்சயின் ஆலாபனையை ஆமோதிக்கும் வழிமொழியலாக நாகை முரளீதரனின் ரெஸ்பான்ஸ் அமைந்தது. அவர் நினைத்திருந்தால் தார ஸ்தாயியில் சஞ்சய் பாடாததையெல்லாம் வாசித்து பாடகருக்குய் எட்டாத இடத்தையெல்லாம் தொட்டு அப்ளாசை அள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாதது, பாடகர் பாடிய அழகான இடங்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுவது போல வாசித்தது, அவரின் முதிர்ச்சியியைக் காட்டியது.

இரண்டு களையில் விளம்பமான காலப் பிரமாணத்தில், திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற தாளக் கட்டில் அமைந்திருந்த 'ஸ்வர ராக சுதா' பாடலை சற்று ஆச்சரியப்படும் வகையில் பாடினார். என்ன ஆச்சரியம் என்றுதானே கேட்கிறீர்கள்? வார்த்தைகள் ஓரளவு சற்றே புரிந்ததுதான் ஆச்சரியம். உண்மையில் சொல்லப் போனால், சஞ்சயின் கீர்த்தனை பாடும் முறை அடிப்படையில் அத்தனை மோசமாக இல்லை. பாடலில் சங்கதிகள் வளர வளர, அல்லது நிரவலில் ராக ஸ்வரூபம் பிரவாகமாக ஓடும்போது, அவரையும் அறியாமல் ராகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வார்த்தைகளுக்கு step motherly treatment கொடுத்துவிடுகிறார். இந்த நிலை மட்டும் சற்று மாறினால், சஞ்சயைப் போலப் பாட ஆளேயில்லை என்று கூட சொல்லக் கூடிய நிலை வரலாம். சங்கராபரண பாடலில் 'மூலாதார' என்ற சரணத்தை நிரவல் செய்யாமல் தாண்டியதும், கீர்த்தனையை நிறைவு செய்தவுடன் மீண்டும் வருவார் என்றுதான் நினைத்தேன். எதிர்பாராத வகையில் 'குறுதே மோக்ஷமுரா' என்ற இடத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாட ஆரம்பித்தும், அரங்கம் ஒருமுறை நிமிர்ந்த உட்கார்ந்தது. அந்த ஸ்வரங்களுக்கு முன் 'முத மகு மோக்ஷமுரா' என்ற இடத்தில் பாடிய சங்கதிகள் ஒவ்வொன்றும் அதி அற்புதமாக அமைந்தது. கல்பனை ஸ்வரங்களை முதல் காலத்திலும் பின்பு இரண்டாம் காலத்திலும் பாடியபின், திஸ்ரக் குறைப்பு செய்தார்.

திஸ்ரக் குறைப்பு என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள். எனக்கு ஓரளவு இந்த லய விவகாரங்கள் புரிந்தாலும், சரியாகச் சொல்ல வருமா தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். குறைப்பு என்பது, அந்த சொல் உணர்த்துவது போலவே எதன் அளவையோ குறைக்கிறது. எதன் அளவை? ஸ்வரம் பாடும் போது, அந்த பாடலில் தாளத்தின் அளவிற்கோ, அல்லது அத்தாளத்தின் அளவின் multiple-ஆகவோ பாடினால்தான், ஸ்வரத்திலிருந்து சாஹித்யத்துக்குச் செல்லும் transition smooth-ஆக இருக்கும். (சிந்து பைரவி படத்தில் மஹா கணபதிம் பாடலில் 'ச ரி க மஹாகணபதிம்', என்று ஆரம்பித்து பல ஸ்வரக் கோவைகள் பாடுவாரே யேசுதாஸ். நியாபகம் இருக்கா?) அப்படி ஸ்வரம் பாடும்போது, ஒரு க்ளைமாக்ஸ் அல்லது crescendo build செய்வதற்கான ஒரு வழிதான் குறைப்பு என்பது. ஸ்வரத்துக்குப் பின் சாஹித்யத்துக்குச் செல்லாமல், ஒரு ஸ்வரத்தையே resting point-ஆக வைத்துக் கொண்டு, முதலில் அந்த கீர்த்தனையின் தாளத்தின் அளவுக்குப் பல ஸ்வரக் கோவைகள் பாடி, அதன் பின் அந்த கால அளவை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து....இப்படி எத்தனை முறை வகுக்க முடியுமோ அத்தனை முறை வகுத்துக் கால அளவைக் குறைத்துக் கொண்டே செல்வதன் பெயர் குறைப்பு. தேர்ந்த வித்வான்கள் பாடும் போது குறைப்பில் பல complex calculations நிறைந்திருக்கும். சரி...அப்போ திஸ்ரக் குறைப்பு-னா? குறைப்பு, ஒவ்வொரு ரவுண்டின் முடிவினிலும் தாளத்தின் நடையை மாற்றும் போது, அந்த நடையைப் பொறுத்து குறைப்புக்கு முன் suffix முளைக்கிறது. நடை மிஸ்ரமாக மாறினால் மிஸ்ரக் குறைப்பு, திஸ்ரமாக மாறினால் திஸ்ர குறைப்பு. சரி..இப்போ நடைனா என்னனுதானே கேட்கிறீங்க? அது வேறொரு சமயத்தில் பார்ப்போம். அப்படி அடக்க முடியா ஆர்வத்தில் இருப்பவர்கள் தனி மடல் அனுப்பவும். இல்லையேல் இணையத்தில் basics of laya/taaLa என்று தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

எங்க வுட்டேன்?...ஆங்...திஸ்ரக் குறைப்பு செய்து கோர்வை வைத்து ஸ்வரத்தை முடித்து தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். திருச்சி சங்கரனின் வாசிப்பைப் பற்றி ஏற்கெனவே நிறைய சொல்லியாகிவிட்டது. அன்று வாசித்த தனியில் முதல் காலத்துக்கும் இரண்டாம் காலத்துக்கும் மாறி மாறித் தாவியபடி வாசித்த லாவகமும், வழக்கமாய் வாசிக்கும் டேக்கா சொல்லும், மிஸ்ர நடையும், திஸ்ர நடையில் வைத்தக் கோர்வையும் கச்சேரியை மற்றுமொரு தளத்திற்கு ஏற்றிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த சீஸனில் சங்கரனின் நான்கு தனி ஆவர்த்தனங்கள் கேட்க முடிந்தது. நான்குமே ஆதி தாளம் இரண்டு களையில். ஒன்றின் சாயல் மற்றொன்றில் சற்றும் விழாமல் வாசித்தார் என்று கூறினாலே அவரின் வித்தை உங்களுக்குப் புரிந்துவிடும். ஜி.என்.பி, அரியக்குடி, ஆலத்தூர், மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்புடு போன்ற ஜாம்பவான்கள் ஒருவரையும் நேரில் கேட்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று என் மனம் ஏங்காத நாளில்லை. இருப்பினும், சங்கரனின் கச்சேரிகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்பதை நினைத்து சந்தோஷப்படாத நாளுமில்லை என்றுதான் கூற வேண்டும். கர்நாடக இசையுலகில் அரங்கேறி பொன் விழா கண்டிருக்கும் அம்மேதை இன்னும் பல காலம் நீடூழி வாழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க மனமார பிரார்தித்துக் கொள்கிறேன். டி.என்.சேஷகோபலன் சொன்னதைப் போல, "தியாகராஜர் இவரின் வாசிப்பை திர்க்க தரிசனத்தின் உணர்ந்துதா "நாத தனுமநிசம் சங்கரம்" என்று பாடினாரோ" என்று கூடத் தோன்றுகிறது.

சங்கராபரணத்தைத் தொடர்ந்து கேட்பதற்கரிய ராகமான தானரூபியைக் சுருக்கமாக ஆலாபனை செய்து கோடீஸ்வர ஐயரின் தமிழ் கீர்த்தனையைப் பாடினார்.

அன்று பாடிய சங்கராபரணத்தையும் சாவேரியையும் தாண்டி என்ன அப்படிப் பாடவிட முடியும் என்று ஒரு கணம் நினைத்தேன். ஒரு கணம்தான் நினக்க நேரமிருந்தது. சஞ்சய் ஆபோகியைத் தொடங்கியதும் அந்த நினைப்பு அரவே நீங்கியது. வர்ணம் பாடிய ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடுவது என்பது ஒரு சம்பிரதாயம். அன்று ஆபோகி வர்ணத்தில் கச்சேரி தொடங்கியதால், அபோகியின் ஒரு இழை வெளிப்பட்டதுமே 'ராகம் தானம் பல்லவி' பாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஆபோகியைப் போன்ற கம்பீரமும், ரக்தியும் நிறைந்த ராகத்தை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். கற்பனைக்கு குறைவில்லா சஞ்சயின் குரலும் நினைத்ததெல்லாம் பேசக் கூடிய நிலையில் அன்று அமைந்துவிட்ட போது கேட்கவா வேண்டும். முதலில் மழைத்துளியாய் விழுந்து பின்பு பிரவாகமாய் மாறி, அவர் தார ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டதும் மடை திறந்து அரங்கெங்கும் ஓடியது. ஷட்ஜமத்தில் நின்று கொடுத்த கார்வைகள் என் நினைவிலிருந்து என்றென்றும் அகலாது என்றுதான் நினைக்கிறேன். கச்சேரியின் மற்ற உருப்படிகளை எப்படியோ வர்ணித்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன்! அன்றுஇ சஞ்சய் பாடிய ஆபோகியின் அழகையும், ஆதிதாளம், முக்கால் இடம் offset-இல் அமைந்த 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற பல்லவி நிரவலையும், அதில் செய்த அனுலோம பிரதிலோம ஜால வித்தைகளையும், ராகமாலிகையும், வர்ணிக்க இன்னும் உவமைகள் உருவாக்கப்படவில்லை.

ராகம் தானம் பல்லவி முடிந்த போது அரங்கமே ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்தது. பல்லவியைப் பாடி முடித்த போது ஆபோகியின் தாக்கம் ரசிகரை மட்டுமல்ல, பாடகரையும்தான் கட்டிப் போட்டுவிட்டது. அதனால் ஆபோகியை கைவிட முடியா கலைஞராய் "கிருபாநிதி" என்று அனுபல்லவியில் ஆரம்பித்து, கோபாலகிருஷ்ணபாரதியின் பிரபல பாடலை (சபாபதிக்கு) சஞ்சய் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. கல்யாணி ராகம் எப்படி இரண்டு பிராதன ராகங்களுக்கு இடையில் ஒரு brisk filler-ஆகவும் பாடப்பட்டு, அதே சமயத்தில் பிரதானமாகவும் மிளிர்வதைப் பற்றி முன்பு கூறியிருந்தேன். துக்கடாவாகப் பாடுவதற்கும் ஏற்ற ராகம் கல்யாணி என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாபனாசம் சிவனின் "தேரில் ஏறினான்" பாடலை சஞ்சய் பாடினார் போலும். பாடலின் சங்கதிகள் கண்ணனின் கம்பீர வீதி உலாவை அழகாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதன் பின் பாடிய

2005 டிசம்பரில் கிட்டத்தட்ட 30 கச்சேரிகள் கேட்ட நிலையில், இந்தக் கச்சேரி என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு இணையாக வேறெந்தக் கச்சேரியையும் சொல்லமுடியாது. விறுவிறுப்பு, அபூர்வ ராகங்கள், அபூர்வ பிரயோகங்கள், அழகு சொட்டும் கமகங்கள், நெருடலான கணக்குகள், அற்புதமான பக்கவாத்யங்கள் என்று ஒரே கச்சேரியில் எல்லாம் அமைவது அபூர்வம். அன்று அமைந்தது என் பாக்யம். அடுத்த வருடம் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கலைஞர்களின் கச்சேரி நடை பெருமெனில், நிச்சயம் என்னை அங்கு காணலாம்.

மகேந்திரனின் பட்டப் பெயர்கள், போன மாத திருவையாறு யாத்திரை, இந்த மாத காஞ்சி பயணம் பற்றி எல்லாம் எழுதணும்....பார்ப்போம்.....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 12:52 AM, Blogger Nadopasana said...

Finally!
Thanks for the writeup
:-)

 
At 12:54 AM, Blogger Nadopasana said...

Hi Ram
Can you please let me know the raga of this song which I posted?
http://nadopasana.blogspot.com/2006/02/blog-post_09.html

 
At 2:16 AM, Blogger லலிதாராம் said...

Nadopasana,

Could listen to it only today. It doesn't follow one particular raga and keeps traversing through several scales resembling popular ragas. I wouldn't attach a raga label to the piece.

 
At 7:04 AM, Blogger Nadopasana said...

Thanks Ram

 

Post a Comment

<< Home