Wednesday, December 29, 2004

அரங்கனுக்கு 'ஓ' போட்ட கிருஷ்ணனுக்கு ஒரு 'ஓ'

திருச்சி சங்கரனும், நாகை முரளிதரனும் பக்கவாத்யம் வாசிக்கும் கச்சேரியை flop ஆக்குவதென்பது அமேதியில் ராஜீவ் காந்தியைத் தோற்கடிப்படுதைவிடக் கடினமான காரியம். இந்த இரண்டு ஜாம்பவான்களும் மேடையில் இருந்த பொழுதும், Centre-Stage-ஐ டி.எம்.கிருஷ்ணா தனதாக்கிக் கொண்டார் என்று சொன்னாலே அவர் எப்படிப் பாடினார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த சீஸனில் கிட்டத்தட்ட 15 கச்சேரிகள் கேட்டவிட்ட நிலையில், My Concert of the season என்று தயங்காமல் இதைச் சொல்வேன்.

அட் தாள வர்ணம் ரீதிகௌளையில் விளம்ப காலத்தில் முழங்க அதற்கேற்றார் போல திருச்சி சங்கரன் இடது கை ம்ருதங்கத்தின் தொப்பிப் பகுதியை கொஞ்ச, வலது கை ம்ருதங்கத்தின் வலந்தலையிலிருந்து அவருக்கே உரிய இனிய நாதத்தை எழுப்ப, கச்சேரி வர்ணத்திலேயே களைகட்டிவிட்டது. கிருஷ்ணா அவ்வப்பொழுது புயல் போலப் பொங்குகிறார் அடுத்த நொடியே பூங்காற்றாய் மாறிவிடுகிறார். கன்னட ராகத்தில் 'ஸ்ரீ மாத்ருபூதத்தை' மத்யம காலத்தில் பாடி கல்பனை ஸ்வரங்களை துரிதமான காலப்ரமாணத்தில் பாடி முன்னால் ஒலித்த ரீதிகௌளைக்கு நல்ல contrast கொடுத்தார்.

கன்னடவைத் தொடர்ந்து வந்த முகாரி ஆலாபனையைக் கேட்டவுடனேயே கிளம்பிவிடலாமா என்று கூட நினைத்தேன். அவ்வளவு நிறவாக இருந்தது. முகாரி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது செம்மங்குடி சீனிவாச ஐயர்தான். அவரது சிஷ்யரான டி.எம்.கிருஷ்ணா பாடிய முகாரி would have made his Guru proud. முகாரி என்றாலே மூக்கால் அழ வேண்டும் என்ற வகையில் சிலர் பாடுவார்கள். உண்மையில் முகாரி ஒரு சோகமான ராகம் மட்டுமன்று, தியாகராஜர் சபரியின் ஆனந்தத்தை அந்த ராகத்தில்தான் விவரிக்கிறார். அந்த ராகத்தில் ஒரு மங்களம் கூட அமைத்துள்ளார். அந்த ராகத்தை கிருஷ்ணா பாடும் பொழுது அத்புதம் என்னும் ரஸம் அரங்கெங்கும் பரவியது. ஒரு ஸ்வரத்தை விட்டு இன்னொரு ஸ்வரத்துக்கு ராகம் செல்லும் பொழுது, இரண்டு ஸ்வரங்களும் பிரியும் காதலர்களைப் எத்தனை நிதானமாக பிரிவைத் தள்ளிப் போடுவார்களோ அதைப்போல ஒவ்வொரு ஸ்வரத்தையும் இழுத்து இழைத்து குழைத்ததில் பொங்கிய ராகப்பிரவாகத்தில் கரையாத உள்ளங்களே இருந்திருக்காது. ஆலாபனையைத் தொடர்ந்து கிருஷ்ணா செம்மங்குடியின் favourite-ஆன 'க்ஷீணமை'-யை எடுத்துக் கொண்டாரானால், அவர் செய்த ஆலாபனையுடன் அது சரியாக ஒட்டாதே என்று கவலையின் ஆழ்ந்திருக்கையில், விளம்ப காலக் கிருதியான 'காருபாரு'-வை எடுத்துக் கொண்டு என் மனதில் பாலை வார்த்தார். கீர்த்தனையிலும் ஆலாபனையிலுமே முகாரியின் ராகத்தை முழுவதும் காட்டியாகவிட்டது, பிறகு நிரவல் ஸ்வரம் எல்லாம் பாடியிருந்தால் கச்சேரி கொஞ்சம் தோய்வடைந்திருக்கும். இதனை உணர்ந்த கிருஷ்ணா, சொக்கிப் போய் உட்கார்ந்திருந்த கூட்டத்தை எழுப்ப மத்யம காலத்தில், செம்மங்குடியின் இன்னொரு favourite-ஆன 'பிரான ப்ரோவ'-வை (கல்யாணி ராக ஆலாபனையெல்லாம் இல்லாமல்) பாடி, அதி வேகமாக நிரவல், கல்பனை ஸ்வரம் எல்லாம் செய்தார். நாகை முரளீதரனின் வயலின் கிருஷ்ணாவை நிழல் போலத் தொடர்ந்த, சில சமயத்தில், அவர் பாடாத சில இடங்களையும் தொட்டு அப்ளாஸ் மேல் அப்ளாஸாக வென்று கொண்டிருந்தது. (அப்ளாடிங் க்ளப்பின் முதல் உறுப்பினரே டி.எம். கிருஷ்ணாதான். மிருதங்கத்தையும் வயலினையும் பார்த்து 'பலே சபாஷ் பேஷ் பேஷ்' போன்ற வார்த்தைகளை உதிர்த்தது போக மிச்ச நேரத்தில்தான் பாடினார் என்றுச் சொல்ல வேண்டும்).

இந்தக் கீர்த்தனை முடிந்ததும் பல இரசிகர்கள் speaker volume ரொம்ப அதிகமாக இருப்பதாகக் கூறினார்கள். நான் மேடை டிக்கட் வாங்கி கலைஞர்களுக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டதால் எனக்கு ஒன்றும் சத்தமாகத் தெரியவில்லை. In fact, நடுவில் மின்சாரம் அணைந்த பொழுது கேட்ட இசை மின்சாரம் இருந்த பொழுது கேட்ட இசையைவிட நன்றாக இருந்தது;-)

First course, Second course எல்லாம் முடிந்தபின் Main Course-க்கு வர வேண்டியதுதானே. டி.எம்.கிருஷ்ணா மெய்ன் ராகமாக காம்போதியைத் தொட்டவுடனேயே அவர் 'ஓ ரங்கசாயி'-தான் பாடப் போகிறார் என்பதைப் பலர் ஊகித்திருப்பார்கள். ஆலாபனையை ரொம்பவே நிதானமாய் விஸ்தாரமாய் ஒரு பெரிய ஓவியம் தீட்டுவது போலப் பாடினார். முதலில் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் காம்போதி என்கிற ஓவியத்தின் முதல் புள்ளிகளும் கோடுகளும் மலர்ந்தன, பின்பு படிப்படியாக ஸ்வரம் ஸ்வரமாய் உருவங்கள் மலர்ந்து, அவ்வுருவங்களைச் சுற்றி அலங்காரங்கள் பிறந்து முழுமையடைந்த பொழுது, இதைத் தாண்டி யாரும் காம்போதியின் ஏதாவது பாட முடியுமா என்று கண நேரம் நினைத்திருக்கலாம். முடியும் என்பதைக் காட்டினார் நாகை முரளீதரன். கிருஷ்ணா ஆலாபனையில் ஏற்படுத்திய நிறைவை, இவர் அவர் எடுத்துக் கொண்டதில் பாதி நேரத்திலேயே கொண்டு வந்துவிட்டார். குறிப்பாக, டி.எம்.கிருஷ்ணாவின் ஆலாபனையிலும் சரி, நாகை முரளீதரனின் ஆலாபனையிலும் சரி மேல் ஸ்தாயி காந்தாரத்தில் நின்று கொண்டு பிருகா மழையை உதிர்த்து ராகத்தின் எல்லா எல்லைகளுக்கும் விரைந்தது வெகு ஜோர்! கிருஷ்ணா, மேல் ஸ்தாயி பஞ்சமத்தை இப்போ தொட்டுவிடுவார் தொட்டுவிடுவார் என்று ஆவலாக இருக்கையில், அதைத் தொடாமலேயே விட்ட குறையை நாகை முரளீதரனின் ஆலாபனை பூர்த்தி செய்தது.

திருச்சி சங்கரன் சிறந்த மிருதங்க வித்வானாக இருக்கலாம். ஆனாலும், அவரது திறைமையெல்லாம் பாடகர் என்ன காலப் ப்ரமாணத்தில், என்ன தாளத்தில் விடுகிறாரோ அதில்தானே காட்ட முடியும். இதனை உணர்ந்த கிருஷ்ணா அதி விளம்ப காலத்தில் கிருதியைத் தேர்வு செய்து அரங்கனுக்கு ஓ போட ஆரம்பித்தார், அதாவது, 'ஓ ரங்கசாயி' பாட ஆரம்பித்தார். பல்லவி வரியிலேயே திருச்சி சங்கரன் பல வித்தைகள் காட்டினார். குறிப்பாக பல்லவி முடிவடையும் கடைசி அரை ஆவர்த்தனத்தில் அவர் ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமாகக் கொடுத்த flourish வெகு அற்புதமாக இருந்தது. 'பூலோக வைகுந்தம்' என்கிற இடம் வந்ததும், டி.எம்.கிருஷ்ணா திருச்சி சங்கரனைத் தனி ஆவர்த்தனம் வாசிக்கச் சொன்னார். அதற்கு சங்கரனோ, 'நீங்கள் பாடுங்கள் அப்புறம் வாசிக்கிறேன்' என்று மறுத்தளித்தார். பூலோக வைகுந்தம் என்ற வரியில் நிகழ்ந்த நிரவலும் அதனைத் தொடர்ந்த ஸ்வரப்ரஸ்தாரமும் வைகுந்தத்தை பூலோகத்துக்கே இட்டு வந்தன. வெகு விஸ்தாரமான காம்போதிக்குப் பின் திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தது.

இரண்டு களை ஆதி தாளம், விளம்ப காலத்தில் தனி வாசிக்க கசக்குமா என்ன? (Hardly anybody left the hall when the thani started.)தொப்பி பக்கத்தில் பல இனிமையான நாதங்களை எழுப்பிய deft strokes-யையும், மின்னல் வேகத்தில் பொழிந்து தள்ளிய அவரது வலது கரத்தின் ஆற்றலையும் என் வார்த்தைகளுள் அடக்க முடியாது. அன்ன நடை என்பதா? அழகியப் பெண்ணின் ஒய்யார நடை என்பதா? மதம் பிடித்த யானையின் ஓட்டம் என்பதா? தீவிழித்து சிலிர்தெழுந்த சிங்கமென்பதா?சதுஸ்ர நடையில் பல வித்தைகள் காட்டி பின்பு மிஸ்ர நடைக்கு மாறி அதிலும் பல சாகசங்கள் புரிந்தார். கஞ்சிரா வாசித்த சுந்தர்குமார் (அட அவர் இருததே இப்பொழுதான் தெரிகிறது), தனி ஆவர்த்தனத்தில் எந்த தோய்வும் ஏற்படாத வண்ணம் நன்றாக வாசித்தார். குறையில் கொஞ்சம் திஸ்ர நடைஅயையும் காட்டிவிட்டு, அற்புதமான ஒரு கோர்வையை வைத்து தனி ஆவர்த்தனத்தை சங்கரன் முடித்த பொழுது அரங்கமே அதிர்ந்தது.

அமைதிக்குப் பின் வரும் புயல் போல காம்போதிக்குப் பின் பூர்வி கல்யாணி தொடங்கியது. அப்பொழுதே மணி 6.30-ஐ தாண்டிவிட்டது. 7.00 மணிக்குதான் கச்சேரியை நிறைவு செய்ய வேண்டுமென்று தவறாக நினைத்திருந்த கிருஷ்ணா பூர்விகல்யாணியில் ராகம் தானம் பல்லவி பாட ஆரம்பித்தார். கிருஷ்ணா ராகம் பாடி அதை நாகை முரளீதரன் வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது வந்தார் யக்ஞராமன், ஏதோ சைகையில் சொன்னார். "ஆறரைக்கா? நான் ஏழு-ன்னு நினைச்சேன்" என்று கிருஷ்ணா வழிந்தபடி ஐந்தே நிமிடத்தில் தானம் பல்லவி இரண்டையும் முடித்துக் கொண்டார்.

வர்ணத்தையும் ஒப்புக்குப் பாடிய RTP-யையும் ஒதுக்கிவிட்டல், நான்கே பாடல்களைக் கொண்டு ஒரு கச்சேரி முழுவதும் பாடியிருப்பது தெரியும். பாடிய அனைத்தையும் தீர்க்கமாக, விஸ்தாரமாக எந்த குறையுமின்றி பாடி அந்த மாலை வேளையை ஒரு மறக்க முடியா மாலையாக மாற்றிய கிருஷ்ணாவுக்கும், நாகை முரளீதரனுக்கும், திருச்சி சங்கரனுக்கும் எனது நன்றிகளை உரைத்தபடி, வழக்கமாக செல்லும் 7.30 மணி கச்சேரிக்குக் கூட செல்லாமல் வீடு திரும்பினேன்.

இந்த சீஸனில் சஞ்சய் சுப்ரமணியமும், டி.எம்.கிருஷ்ணாவும் பாடியது போலத் தொடர்ந்து பாடுவார்களேயானால் கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் ஒருவேளை திரும்பி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 1:34 AM, Blogger Ram said...

You are the one (in many) who are always inclined towards sub-standard music given by T.M.Krishna.
I dont have any emotional attachments towards such no-sense music "SUNG" possibly in the worst way it can be. Seems that your touchstone is proving wrong.

 

Post a Comment

<< Home