Friday, December 30, 2005

To Hell With the Song List.

Dec 23 @ Music Academy, S.Sowmya, Pakkala Ramadas, Neyveli Narayanan, Madipakkam Murali

23-ஆம் தேதி ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகள் இரண்டுமே மியூசிக் அகாடமியில் தேறிவிட (எப்போவாவது ஒரு முறைதான் தேறும்) முதலில் மாண்டலின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சௌம்யாவின் கச்சேரிக்கும் உட்கார்ந்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாண்டலின் ஸ்ர்நிவாஸின் தீவிர ரசிகனான எனக்கு அவர் வாசித்தது மிகவும் பிடித்திருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர் கச்சேரிகளைப் பற்றி கடந்த இரண்ட வருடங்களிலும் எழுதியுள்ளதால் அந்த கச்சேரியைப் பற்றி நாலு வரி மட்டுமே....

ஸ்ர்நிவாஸின் கச்சேரிகளில் எஸ்.டி.ஸ்ர்தர் இல்லாத கச்சேரிகள் சீஸனுக்கு ஏதாவது ஓரிடத்திலாவது அமையும். தகரத்தை தரையில் தேய்ப்பது போல வில்லை போடும் ஸ்ர்தரின் வயலின் இல்லாத இடமாக நான் போவது வழக்கம். இந்த முறை எல்லா இடங்களிலுமே ஸ்ர்தரே வாசித்து என்னை சோதனைக்குள்ளாக்கிவிட்டார். இதற்கு விடிவே இல்லையா? யாராவது ஸ்ர்நிவாஸின் காதில் ஓதினால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இந்திய கிரிக்கெட் அணியிலாவது தமிழகத்தை சேர்ந்த ஸ்ர்ராமுக்கு இடம் கொடுக்கலாம். அவர் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கச்சேரிக்கு வந்து நமது காதை பதம் பார்க்கும் பரோபகாரத்தை ஸ்ர்ராமின் தந்தை ஸ்ர்தர் செய்யாமல் இருப்பார் (என்று நம்பிக்கைதான்). முதல் இரண்டு பாடல்களுக்கு வேகம் வேகம் தொடர்ந்து வேகம் மட்டுமே பிரதானமாக்கி வாசித்த ஸ்ர்நிவாஸும் ராஜேஷும், பின்பு விவேகமாக வாசித்த கௌரிமனோஹரியும், கல்யாணியும் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக கல்யாணியில், நாதஸ்வர பாணிபிரயோகங்களை, ஒரு மீட்டு மீட்டிவிட்டு, அந்த மீட்டலின் அதிர்வு அடங்கும் முன் ராகத்தின் பல இடங்களுக்கு தொடர்ந்து சன்சரித்து, உச்சஸ்தாயியில் நிறுத்திய போது பிரம்மிப்பாக இருந்தது. அதி அற்புதமான pick up-உம் amplification-உம் இருந்தாலொழிய இவ்வாறு வாசிக்க இயலாது. பல்லவி ராகமாலிகையில் ராகவர்த்தினி ராகத்தை சரியாககண்டுபிடித்ததில் எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. (நாலு வரிக்கு மேலேயே ஆயிடுச்சோ?)

ஸ்ர்நிவாஸ் கச்சேரியில் பக்கத்திலிருந்தவரிடம் மியூசிக் அகாடமியின் இந்த வருட சொவினியர் இருந்ததால், சௌம்யா என்ன பாட மாட்டார் என்பதை அந்த லிஸ்டிலிருந்த தெரிந்து கொண்டேன். நீங்கள் சௌம்யாவின் அகாடமி கச்சேரிகளுக்கு முன்னமே சென்றிருப்பின், முந்தைய வாக்கியம் உங்களை ஆச்சரியப்படுத்தாது. நான் சென்ற கச்சேரிகளில் எல்லாம் அந்த லிஸ்டில் இருக்கும் பிரதான ராகத்தை பாடியதில்லை. பிரதான ராகமாக சாவேரியும், தோடியில் ராகம் தான்ம் பல்லவியும் லிஸ்டில் இருந்ததால், காம்போதுயும் பைரவியும் பாடுவார் என்று நினைத்துக் கொண்டேன்.

அட தாளத்தின் யதுகுல காம்போதி வர்ணத்தில் கச்சேரி ஆரம்பமானது. சௌம்யாவின் கச்சேரிகளின் இன்னொரு விஷயம், சில நாட்கள் ஏதோ பாடி ஒப்பேத்தி விடுவார் (ஒன்றேகால் மணி நேரத்தின் முடித்த கச்சேரி ஒன்றிற்கு நான் சென்றிருக்கிறேன்), அலல்து குரல் சில நாட்களின் படுத்தும். அகாடமி கச்சேரிகளில் அப்படி அசிரத்தை யாரும் காட்டமாட்டார்கள் எனினும், அன்றைய தினம் குரலும் நல்ல நிலையில் அமைந்தது வர்ணத்திலேயே தெரிந்தது. சக்ரவாக ராகத்தை கோடி காட்டிவிட்டு 'சுகணுமுலே' பாடி, இரண்டாம் காலத்தில் விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரம் பாடினார். நான் அதுவரை பக்கல ராமதாஸின் வயலினைக் கேட்டதில்லை, நல்ல இனிமையான bowing, கையில் வேகமும் பேசுகிறது. சௌம்யாவின் ஸ்வரங்களுக்கு தக்க ரெஸ்பான்ஸ்களை அள்ளி வீசினார் ராமதாஸ். ஆனந்த பைரவியின் 'மரிவேரே' லிஸ்டில் இருந்ததால், அந்தப் பாடலை மட்டும்தான் பாடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஓரளவு விஸ்தாரமாகவே பாடி, cliche சஞ்சாரங்களைத் தவிர சில அரிய பிடிகள் மற்றும் சில folkish பிடிகளை எல்லாம் பாடினார். அந்த ஆலாபனைக்குப் பின் 'மரிவேரே' பாடினால், அப்புறம் ஒரு ராகம்தான் பாட நேரமிருக்கும் என்று நான் நினைத்திருக்கையில், 'ஹிமாசல தனய' என்ற ஷ்யாமா சாஸ்திரியின் மத்யம கால கிருதி ஆரம்பமானது.

ஆனந்த பைரவியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதி மத்யம கோட்டாவை நிறைவு செய்யும் வகையில் சாரங்காவின் 'எந்த பாக்யமு' விறுவிறுப்பாக பாடி அதற்கு காண்ட்ராஸ்டாக தேவ காந்தாரியின் ஓர் அரிய கிருதி ("ஷீர சாகர", "சீதா வர", "துலசம்மா", "வினராதா" என்று நாம் கேட்கக் கிடைக்கும் எந்த பாட்லும் அல்லாத ஒரு பாடல், பல்லவி சரியாகப் புரியவில்லை, தியாகராஜர் கீர்த்தனையாக இல்லாமலும் இருக்கலாம்) பாடும் போதே அடுத்த ஐட்டம் மெய்ன் பீஸ்தான் என்று புரிந்தது. அதுவரை ஓரளவு லிஸ்டை ஃபாலோ செய்ததால் அடுத்த வரும் சாவேரியை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் வகையில் தோடி ஆரம்பமானது. தோடியில் சில ஸ்வரங்கள் எல்லாம் ரப்பருக்கு ஒப்பாகும், அதை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளுவு இழுத்து அடுத்த ஸ்வரத்துக்குச் செல்லும் போதுதான் ஆலாபனையில் அழுத்தம் ஏற்படும். இதை அழகாகக்ச் செய்து, ராகத்தின் பல சஞ்சாரங்களை அறிமுகப்படுத்தி விஸ்தாரமாகப் பாடி மற்றொரு அரிய கிருதியான "ஸ்ர் சுப்ரமண்யோ" பாடினார். (தியாகராஜரே 30-க்கும் மேலான கிருதிகளில் தோடியின் வெவ்வேறு ஸ்வரூபங்களைப் படப்பிடித்துக் காட்டிவிட்ட நிலையின் எப்போதோ ஒருமுறைதான் 'ஸ்ர் கிருஷ்ணம்', 'ராவே ஹிமகிரி', 'கார்த்திகேய காங்கேய', 'கலி தீர வந்தருள்வாய்' போன்ற பாடல்களைக் கேட்க முடிகிறது. 28-ஆம் தேதி ஒரு லெக்சரில் மாரிமுத்தாப் பிள்ளையின் "எந்நேரமும் காலைத் தூக்கி" என்ற தோடி ராகப் பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு களையில் நல்ல கம்பீரத்துடன் மிளிரும் இது போன்ற கீர்த்தனைகள் வெளியே வருதல் வேண்டும்.") கீர்த்தனையில் கல்ப்னை ஸ்வரங்களுக்குப் பின் தனி நாவர்த்தன்ம் ஆரம்பமானது.

அனுசரணையாக அடக்கி வாசித்த நெய்வேலி நாரயணன், அதிக கணக்கு வழக்கிலெல்லாம் ஈடுபடாமல், சதுஸ்ர நடையை நன்றாக அமைத்துக் கொண்டு மடிப்பாக்கம் முரளியுடன் சேர்ந்து குறைப்பு செய்து கோர்வை வைத்து முடித்த போதுஅரை மணிக்கு மேல் நேரம் இருந்தது. விவர்த்தினியில் கடகடவென 'வினவே ஓ மனசா' பாடி மாயாமாளவ கௌளையை ஆலாபனை செய்தார். ஐந்து நிமிட ஆலாபனையில் பாவமும், பிருகாக்களும் நிறைந்திருந்தன. அவரின் ஆலாபனைக்குச் சற்றும் குறையாமல் வயலிஸ்டிஞ் ரெஸ்பான்ஸும் இருந்தது கச்சேரியை மேலும் மெருகேற்றியது. ராகத்தில் விட்ட இடங்களை தானத்தில் தொட்டுவிட்டு "மாயா தீர்த்த ஸ்வரூபிணி நன்னு ப்ரோவம்மா" என்ற பல்லவியை கண்ட ஜாதி திரிபடை (இரண்டு களை) தாளத்தில் நிரடலான "ஒன்றேகால் இடம் offset" எடுப்பில் (ஒன்பது அக்ஷரம் தள்ளி) பாடி திரிகாலம் செய்தது லய வின்யாசங்களை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். ராகமாலிகை ஸ்வரங்களில் சுநாத வினோதினி, ரேவதி மற்றும் சுருட்டியைப் பாடி பல்லவியை நிறைவு செய்தார்.

பல்லவியைத் தொடர்ந்து மதுவந்தியில் அஷ்டபதியும், கானடாவில் (ஜாவளியோ பதமோ) பாடி மங்களம் பாடும் போது பத்து மணிக்கு முடிக்க வேண்டிய கச்சேரி பத்து நிமிடம் நீண்டிருந்தது.

எனக்கு பிடித்த பெண் பாடகரின் கச்சேரி அன்றைய தினம் அற்புதமாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தபடி வீட்டை நோக்கி வண்டியைச் ச்லுத்தினேன். அடுத்த நாள் சஞ்சயின் கச்சேரி "My concert of the season"-ஆக அமையும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அத்தோடு இந்த சீஸனுக்கு "பவமான" (மங்களம்) பாடி விடுவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 7:24 AM, Blogger Nadopasana said...

Thanks Ram for this review.
Awaiting your review on Sanjay's concert.

Please dont sing mangalam so soon! .You can visit chennai on weekends and write more for our sake
:-)

 
At 10:13 AM, Blogger Balaji Srinivasan said...

//அதற்கு காண்ட்ராஸ்டாக தேவ காந்தாரியின் ஓர் அரிய கிருதி//

A guy in Sangeetham listed it as kshitijA ramaNam. MD Krithi.

 
At 10:11 PM, Blogger Simulation said...

லலிதாராம் அவர்களே. உங்கள் விமர்சனங்கள் விரிவாகவும், விஷயஞானமும் கொண்டதாகவும் உள்ளன.

னீங்களும் பாடுவதுண்டா? அப்படியானால். சென்னையில் பாடும்போது தெரியப்படுத்துங்கள்.

 
At 1:00 AM, Blogger லலிதாராம் said...

நாதோபாசனா,

நான் சஞ்சயின் கச்சேரியைப் பற்றி எழுதும் முன் என் வெகேஷனும், அதன் கூடவே என் சோம்பேறித்தனத்துக்கு நான் கொடுத்திருந்த வெகேஷனும் முடிந்துவிட்டது. இருந்தாலும் இன்னொரு நாள் லீவ் எடுக்க சீமான் சோம்பேறித்தனத்தைக் கேட்டுக் கொள்கிறேன். கூடிய விரைவில் சஞ்சயின் கச்சேரியைப் பற்றி எழுதுகிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

பாலாஜி,

அந்த பாட்டுதான். 'குருகுக'-வை கவனிக்காமல் விட்டுட்டேன் போல இருக்கு.

சிமுலேஷன்,

நான் பாடறவனா இருந்தா ஏண் கச்சேரி கேட்கும் அனுபவங்களை எழுதிகிட்டு இருக்கேன்:-). என்னுடைய இசைத் தொண்டே நான் பாடாமல் இருப்பதுதான்:-)

 

Post a Comment

<< Home