Tuesday, December 28, 2004

இரட்டை மாட்டு வண்டி

மாம்பலம் சிஸ்டர்ஸ் மாமி டாக்கில் நம்பர் 1 ஆக இருப்பதை முன்னால் கூறியிருந்தேன். 22-ஆம் தேதி மதியம் ம்யூசிக் அகாடமியில் அவர்கள் கச்சேரி இருந்தது. எனக்கும் அன்று மாலை ம்யூசிக் அகாடமிக்கு அருகிலுள்ள நாரத கான சபாவுக்குச் செல்ல வேண்டியிருந்த்தால், கொஞ்சம் முன்னாடியே சென்று மாம்பலம் சிஸ்டர்ஸையும் கேட்ட்டுவிடுவது என்று புறப்பட்டேன். நான் நுழையும் பொழுது 'வல்லப நாயகஸ்ய' என்ற பேகடா ராகப் பாடல் முழங்கிக் கொண்டிருந்தது. எங்கே உட்காரலாம் என்று அந்த முக்கால்வாசிக்கு மேல் காலியாய் இருந்த ஹாலை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது இரண்டு மாமிகள் ரொம்ப serious-ஆக பேசிக் கொண்டிருந்தார்கள். பேசினது அரங்கிற்கே கேட்டதால் என் காதிலும் கொஞ்சம் விழுந்து தொலைத்தது. "ரஞ்சனி - காய்த்ரி பார்த்திருக்கியோ? அவா கச்சேரில, ஒருத்தி புடவையோட பார்டர் இன்னொருத்தி புடவையோட கலரா இருக்கும், இவா ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை கட்டிண்டு இருக்காளே, அதுவும் ·ப்ளாரசண்ட் க்ரீன்ல" புடவை செலக்ஷன் எப்படியானால் என்ன ராக செலக்ஷன் நன்றாக இருந்தால் சரி என்று அந்த மாமிகள் சத்தம் என் காதில் விழா இடமாகப் பார்த்து உட்கார்ந்தேன்.

பேகடாவைத் தொடர்ந்து ரேவகுப்தியில் 'க்ரஹ பலமேமி' ஆரம்பமானது. ஒருவர் பாடுவதைவிட இருவர் சேர்ந்து பாடுவதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒவ்வொரு சங்கதியையும் எத்தனை தடவை பாட வேண்டும் என்று முன்பே முடிவு செய்தி அதற்கேற்றார் போல பயிற்சி செய்து பாட வேண்டும். சபையில் பாடும் பொழுது ஒருவருக்கு திடீரென புதிதாக ஒரு சங்கதி தோன்றினால் அதை உடனே அரங்கேற்ற முடியாது. இதைப் போன்ற சில தடைகளும் இரட்டையர் கச்சேரியில் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இருவர் சேர்ந்து பாடினாலும், கேட்பவர் காதில் ஒருவர் பாடுவது போலத் தோன்ற வேண்டும். மாம்பலம் சகோதரிகள், சித்ரா மற்றும் விஜயலக்ஷ்மி பாடும் பொழுது இரண்டு குரல்கள் தெளிவாகக் கேட்கிறது. இருவர் குரலும் அடிப்படையிலேயே வேறுபடுகிறது. ஒருவருக்கு கனமான சாரீரம், ஒருவர் அதிகம் மூக்கில்தான் பாடுகிறார். இது போதாதென்று கீர்த்தனை பாடும் பொழுதும் இருவருக்கும் slight offset இருக்கிறது. ரேவகுப்தி கீர்த்தனையிலும் வேறு சில இடங்களில் ஒருவர் மேல்ஸ்தாயியிலும் மற்றொருவர் கீழ் ஸ்தாயியிலும் பாடினர். Technically it might have been OK, but was not pleasant to the listener's ears.

இருவரில் யார் விஜயலக்ஷ்மி யார் சித்ரா என்பதை நான் அறியேன். ஆதலால் M1, M2 என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தினத்துக்குரிய பைரவி ராகத் திருப்பாவையைப் பாடிவிட்டு, M2 சுத்த தன்யாஸி ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். தனது ஆலாபனையை crisp-ஆக வைத்துக் கொள்ள எவ்வளவோ மெனக்கெட்டாலும், அவரது கனமான குரல் அவ்வப்பொழுது சற்றே ஸ்ருதியிலிருந்து விலகிய வண்ணம் இருந்தது. அவரைத் தொடர்ந்து வயலினில் வாசித்த ஹேமலதாவோ, இரண்டே நிமிடத்தில் சுத்த தன்யாசியின் சாரத்தை அழகாக வெளிக்கொணர்ந்தார். 15 நிமிடத்துக்குள் ஆலாபனை, கீர்த்தனை, ஸ்வரம் எல்லாம் முடிந்தாகிவிட்டது. விரிவாகவும் இல்லாமல், சிறிய காலத்துக்குள் நிறைவைத் தரும் precision-உடனும் இல்லாமல், நிறைவளிக்கா வண்ணம் சுத்த தன்யாஸி ஏதோ பேருக்கு வந்து, முடிந்தும் விட்டது.

மின்னல் வேகத்தில் மாளவி ராகத்தில் ஒரு தரங்கத்தைப் பாடிவிட்டு சங்கராபரண ராகத்தை M1 தொடங்கினார். பாடகர்களுக்கு வருஷமாக ஆக தொண்டை கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படும். அப்படி ஒரு நிலைமை உண்டானால், பல காலம் பாடமுடியாமல் போய்விடும். ஆனால் M1-க்கோ அதைப் பற்றிய கவலையே இல்லை, தொண்டையே இல்லாவிட்டாலும் கூட அவர் கச்சேரி நடந்துவிடும். ஏனெனில் அவர் பாடுவதற்கு அதிகம் உபயோகிப்பது மூக்கைத் தானே. மேல் ஸ்தாயி ஷட்ஜமத்தை நெருங்கும் பொழுதே குரலில் ஒருவித strain தெரிகிறது, அதற்கும் மேல் பாடும்போதெல்லாம், பாடகருக்கும் கஷ்டம்...கேட்பவருக்கும் கஷ்டம். 'ஸ்வர ராக சுதா' கீர்த்தனையை அழகாகப் பாடினாலும், நிரவல் ஸ்வரம் எல்லாவற்றிலும் ஒருவித அவசரமும், நிறைவின்மையும் இருந்தது. இந்த ராகத்திலும் அழகாக வாசித்து வயலின் வித்வான்தான் அப்ளாஸ்களை அள்ளிச் சென்றார்.

சங்கராபரணத்தைத் தொடர்ந்து 'M1', நவநீத ராகத்தை லேசாக கோடி காட்ட ஆரம்பித்தார். இதில் ஏதோ துக்கடா பாடப் போகிறார்கள் என்று நினைத்தால், ஆலாபனை தொடரந்து கொண்டே இருந்தது. 'சரி இந்த ராகத்தையாவது விஸ்தாரமாகப் பாடுவார்கள்' என்று நாம் எண்ணும் பொழுது பட்டென்று நிறுத்திவிட்டு வயலினுக்கு சான்ஸ் கொடுத்தார் M1. வயலின் ஆலாபனைக்குப் பின், நல்ல குரலுடைய M2 ஆலாபனையைத் தொடர ஆரம்பித்தார். குரலில் நல்ல வளம் இருப்பினும், நவநீதம் போன்ற அபூர்வ ராகத்தைக் கையாளும் பக்குவம் இவருக்கில்லை. அவ்வப்பொழுது ராகத்தை வெளியில் சென்ற வண்ணம் இருந்தார். 'அபூர்வ ராகத்தை அபூர்வமாகப் பாட வேண்டும்' என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம், அந்த ராகங்களைப் பாட அதிகம் உழைத்து, அதில் நல்ல ஆற்றல் வந்த பின், எப்பொழுதாவது பாட வேண்டும் என்பதாகும். "நவநீத கிருஷ்ணனை துதி மனமே ஏகாதஸி நாளாம் இன்று' என்கிற பல்லவி கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், வைகுண்ட ஏகாதசி நாளான அன்று பொருந்தி வருவதால் மட்டுமே ஒரு ராகத்தைப் பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் அபூர்வமே கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. ஆனால், அபூர்வத்தை அலங்கோலப்படுத்துவதைவிட தெரிந்ததை அழகாக பாடுவதே மேல் என்கிற கட்சியைச் சேர்ந்தவன். இரண்டு களை கண்ட ஜாதி திரிபுட தாளத்தில், முக்கால் இடம் தள்ளி எடுப்பு வைத்து, பல்லவியைப் பாடி ராகமாலிகையில், மோகனம், வசந்தா, ப்ருந்தாவனி, சாமா ராகங்களைப் பாடினார்கள். ராகமாலிகை ஸ்வரம் முடிந்து ஸ்வரம் வரும்பொழுது 'வசந்த கிருஷ்ணனை', 'மோஹன கிருஷ்ணனை' என்றெல்லாம் பல்லவியை மாற்றிப் பாடிய பொழுது கூட்டம் ஆரவாரித்தது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடி ஸ்ரீநிவாசனும் (மிருதங்கம்), ரங்காச்சாரியும் (கஞ்சிரா) தனி ஆவர்த்தனம் வாசித்தார்கள் (5 நிமிடத்துக்கும் குறைவாய் இருக்கும் தனியைப் பற்றி தனியாக வேறொன்றும் சொல்வதற்கில்லை). மொத்த ராகம் தானம் பல்லவி, தனி ஆவர்த்தனம் முழுவதும் 25 நிமிடத்துக்குள் முடிந்தேவிட்டது. இரண்டு மணி நேர கச்சேரிகளில் மூன்று ராகத்தை எடுத்துக் கொண்டு, ஒன்றையுமே நிறைவாக பாடாமல் இருந்ததற்கு பதிலாக, ஒரே ராகத்தை விஸ்தாரமாகப் பாடியிருந்தால் கச்சேரி இன்னும் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும்.

நிறைவாக ஆஹிர் பைரவில் ஒரு துக்கடா பாடி, எம்.எஸ்-இன் நினைவாக "வடவரையை மத்தாக்கி' பாடி கச்சேரியை முடித்தனர் மாம்பலம் சகோதரிகள். நானும் விட்டால் போதும் என்று அடுத்த கச்சேரியைக் கேட்க நாரத கான சபாவுக்கு நடையைக் கட்டினேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home