Saturday, December 18, 2004

Mylaopre Fine arts, 4.00 P.M

சென்ற வருட டிசம்பரில் ஆசையாசயாய் எனக்கு விருப்பமான பாடகர்கள் கச்சேரிகளுக்குச் சென்றதில் மிஞ்சியது ஏமாற்றம்தான். பாதி கச்சேரிக்கு மேல் பாடகர் தொண்டையால் ரத்தானது. மீதி கச்சேரியெல்லாம் இருமல், செருமல், கமறலுடன் கலந்து வந்த சங்கீதம் அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. இந்த வருடமாவது, கேட்கும் முதல் கச்சேரி களைகட்டட்டும் என்று, பாடகர்கள் தொண்டையை எல்லாம் நம்பாமல், 'வாத்தியங்களுக்குச் சளி பிடிக்காது' என்ற தைரியத்தில், வீணை காயத்ரியின் கச்சேரிக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

அதே அரங்கில் 3.00 மணிக்கு பாலக்காடு ராம்பிரசாதின் கச்சேரியும் இருந்தது. சாய்ங்காலம் 3.30 மணிக்கு மேல் வீட்டில் இருப்பு கொள்ளாததால், 4.00 மணிக்கே அரங்குக்குச் சென்றுவிட்டேன். அப்பொழுது 'ஸ்ரீ சுக்கிர பகவந்தம்' என்று கண்ட அடை தாளத்தில் பொழிந்து ரசிகர்களை (3.00 மணி கச்சேரி, அதுவும் வாரயிறுதி இல்லாத நாளில், எவ்வளவு பேர் இருந்து விடப்போகிறார்கள்?) கொண்டிருந்தார் ராம்பிரசாத். 'உனக்கு இந்த வருடம் சுக்கிரதிசைதான், நீ கேட்கப் போகும் கச்சேரியெல்லாம் அற்புதமாய் அமையப்போகிறது' என்று உணர்த்தும் வகையில் அப்பாடல் அமைந்ததாய் ஒரு மனப்பிராந்தி. 'பிராந்தி' என்றால் சிறிது நேரத்தில் தெளிந்துதானே போகும்? ராம்பிரசாத் கல்யாணியை ஆலாபனை செய்ய ஆரம்பித்ததும் என் மனப்பிராந்தி எல்லாம் தெளிந்தது. கல்யாணியை பாட ஆரம்பித்த ராம்பிரசாதுக்கு அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை, புள்ளி வைத்து, கோடு போட்டு, இழை இழையாய் இழைத்து, வர்ணம் பூசு, காவி மொழுகி விஸ்தாரமாய் வளர்க்க வேண்டிய மார்கழிக் கோலத்தை, அவசர அவசரமாய் கார்டூனில் 4-5 கோடுகளில் காட்டுவது போல பாடிக் கொண்டிருந்தார். உச்சஸ்தாயியில் பாடும் பொழுதெல்லாம் ஒருவித சிரமத்துடன் பாடிய உணர்வு ஏற்பட்டது. அவர் modulaton-க்காக volume-ஐக் குறைத்துப் பாடுகிறாரா அல்லது அவரது குரலே உச்சஸ்தாயி ரிஷபத்துக்கு மேல் அப்படித்தானா என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனமுட்டும் பிருகா மழை பொழிய ப்ரம்ம ப்ரயத்தனம் செய்தார், தொண்டை கேட்டால்தானே. வெண்கல கலசத்தில் வெள்ளி நாணயங்களை இட்டு கலகலவெனச் சத்தம் எழுப்பினால் விழும் ஓசை போலிருக்க வேண்டிய பிருகா எல்லாம் தேசல் தேசலாய் விழுந்து வாட்டியது. கொஞ்சம் கொஞ்சமாய் கல்யாணியிலிருந்து விலகி என் மனம் அரங்கைப் பார்க்க ஆரம்பித்தது. 53 வருஷமாய் இருந்து வரும் இந்த சபைக்கு 7-8 வருடமாய் நான் சென்று வருகிறேன். இத்தனை வருஷத்தில் ஒரு மாறுதலும் இல்லை. (ரோட்டில் போகும் வாகன இரைச்ச்லைத் தடுக்கவாவது ஏதாவது செய்யலாம், எந்த மஹானுபாவராவது டொனேஷன் கூடிய சீக்கிரம் கொடுக்க வேண்டிக்கொள்வோம்). மத்தியான கச்சேரிகளில் சைகரியம் என்னவெனில் கைகளை வீசி வீசி தாளம் போடலாம், ஜனவர் 1-ஆம் தேதி யேசுதாஸ் கச்சேரியில் கையைத் தூக்கினாலே யார் கண்ணிலாவது குத்தும், அந்த அளவிற்கு கூட்டம் அம்மும். அரங்கெங்கும் co-sposnsor-ஆன RMKV புடவைகளின் பேனர் தொங்குகிறது. மேடைமேல் பரிதாபமாய் 53-ஆம் வருட கலை நிகழ்ச்சியை என்கிற (பழைய) பேனர் தொங்குகிறது. பழைய பேனர் என்றால் முற்றிலும் பழசுஎன்று சொல்ல முடியாது. பேனர் துணி பழையது, அதில் எழுதப்பட்ட எழுத்துக்களில் 95% எழுத்துக்கள் பழையது, 53-இல் இருக்கும் '3' மாத்திரம் புத்தம் புதிய காப்பியய், மற்ற எழுத்துக்களைவிடத் தெளிவாய், "நான் போன வருஷ பேனர்" என்று அறிவித்தவண்ணம் இளிக்கிறது. இவ்வாறு நாம் சுற்றுச் சுழலில் திளைத்திருக்கையில், இன்னும் ஆலாபனையைத் தொடர்ந்தால் கெட்டது குடி என்றி நினைத்தாரோ என்னமோ, சட்டென்று திகஷதரின் 'கமலாம்பா பஜரே' கீர்த்தனையை எடுத்துக் கொண்டார்.

இரண்டு களை ஆதி தாளத்தில் கீர்த்தனை வெகு ஜோராய் ஆரம்பித்தது, பல்லவியில் பல சங்கதிகள் பாடி ஒவ்வொரு முறையும் 'பஜரே' என்னும் பொழுது மிருதங்க வித்வான் 'கும்பகோணம் ராமகிருஷ்ணன்' என்று நினைக்கிறேன், தவறெனில் மன்னித்தருளவும்) கொடுத்த flourish வெகு அற்புதம். கீர்த்தனையை அழகாகப் பாடிவிட்டு 'நித்ய கல்யாணீம் காத்யாயனீம்' என்ற வரியை நிரவலுக்கு எடுத்துக் கொண்டார் ராம்பிரசாத். தார ஸ்தாயியில் அமைந்த வரியை எடுத்துக் கொண்டு அந்த ஸ்தாயியிலேயே பாடிக் கொண்டிருந்தார், கீழே வருவார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், 'வருவேனா பார்' என்று கல்பனை ஸ்வரங்களில் இறங்கி விட்டார். 2-3 ரவுண்டு முதல் காலத்தில் பாடிவிட்டு இரண்டாம் காலத்துக்குத் தாவினார். நன்றாகப் போய் கொண்டிருந்த ஸ்வரப்ரஸ்தாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் முடிந்தும்விட்டது. அதனைத் தொடர்ந்து வந்த தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கக்காரரும் கடவித்வானும் விறுவிறுப்பாக வாசித்தார்கள். ராம்ப்ரசாத் நிரவல் பாடும்பொழுது, 'நித்ய கல்யாணீம்' சமத்தில் ஆரம்பிக்கிறதா அல்லது இடத்தில் ஆரம்பிக்கிறதா என்பது குழப்பமாகவே இருந்தது, தனி ஆவர்த்தனத்தில் அந்த குழப்பமெல்லாம் இல்லாம் இல்லை. நிறைய scope இருக்கும் இரண்டு களை ஆதி தாளத்தில் சௌக்கியமாக வாசித்தனர். தனி ஆவர்த்தனம் முடிந்ததும் கொஞ்சம் துக்கடாவாவது பாடுவார் என்று பார்த்தால், 'கா வா வா' மட்டும் பாடிவிட்டு மங்களம் கூடப் பாடாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

அவசரத்தை தவிர்த்து, கச்சேரிக்கு முன்னால், என்னென்ன பாடலாம் என்றெல்லாம் நன்காராய்ந்து, நல்ல கலவையில் ஒரு list தயாரித்து வைத்துக் கொண்டால் இவரது கச்சேரி நிச்சயம் சோபிக்கும். அடுத்த சீஸன் பார்க்கலாம்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home