Saturday, December 18, 2004

இசை விழா 2004

77 வருடங்களாய் நடந்து வரும் ம்யூசிக் அகாடமி கச்சேரிகள் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்று குழுப்பம் பல நாள் நீடித்து வந்தது.நிச்சயம் நடக்காது என்று பல பத்திரிகைகள் முடிவு கட்டி தெவச மந்திரங்கள் ஓதின. ஒரு கச்சேரிக்கு 2 மணி நேரமே அவகாசம் அளிக்கும் அகாடமி கச்சேரிகளில் எனக்கு அத்தனை விருப்பமில்லை. இருப்பினும், பெரம்பூரில் இருக்கும் நான், மயிலாப்பூரில் உள்ள எந்த சபாவுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ம்யூசிக் அகாடமியைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு டிசம்பரிலும்,ம்யூசிக் அகாடமியைக் கடக்கும் பொழுது, அதன் வளாகம் முழுவதும் ஜன சமுத்திரமாய், கண்கொள்ளா காட்சியாய் இருக்கும். (கூட்டம் இசைக்கா கேண்டீனுக்கா என்பதெல்லாம் வேறு விஷயம்). நேற்று மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸ்-க்குச் செல்லும் பொழுது, டி.டி.கே சாலையும், ராதாகிருஷ்ணன் சாலையும் சேரும் இடத்தில் சிக்னல் சிகப்பாய் மாறி என் பயணத்தை சற்று நிறுத்தி வைத்தது. அந்த இடத்தில் நின்று ம்யூசிக் அகாடமியைப் பார்த்தேன். வளாகமே வெறிச்சோடி களையிழந்து காட்சியளித்தது. என்னதான் அரசியல் என்றாலும் கச்சேரி நடக்காமல் போகுமளவிற்கா என்றெண்ணியவாறே,ஒரு இனம் தெரியாத சோகவுணர்வுடன், வாகனத்தை முசிறி சுப்ரமண்ய ஐயர் சாலைக்குச் செலுத்தினேன். மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் ஈ.காயத்ரி தர்மவதி ராகத்தை இழைத்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு கத்தை பேப்பரை விநியோகம் செய்யஆரம்பித்தார். ஒவ்வொரு வரிசையிலும் வலப்பக்க முனையில் அமர்ந்திருப்பவரிடம் 20-25 பேப்பரைக் கொடுத்து 'pass' செய்யச் சொன்னார்.நம்மவர்கள் அதை அமைதியாகச் செய்வார்களா என்ன? மொட மொடப்பான பேப்பர் நமது ரசிகர்களின் கையில் அகப்பட்டு சலசல வென்று கதற ஆரம்பித்துவிட்டது. இது என்னடா கச்சேரி கேட்க இடைஞ்சலாய் என்று பேப்பரைப் பார்த்தால், www.kutcheribuzz.com எல்லா வருடமும் அற்புதமாய் செய்வதுபோல், இந்த வருடமும் இசை விழாவைப் பற்றி வெளியிடும் 'daily update' பேப்பரைத்தான் இப்படி விநியோகித்திருக்கிறார்கள். சென்ற வருடம் இதை கச்சேரி ஆரம்பிக்கும் முன்பே சபை வாசலில் விநியோகம் செய்தார்கள். இந்த வருடம் என்ன் ஆயிற்றொ தெரியவில்லை.

ஏற்கெனவே அரங்கில் சுமாரான sound system, அதிலும் கடைசி வரிசைக்கு அருகில் உட்கார்ந்தால், கல்யாணியில் சுத்த மத்யமத்தைக் கலந்தாற் போல் காதில் விழும் வாகன இரைச்சல் வேறு, இதெல்லாம் போதாதென்று அரங்கினுள்ளும் தொந்தரவா என்று பற்றிக் கொண்டு வந்தது. அப்பொழுது, என் அருகில் அமர்ந்திருந்தவர் கையில் 'sangeetha kalaanidhi for Vellore Ramabadhran' என்ற கொட்டை எழுத்து வரி கண்ணில் பட்டது. ம்யூசிக் அகாடமியில் கச்சேரியில்லாமல், விருது மாத்திரம் எப்படிக் கொடுப்பார்கள், இந்த செய்தி உண்மையா பொய்யா என்றறிய கை பரபரத்தது. காயத்ரியாவது வீணையாவது தர்மவதியாவது, முதலில் பேப்பரைப் பார்ப்போம் என்று முண்டியடித்துக் கொண்டு நானும் ஒரு பிரதியை வாங்கிக் கொண்டேன். டிசம்பர் 19-ஆம் தேதி முதல் அகாடமியில் கச்சேரிகள் தொடர்ந்து, ஜனவரி
4-ஆம் தேதி வரை நடை பெறும் என்ற செய்தி எனைப் பார்த்துச் சிரித்தது.செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஆனால் நிச்சயம் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்தது.

வேலூர் ராமபத்ரன் ஒரு சீனியர் வித்வான். மதுரை மணி ஐயர் காலத்திலிருந்து இன்றைய இளம் வித்வான்கள் வரை அனைவருக்கும் வாசித்தவர். பாடகருக்கு இடைஞ்சல் இல்லாமல், தன்னுடைய கோபங்களையெல்லாம் மிருதங்கத்தின் மேல் காட்டாமல், சர்வலகுவாய் வாசித்து கேட்பவர் காதில் குளுமையேற்றுவதில் வல்லவர். மதுரை மணி ஐயருக்கு இவர் வாசித்த கச்சேரிகளில் இருக்கும் சௌக்கியம் அலாதியானது. இந்த வருட சங்கீத கலாநிதி ஒரு பழுத்த (சீனியரான-ன்னு எத்தனை தடவை சொல்றதாம்!) ம்ருதங்க வித்வானுக்குக் கிடைத்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

வேறென்ன? தாரணி வருடம், மார்கழி மூன்றாம் நாள், சுபயோக சுபதினமான இன்று சங்கீத உலகுக்கு சந்தோஷமளிக்கக் கூடிய நல்ல செய்தியுடன் இந்தப் பதிவைத் தொடங்கியாயிற்று. இனி, நிதமும் நான் செல்லும் கச்சேரிகளைப் பற்றிய பதிவுகள் (என் சோம்பேறித்தனம் தடுக்காவிடில்) தொடரும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 12:06 PM, Blogger லலிதாராம் said...

test

 
At 5:30 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

>>>>
இனி, நிதமும் நான் செல்லும் கச்சேரிகளைப் பற்றிய பதிவுகள் (என் சோம்பேறித்தனம் தடுக்காவிடில்) தொடரும்
<<<<<<

இந்தக் கதையெல்லாத்தையும் வேற யார்க்கிட்டயாவது வச்சுக்க வாத்யாரே. ஒழுங்கு மருவாதியா சோம்பேறித்தனமா அப்டீன்னான்னு கேட்டுக்கிட்டே தினமும் ஒரு தடவையாவது எழுதிரணும். இங்க, நாங்கெல்லாம் காய்ஞ்சுட்டுக் கிடக்கிறது தெரியுதுல்ல?

சைதாப்பேட்டை அடியாளைத் தேடியபடி,
மதி

 
At 5:33 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Ram,

Add your blog to 'Thamizmanam'

http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php

And pls copy &paste the code therein, in your blog.

This way, ppl would know that there is a carnatic music blog. There is a Mr.Kannan from Bangalore who has a blog in Rediff, which talks abt music in general and carnatic music in particular. - this is just fyi.

anpudan,
Mathy

 
At 2:23 AM, Blogger Ram said...

Good. Keep it UP.

 

Post a Comment

<< Home