Wednesday, December 28, 2005

இரண்டு கரஹரப்ரியாக்கள்

21 Dec @ Naradha Gana Sabha, Nisha Rajagopal, Charumathy Raghuraman

22 Dec @ Music Academy, Sangeetha Sivakumar, Charulatha Ramanujam

நிஷா ராஜகோபால் சங்கீத குடும்பத்தில் வந்தவர். சிறு வயதிலிருந்து அசுர சாதகம் செய்து குரலை நன்றாக தயார் படுத்திக் கொண்டு அதே சமயத்தில் வேலையிலும் கலக்குகிறாராம். 21-ஆம் தேதி ஹிந்துவில் இப்படி வெற்றிகரமாக இரட்டை மாட்டு வண்டி ஓட்டுகிறவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. 2.00 மணி ஸ்லாட்டில், நான் 4.45-க்கு செல்ல இருந்த மியூசிக் அகாடமிக்கு அருகில் இருக்கும் நாரத கான சபாவில் அவரின் கச்சேரி இருந்ததால், அதிகம் எதிர்பார்ப்பில்லொமல் அரங்கிற்குள் நுழைந்த பொழுது பலமஞ்சரி ராகத்தில் 'சனாதன' பாடிக் கொண்டிருந்தார்.

நிஷா ராஜகோபாலின் குரல் பல பெண் பாடகர்களுக்கு இருபது போல கீச்சு குரலாக இல்லாதது விசேஷம். மந்திர ஸ்தாயியில் நல்ல கனமுடன் மிளிர்கிறது. அன்றைய தினம், நல்ல சளியால் அவதிப்பட்டது கண்கூடக் காண முடிந்தது. மனம் இருந்தால் விதியையே வெல்ல முடியும் என்னும் போது சளியை வெல்ல முடியாதா என்ன? நல்ல பாடல் தேர்வினாலும், பாடிய ராகங்களை தன் குரல் சென்ற இடங்களுக்குள் முழுமையாக பாடியதாலும் கச்சேரி அற்புதமாய் அமைந்தது.

கச்சேரியின் முதல் பாதியில் நல்ல விறுவிறுப்பான காலப்பிரமாணத்தில் அமைந்த 'எடி யோசனாலு' (கிரனாவளி), 'ரா ரா மா இண்டி' (அசாவேரி), 'அபராத' (லதாங்கி), 'ராகா சசிவதன' கீர்த்தனைகளைப் பாடி கச்சேரியில் தொய்வு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொண்டார். சப் மெய்ன் ராகமாக லதாங்கியை ஆலாபனை செய்தார். முதல் பிடியிலேயே லதாங்கி என்று காட்டிவிட்டு படிப்படியாய் ஆலாபனையை வளர்த்து, எட்டாத தார ஸ்தாயியில் மல்லுக்கு நிற்காமல் crisp ஆலாபனையாக அமைந்தது. இந்த சீசனில் எக்கச்செக்க இளஞர்களும் யுவதிகளும் அற்புதமாய் பாடுவது போலவே அற்புதமாய் பக்க வாத்யம் வாசிக்கும் இளைய சமுதாயமும் காணக்கிடைக்கிறது. அவர்களுள், இரண்டு சீசன்களாகவே அக்கரை சுப்புலக்ஷ்மி மற்றும் சாருமதி ரகுராமின் பெயர் அடிக்கடிக் காண/கேட்கக் கிடைக்கிறது. முத்லில் கூறிய்வர்ரின் வாசிப்பை முன்னால் கேட்டுக் களித்திருக்கிறேன் என்றாலும் அடுத்தவரின் வாசிப்பை இன்றுதான் கேட்க முடிந்தது. ரத்தினச் சுருக்கமான ராகப் படப்பிடிப்பாகட்டும், ராக ஸ்வரூபங்களின் காட்டும் முழுமையாகட்டும், படகர் ஆலாபனை செய்யும் போது செய்யும் 'ஃபில் அப்' ஆகட்டும், கல்பனை ஸ்வரங்களில் பாடரை நிழல் போலதொடர்வதாகட்டும், அனைத்திலும் இந்த இரு யுவதிகளின் வாசிப்பில் தென்படுகிறது.

ஆட்டத்தின் கதாநாயகனாக (OR SHUD IT BE NAYAKI?) எங்கே மீண்டும் ஒருய் முறை மத்யமாவதியோ சங்கராபரணமோ வந்துவிடுமோ என்று நான் கவலைப்பப்பட்து போல நடக்காமல் (இந்த சீசனில் இந்த இரண்டு ராகங்களும் விடாமல் துரத்துகின்றன.) அதுவரை சீஸனில் கேட்டிராத கரஹரப்ரியாவை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். கரஹரப்ரியாவில் ரிஷபத்தில் நின்று கொண்டும் அதனைச் சுற்று பல நகாசு வேலைகள் செய்து பாடியதும், நிஷாதத்தில் மெல்லிய அசைவுகளான கமகங்களை நிறைவாக அளித்தபடியும் அழகிய ஆலாபனைஅயி முடித்தார். இவர் தொட்டதையெல்லாம் தொட்டி கொஞ்சம் விட்டதையும் சேர்த்து வாசித்து பலத்த அப்ளாசைப் பெற்றார் சாருமதி.

அன்று அதுவரை பாடிய பாடல்களில் ஒரு பாடலைத் தவிர அனைத்தும் தியாகராஜரின் கீர்த்தனைகளே. கரஹரப்ரியா என்றாலே முதலில் நினைவில் வருவது தியாகராஜரின் 'சக்கனி ராஜ', 'பக்கல நிலபடி' அன்னலது 'ராம நீ சமான' என்ற பாடல்கள்தான். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் மற்ற வாகேயக்காரர்களுக்கு ஓர வஞ்சனை செய்த பாவத்துக்கு உள்ளாவாரே என்று நான் கவலையில் ஆழ்ந்த பொழுது, அதற்கு இடமளிக்காமல், அதிகம் கேட்கக் கிடைக்காத அழகிய பாடலான, பாபனாசம் சிவனின் 'ஸ்ர்நிவாச தவசரணம்' பாடினார். (இதை கே.வி.என் மற்றும் எம்.எல்.வி பாடி கேட்டிருக்கிறேன். அதற்குப் பின் இவர்தான்.) "ஸ்ர் வேங்கட கிரி ரமண" என்ற இடத்தில் நிரவலும் ஸ்வரங்களும் பாடி தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். எனக்கு ஆதி தாளத்தில் தனி ஆவர்த்தனம் புரிகின்ற அளவுக்கு மற்ற தாளங்கள் புரியாததால், அந்த தனியைப் அதிகம் எழுதாவிடினும் உளராமல் இருக்கலாம் என்று விட்டுவிடுகிறேன்.

கர்நாடக காபியில், 'பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்', பீம்ப்ளாசில் (இல்லைனா ஆபேரியோ, கர்நாடக தேவகாந்தாரியோ) 'எப்படிப் பாடினரோ', மற்றும் தேஷ் ராகத்தில் தஞ்சாவூர் சங்கர ஐயரின் 'ராம நாமமே' பாடி இரண்டு மணி நேர கச்சேரியை நிறைவாக அளித்தார். விரைவில் ப்ரைம் ஸ்லாட்டுக்கு முன்னேற பிரார்திப்போம்.

இன்னொரு கரஹரப்ரியா அடுத்த நாள் மதியம் இரண்டு மணிக்கு சங்கீதா சிவகுமாரின் கச்சேரியில் கேட்கக் கிடைத்தது. கச்சேரியை சஹானா வர்ணத்தில் ஆரம்பித்து, நாட்டையில் 'சுவாமிநாத பரிபாலயாசுமாம்' பாடி கல்பனை ஸ்வரம் பாடிய போதும், சங்கீதாவின் குரல் முழுமையாக warm up ஆகவில்லை. கல்யாணி ராகத்தை short and brisk piece-ஆக பலர் உபயோகப்படுத்தியிருப்பதை முன்னமே கூறியிருந்தேன். அவ்வாறு பாடும் போது பெரும்பாலாக பாடப்படும் கீர்த்தனை (செம்மங்குடி fame) 'பிரான வராலிச்சி'. இக்கச்சேரியில் அதையேதான் சங்கீதா எடுத்துக் கொண்டார். கீர்த்தனைக்கு முன் பாடிய breezy ஆலாபனை, கல்யாணியில் upper half-க்கு பிரதானம் அளிக்கப்பட்டது. மேல் ஸ்தாயியில் சில அழகிய கோவைகளைப் பாடிய போதும், அவர் கொடுத்த பிருகாக்கள் அவர் எதைப் பாட நினைத்தார் என்பதை suggest செய்யும் விதமாக இருந்ததே தவிர முழுமையாக காட்டும் விதமாக இல்லை. கீர்த்தனை முடிந்து நிரவல் ஆரம்பித்தவுடன் அவரின் குரல் நன்றாக warm up ஆகியிருந்தது. இவருக்கு பக்க வாத்தியம் வாசித்தவரும் இன்னொரு 'சாரு'-தான். இவரின் வாசிப்பும் முன் கூறியவரின் வாச்சிப்பைப் போலவே கச்சிதமாய் இருந்தது. முதலில் களை கட்டாவிடினும் கல்யாணியின் சௌந்தரியத்தை விறுவிறுப்பாய் கல்ப்னை ஸ்வரங்களில் சங்கீதா அளித்த போது கச்சேரி களை கட்டியது. கல்யாணிக்கு நல்ல contrast-aaka பாவம் சொட்டும் ஹிந்தோளத்தில் 'சாம கான லோலனே' பாடினார்.

குரல் நல்ல நிலையை அடைந்துவிட்ட நிலையில் கச்சேரியின் பிரதான ராகமான கரஹரப்ரியாவை எடுத்துக் கொண்டார். அழகான அளவான கமகங்களை இழைத்த பின், பிருகா மழையில் கரஹரப்ரியாவின் சஞ்சாரங்களைக் காட்டி அரங்கை நனைக்க ஆரம்பித்தார் சங்கீதா. கல்யாணியில் suggestive-ஆக இருந்த பிருகாக்கள் அனைத்தும் கரஹரப்ரியாவில் பூர்ணத்துவம் பெற்று மிளிர்ந்தன. ஆலாபனைக்குப் பின் பாடிய பக்கல நிலபடியின், tried and tested, 'மனஸூன' என்ற இடத்தில் விஸ்தாரமான நிரவலும், கல்பனை ஸ்வரங்களும் பாடி முடித்த போது அரங்கம் அதிர்ந்தது. என் பக்கத்து சீட் மாமா மாத்திரம், "இதுக்கு முன்னாடி நடந்த ரசிகாவோட கச்சேரியிலையும் கரஹரப்ரியாதான் மெய்ன்", என்று அலுத்துக் கொண்டார். ம்யூசிக் அகாடமியில்தான் முதலிலேயே லிஸ்ட் கேட்டுவிடுவார்களே. அப்படியிருக்கையில் எப்படி அடுத்த அடுத்த கச்சேரியில் ஒரே பிரதான ராகத்தை வைத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

ஸ்வரங்களுக்குப் பின் நடந்த மிஸ்ர சாபு தனியைப் பற்றியும் எனக்கு தனியாக ஒன்றும் சொல்லத் தெரியாததால், அதனைத் தொடர்ந்த சாவேரிக்குச் செல்கிறேன். தனி முடிந்த போது கையில் 50 நிமிடம் இருந்ததால் நிச்சயம் ராகம் தானம் பல்லவி பாடுவார் என்று அனுமானத்தேன். என் அனுமானத்தைச் சரியாக்கும் வகையில் சாவேரியை ஆலாபனை செய்தார். குறிப்பாக மேல் ஸ்தாயி ரிஷபத்தில் நின்றும் அதனைச் சுற்றிச் சுற்றியும் அவர் பாடிய சஞ்சாரங்கள் அமர்க்களமாய் இருந்தது. தானம் யாரும் விரிவாகப் பாடுவதில்லை என்ற எனது குறை நீங்கும் வகையில் ராகத்தின் தொடர்ச்சியாய், ராகத்துக்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கு தானமும் பாடி என்னை மகிழ்வித்தார். அவர் பாஅடிய பல்லவி, "கரிமொர வின லேதா ஹரே கிருஷ்ணா". இப்பல்லவியை ஆலத்தூர் சகோதரர்களும், 2003-இல் நாத இன்பத்தில் டி.என்.கிருஷ்ணனும் இசைத்து கேட்டு இருக்கிறேன். 2003-இல் கிருஷ்ணன் ஆதி தாளத்தில் இசைத்ததை சங்கீதா திஸ்ர திருபுடை தாளத்தில், கால் இடம் அதீத எடுப்பில் எடுத்துப் பாடினார். அவர் செய்த த்ரிகாலமும், அதனைத் தொடர்ந்து பாடிய ஸ்வரங்களும் ராகமாலிகையும் விறுவிறுப்பை நன்றாக தக்க வைத்துக் கொண்டன. ராகமாலிகையில் முதலில் பாடிய ராகம் வராளி போல தோற்றம் அளிக்கும் 'விஜய ஸ்ர்' என்று நினைக்கிறேன். அதன் பின் கானடாவும் பெஹாகும் பாடினார். post pallavi pieces-க்கு உட்கார்ந்தால் அடுத்த கச்சேற்ரிக்கு தாமதமாகிவிடும் என்பதால் கிளம்பிவிட்டேன்.

ஓரளவுக்கு சீனியரான சங்கீதா இத்தனை நாளில் ப்ரைம் ஸ்லாட்டுக்கு வராதது ஆச்சரியமே. விரைவில் ப்ரைம் ஸ்லாட் கச்சேரி ப்ராப்திரஸ்து.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 11:07 PM, Blogger Nadopasana said...

Sangeetha Sivakumar :- Is She Sudha's disciple?

 
At 4:12 AM, Blogger சல்மா அயூப் said...

அத்புதமான விமர்சனம். ராக நுணக்கங்களை அதிகம் அலசினாலும், பாந்தமாக இருக்கிறது.

கச்சேரிகளில் பாடப்படும் கிருதிகளில் ராகம் உண்டு; தாளமும் திவ்யமாக இருக்கிறது; கச்சேரிக்காரர்களின் சாரீரமும் இப்போ மைக் உபயத்தில் இழுக்காமல் எடுப்பாக இருக்கிறது. ஆனால், பல கச்சேரிகளில் பாவத்தையே காணோம். (ஸம்ஸ்க்ருத "பா" 4. தமிழ் "பா" 1 தான் இருக்கிறது)

கச்சேரிகள் கவிதைகளாக ஆவது பாவத்தில் தான் இருக்கிறது என்பது என் அபிப்ராயம்

இதைப் பற்றியும் எழுதுங்களேன்.

நன்றி

ஜோதி

 
At 6:12 AM, Blogger rv said...

நன்றி லலிதா ராம்.
ஸ்ரீநிவாச தவசரணம் சுதா பாடிக்கேட்டிருக்கிறேன்.

நாதோபசனா,
//Sangeetha Sivakumar :- Is She Sudha's disciple?
//
அது தெரியவில்லை. ஆனால் அவர் டி.எம்.கிருஷ்ணாவின் மனைவி என்பதும் அவரோட அப்பா வீட்டுக்கு வீடு லூட்டியில் வருவார்னும் தெரியும். :))

 
At 11:18 AM, Blogger Balaji Srinivasan said...

// Sangeetha Sivakumar :- Is She Sudha's disciple? //

illai, Charumathy Ramachandran.

 

Post a Comment

<< Home