Saturday, December 18, 2004

Mylapore Fine Arts - 6.00 PM

சபா கேண்டீனில் நெய் வழியும் அசோகா அல்வாவை (ஏதோ பளபளப்பாய் பிசுபிசு வென்று இருந்தது, அதை நெய் என்று நினைத்துக் கொள்வதில்தான் என்ன முழிகிவிடப் போகிறது) ஒரு பிடி பிடித்துவிட்டு, கச்சேரி ஆரம்பிக்க அரை மணி இருந்ததால், அங்கிருந்த ஸ்டால்களில் மேய்ந்தேன். சமுத்ரா என்றொரு பத்திரிகை ஸ்டால், (பெரும்பாலும்) போன வருஷம் இருந்த அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். காசெட் ஸ்டல்களில், எம்.எஸ்- இன் ஒலிநாடாக்களுக்காக தனி டேபிள். 3-4 வருடங்களாய் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. டிசம்பரில் நடக்கும் பல நூறு கச்சேரிகளில், பிரபல கலைஞர்களின் ஒரு கச்சேரியாவது ஒலிநாடாவாகவோ, சி.டி-யாகவோ வெளிவருகிறது. டி.எம்.கிருஷ்ணா, சஞ்சய், உன்னிகிருஷ்ணன், அருணா சாய்ராம் போன்றோரின் 'live concert cassettes/CDs'-ஐப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. போன தலைமுறை பாடகர்கள் பாடிய விதத்தைப் பற்றி கேள்விப்படதான் முடிகிறதே தவிர, அவர்கள் எப்படி பாடினார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சில ரெக்கார்டிங்குகளே நமக்கு கிடைக்கிறது. ஜி.என்.பி 10 நிமிடத்தில் பாடிய வாசுதேவயனி ரெக்கார்ட், அந்த காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. ஆனால், அவர் கச்சேரியில் எத்தனையோ முறை அந்த பாடலைப் பாடியிருக்கிறார் என்பதை கேள்விப்படத்தான் முடிகிறதே தவிர அப்பாடலைல் கேட்க முடிவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்! சரியாக ஆறு மணிக்கு 'டாண்' என்று ராகமாலிகை வர்ணத்துடன் வீணை காயத்ரியின் கச்சேரி ஆரம்பமானது. 'மணிரங்கு' - பிரபலமாகாத அழகிய ராகம். மத்யமாவதியின் நெருங்கின உறவினன்(ள்?), அதை 2-நிமிடத்தில் ஒரு sketch காட்டிவிட்டு, 'பரதேவதே' என்ற பாபநாசம் சிவனின் கீர்த்தனையை வாசித்தார். கச்சேரிகளில் 'களை கட்டுதல்' என்று ஒன்று இருக்கிறது. 'களை கட்டுதல்' என்றால் என்னவென்று கேட்டால், அதை வர்ணிப்பது கடினம். ஆனால் ஒரு கச்சேரியை எப்படி களை கட்ட வைப்பது என்று கேட்டால், அதற்கான விடை ரொம்ப சுலபம். தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளில் ஒன்றை வாசித்தால் போதும், கச்சேரி நிச்சயம் களை கட்டிவிடும். விறுவிறுப்பு என்பது வேறு வேகம் என்பது வேறு. ஒரு கச்சேரி களை கட்ட வேகம் தேவையில்லை, விறுவிறுப்பே தேவ. காயத்ரி, பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'சாதின்சனே' என்ற ஆரபி ராகக் கிருதியைக் விறுவிறுப்பாக வாசித்தார்.

தர்மவதி ஒரு இனம் தெரியாத சோகம் கலந்த ராகம். அதை sub-main-ஆக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். முதலில் நிறுத்தி நிதானமாக இழத்து, குழைத்து ஆலாபனை செய்தும், பிறகு மின்னல் வேகத்தில் சில பிரயோகங்கள் வாசித்தும் ராக சௌந்தர்யத்தை அழகாக வெளீப்படுத்தினார். ஆலாபனையைத் தொடர்ந்து தீக்ஷதரின் 'பரந்தாமவதி' என்ற பாடலை எடுத்துக் கொண்டார். தீக்ஷதர் ஒரு வைணிகர். அவர் அமைத்த கிருதியை வீணையில் கேட்க எப்படியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்? கீர்த்தனையும் அதைத் தொடர்ந்து வந்த கல்பனை ஸ்வரங்களும், ஒரு இனிய மாலைப் பொழுதில் மழை விட்டு, லேசான தூறல் மட்டும் இருக்கும் வேளையில், குளிரும் வெய்யிலும் கலந்து எழுப்பும் ஒரு ஏகாந்த உணர்வை ஏற்படுத்தின.

ஒரு mood-ஐ உருவாக்கினால் போதுமா? அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டாம்? மேற்கூறிய உணர்வை வெளிப்படுத்த ரீதிகைளையை விட எந்த ராகம் பொருந்தும்? அந்த ரக்தி ராகத்தை இழைத்து இழைத்து, 'ஜனனி நினுவினா'-வை உருவாக்கியிருக்கிறார் சுப்பராய சாஸ்திரி. அந்தப் பாடலை அதி-விளம்ப காலத்தில் கேட்கக் கேட்கத் திகட்டா வண்ணம் வாசித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். கச்சேறி களை கட்டி, mood-உம் உருவாக்கியாகிவிட்டது, பிறகென்ன? main-ஐ எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?

இந்திய இசையின் தனிச்சிறப்பே கமகங்கள்தான். குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போல, ஸ்வரங்களை அசைக்கும் பொழுது பிறக்கும் இனிய நாதங்களே இந்த கமகங்கள். கமகங்களை வெளிப்படுத்த வீணையைவிட சிறந்த வாத்தியம் ஏதுமில்லை. கமகம் என்பதை விளக்க தோடியின் காந்தாரம் ஒன்றே போதும். வீணையும் சுகம், தோடியும் சுகம், கமகமும் சுகம். மூன்றும் கலந்தால்? புலிக்குப் பூனையா பிறக்கும்?

காயத்ரி வாசித்த தோடி ஆலாபனையை குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் கொலுவிருக்கும் பெண்களுக்கிணையாகச் சொல்லலாம். அந்த சிற்பங்களில் இருக்கும் நுணுக்கமெல்லாம் தோடியில் கலந்தளித்தார். ஆலாபனை, நிரவல், ஸ்வரம் போல தானம் என்றொரு ஐட்டம் உண்டு. 'ஆ- நன் - தம்' என்ற ஒலிகளைப் பிரதானமாகக் கொண்டு வரும் இந்த semi-rhythamic-syllables, நமது இசையின் மற்றொரு தனிச்சிறப்பு. இன்றைய நிலையில், ராகம் விஸ்தாரமாகப் பலர் பாடுகிறார்கள். பலர் நிரடலான தாள அமைப்பில் பல்லவி பாடுகிறார்கள். பலர் அற்புதமாய் ஸ்வரம் பாடுகிறார்கள். ஆனால் இந்த தானம் மாத்திரம் பிரதானமாக அவர்களுக்கு ஏனோ படுவதில்லை. தானம் is at its best when you play it with a stringed instrument, in particular, the veeNaa. தோடி ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானம் அரங்கை நிரப்பியது. தூறலாய் ஆரம்பித்து, வெள்ளப் பெருக்காய் விரிவடைந்து, தோடி, பூர்வி கல்யாணி, காபி, சாரமதி, கானடா என்று ராகமாலிகையாய் மலர்ந்து ரசிகர்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது அந்தத் தானம். தானத்தை தொடர்ந்து கீர்த்தனை ஆரம்பமாகியது. தோடியில் எவ்வளவோ கீர்த்தனைகள் இருக்கின்றன. தியாகராஜர் மாத்திரம் 30-க்கு மேல் தோடியில் பாடலமைத்துள்ளார். இதையெல்லாம் மீறி ஏதோ ஒரு அபூர்வ தோடி கிருதியை எடுத்துக் கொண்டார். அபூர்வம் என்பதற்காக அழகிலாமல் போய்விடவில்லை. இரண்டு களை ஆதி தாளத்தில், 3/4 இடம் எடுப்பில் அமைந்த பாடல் நன்றாகவே இருந்தது.

கச்சேரி முழுவதும் பக்கபலமாய் வாசித்து வந்த மாதிரிமங்கலம் ஸ்வாமிநாதன், தனி ஆவர்த்தனத்துக்கு வாய்ப்பு வந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் போலும். என்ன கோபமோ தெரியவிலை, வேகமாய் வாசிக்கிறேன் பேர்வழியென்று அடித்து நொறுக்கிவிட்டார். மிருதங்கம் வாயிருந்தால்தான் அழுமா என்ன? வாயில்லாமலே அழுததை நேற்று காண/கேட்க முடிந்தது. இது வரையில் பெண் கட வித்வானைக் கண்டதில்லை. நேற்று சுகன்யா ராம்கோபால்தான் நன் பார்த்த முதல் பெண் கட வித்வான். மிருதங்கக்காஅரைப் பார்த்து வேகத்தில் மோகம் கொள்ளாமல் ஔக்கியமான காலப்பிரமாணத்தில் அழகாக வாசித்தார். தனி ஆவர்த்தன்ம் சிறிது நேரம் கண்ட கதியில் மாறி பின்பு சதுஸ்ரத்துக்கு வந்து முத்தாய்ப்புடன் இனிதே முடிந்தது.

தனி ஆவர்த்தனம் முடிந்தவுடன் ஒருவர் மைக்கைப் பிடித்தார். இதென்னாடா இது வம்பு? இத்தனை வருஷமா கசேரிக்கு நடுவில் பேசும் பழக்கமெல்லாம் இல்லையே, இந்த சபையும் கெட்டதா?, என்று நினைத்துக்கொணேன். 'கச்சேரிக்கு நடுவில் பேசுவதற்கு மன்னிக்கவும்', என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவுடன், அரை மணியாவது பேசப் போகிறார் என்று நினைத்தேன். பேசியவர் ரத்தினச் சுருக்கமாய், ஈ.காயத்ரி எம்.எஸ்-இன் நினவாய் வருடா வருடம் போட்டி நடத்த 10,000 ரூபாய் கொடுத்ததை மாத்திரம் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார். கச்சேரியின் கடைசி அரை மணி நேரத்தில் எம்.எஸ் ஹிட்ஸ்களைக் கொண்டு ஒரு மினி-கச்சேரி நடத்தினார் காயத்ரி. 'ப்ரூஹி முகுந்தேதி', 'காற்றினிலே வரும் கீதம்', மாலைப் பொழுதினிலே, 'வடவரையை மத்தாக்கி', 'எந்த மாத்ரமு', 'பாவயாமி கோபால பாலம்' என்று அவர் வாசித்த ஒவ்வொரு பாட்டிற்கும் ஏகப்பட்ட அப்ளாஸ். அவர் குறையொன்றுமில்லை வாசித்த பொழுது, ரசிகர்கள் மனதில் குறையொன்றுமிருந்திருக்காது என்பது நிச்சயம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 5:21 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க வாங்க! இப்பவாவது வலைப்பதிவொன்றைத் தொடங்கி இதையெல்லாம் என்ன மாதிரி காய்ஞ்சு கிடக்கிற ஆசாமிகளோட பகிர்ந்துக்கணும்னு தோணிச்சே. சென்னைல இருக்கிற 20 நாளோட நிறுத்திராம தொடர்ந்து எழுதுங்கப்பா...

அன்புடன்,
மதி

 

Post a Comment

<< Home