Thursday, December 23, 2004

விளைந்த பயிர்

21/12/2004, Sanjay Subramaniam @ Indian Fine arts, 7.30 P.M

விளையும் பயிர் முளையிலேயே தெரியுமாம்? முளையில் தெரிந்த பயிர்கள் அனைத்துமே விளைந்துவிடுகின்றதா என்ன? அதுவும் சங்கீதத் துறையில் ஆயிரத்தில் ஒரு பயிரைக் காண்பதே அபூர்வம். அந்தச் சிலரில், சில வருடங்களுக்கு முன் முளையிலேயே தெரிந்த பயிராக இருந்த சஞ்சய் இன்று விளைந்த பயிராய் விருந்தளிக்கும் சஞ்சய் சுப்ரமண்யமும் ஒருவர். சில மாதங்கள் முன்பு சஞ்சயின் கச்சேரியை பெங்களூரில் கேட்டேன். பெங்களூர் பனியானாலோ என்னவோ தெரியவில்லை, குரல் எக்கச்செக்கமாய் மக்கர் செய்து அடிக்கடி ஸ்ருதியிலிருந்து விலகிய வண்ணம் இருந்தது. இதனாலேயே அன்று பாடிய எந்த ஒரு ராகமும் நிறைவாகவில்லை. ஆனால் நேற்றைய கச்சேரியின் theme பூர்ணத்துவம் என்றால் அது மிகையாகாது. 5 நிமிடம் பாடிய பேகடா ஆலாபனையாகட்டும், விஸ்தாரமாய் பாடிய கேதார கௌளை ஆலாபனையாகட்டும், பாடிய விதத்தில் ஒரு completeness இருந்தது. இன்னும் கொஞ்சம் பாடியிருக்கலாமே என்ற எண்ணம் துளியேனும் எழவில்லை.

சஹானா ராகத்தில் அமைந்த 'கருணிம்ப' வர்ணத்தைத் தொடங்கிய பொழுதே ஒரு relaxed ambience உருவாகிவிட்டது. சஹானாவைத் தொடர்ந்து சஞ்சய் ஸ்ரீ ராகத்தை ஆரம்பித்த பொழுது, இன்று ரோலர் கோஸ்டர்ல் எல்லாம் போகப் போவதில்லை, நல்ல வேலைப்பாடுகள் கொண்ட ரதத்தில் கம்பீரமாய் பவனி வரப்போகிறோம் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். விளம்ப காலத்தில் அமைந்த பாடலில், பல்லவி வரியில் வரும் 'ஸ்ரீ ஸாரஸ பதே ரஸ பதே ஸபதே பதே பதே' (சாஹித்யமும் லய விவகாரமும் கலந்து, ஸாரஸபதே என்கிற வார்த்தையை ஒவ்வொரு எழுத்தாய்க் குறைத்து, அர்த்தமும் கெடாம அமைந்திருக்கும் தீக்ஷதரின் கீர்த்தனையில்தான் எத்தனை அழகு!!!) என்கிற வரியை துரிதகாலத்திலும் பாடிய விதம் வெகு அழகாக இருந்தது.
சுத்த மத்யம ராகங்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் பிரதி மத்யம ராகங்களை மிஞ்சிவிடலாம், அழகில் நிச்சயம் பிரதி மத்யம ராகங்களை மிஞ்ச முடியாது என்பது என் எண்ணம். (என் எண்ணம் மட்டுமே, நிறைய பேருக்கு இதில் மாற்றுக் கருத்திருக்கலாம்). ஸ்ரீ ராகத்துக்குப் பிறகு ஒரு பிரதி மத்யம ராகம் பாடுவார் என்று நான் நினைத்திருக்கையில், சஞ்சய் பேகடாவை ஆரம்பித்ததில் கொஞ்சம் ஏமாற்றம். அந்த ஏமாற்றம் எல்லாம் சஞ்சயின் ஆலாபனையில் கரைந்தோடியது. சஞ்சயின் வாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு ஸ்வரத்தையும் ஸ்ரீராம்குமாரின் வயலின் நிழல் போலத் தொடர்ந்தது. ஆலாபனை மற்றும் ஸ்வரப்ரஸ்தாரத்தின் பொழுது ஸ்ரீராம்குமார் கொடுத்த response அவரது திறைஐயைப் பறைசாற்றும் விதமாக இருந்தது. சஞ்சய், பேகடாவில் தியாகராஜரின் 'நாதோபாசனா' கிருதியைப் பாடிவிட்டு, தோடியை sub-main-ஆக எடுத்துக் கொண்டார்.

சஞ்சயின் தோடி ஆலாபனை, அதனைத் தொடர்ந்து வயலின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பாபநாசம் சிவனின் 'தணிகை வளர் சரவணபவா' என்ற கிரிதி, கல்பனை ஸ்வரம் எல்லாம் அரை மணிக்குள் முடிந்து விட்டது. தோடி என்னும் பிரவாகத்தில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் முங்கி முத்தெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இங்கு சிக்கல் என்னவென்றால், நிறை நேரம் பாடியும் திருப்தி ஏற்படாமல் போகக்கூடிய சாத்தியக்கூறு இந்த ராகத்தில் ரொம்பவே அதிகம். அரை மணியில், ஒரு சிறந்த சிறுகதைக்குரிய precision-டன் தோடு அரங்கெங்கும் புரண்டோடி மிளிர்ந்தது.

இத்தனை அற்புதமாய்ப் பாடும் சஞ்சய் சாஹித்யத்தை மாத்திரம் கொஞ்சம் புரியும்படி பாடிவிட்டாரானால், அவரைப் பிடிப்பதற்கு ஆளில்லை. பாடலில் சங்கதிகள் பாடுவதென்பது கம்பியில் நடப்பது போல. ஒவ்வொரு சங்கதியிலும் ராகத்தின் உருவம் விரிவடைந்துகொண்டே போக வேண்டும். ஆனால், அப்படி ராகம் விரியும் பொழுது சாஹித்யமும் குலையாமல் இருக்க வேண்டும். சஞ்சயின் சங்கதிகளில் ராகம் அற்புதமாய் விரிகிறது, ஆனால் சாஹித்யம் செமர்த்தியாய் அடி வாங்கிக் குலைகிறது. நாகநந்தினி (என்கிற சற்றே அபூர்வமான) ராகத்தில் 'ஸத்தலேனி' என்ற பாடலை 'வட்டலேனி' என்று (தோராயமாய் அனுமானித்து) குறித்துக் கொண்டேன். வீட்டிற்கு வந்து புத்தகத்தில் பார்த்தால் 'ஸத்தலேனி' என்றிருக்கிறது.

நாகநந்தினியைத் தொடர்ந்து கேதாரகௌளையை main ராகமாய் எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். பிருகா பிருகா என்றொரு சமாசாரம் இருக்கிறதே, அதைப்போல டேஞ்சர் ஆசாமி உலகத்தில் இல்லை. இவர் ஒன்று எத்தனை பிரயாசைப்பட்டாலும் வரமாட்டார். அப்படியே வந்துவிட்டாரானால், தன் அளவறிந்து நடக்கமாட்டார். அதுவும் கேதாரகௌளை போன்ற ரக்தி ராகங்களில் அவர் இல்லையென்றால் ஆலாபனை தோய்வடைந்துவிடும், அவரின் இருப்பு அதிகமாகிவிட்டால் ராக பாவம் போய்விடும். இதையெலலம் உணர நிறய கச்சேரி கேட்டிருக்க வேண்டும். சஞ்சயின் அன்றைய கச்சேரியை மாத்திரம் கேட்டவர்கள், சஞ்சய் effortless-ஆக ஒரு அற்புதக் கலவையை உருவாக்கி கேதாரகௌளையைப் பார்த்து, இந்த பிருகாவைக் கையாள்வது ரொம்பவே சுலபம் என்றெண்ணியிருக்க மாட்டார்கள். ஆலாபனையைத் தொடர்ந்து, 'சரகுண பாலிம்பவை' நன்றாக இழைத்து இழைத்துப் பாடிவிட்டு (Is there an alternative/equivalent way of expressing இழைச்சுப் பாடறது? Not that I know of.) இரண்டு களை ஆதிதாளத்தில் முக்கால் இட எடுப்பில் பாடிய கல்பனை ஸ்வரங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக, விளம்ப காலத்தில் பாடிய ஸ்வர்ங்களை, முதலில் சதுஸ்ர நடையில் ஆரம்பித்து, கடைசி அரை ஆவர்த்தனைத்தை திஸ்ர நடைக்கு மாற்றி சாஹித்யத்துக்கு வந்தது வெகு அழகாக இருந்தது. இந்த சீஸனில் நடந்த கச்சேரிகள் அனைத்திலும், கல்பனை ஸ்வரம் பாடும் பொழுது, முதலில் சில ரவுண்டு சாஹித்யத்தின் எடுப்புக்குப் பாடிவிட்டு, குறைப்பு பாடும் பொழுது சமத்துக்கு வந்துவிட்டார்கள். சஞ்சய் அன்று பாடிய கேதாரகௌளை கல்பனை ஸ்வரங்களில், குறைப்பை 3/4 இட எடுப்புக்கே பாடி, தனது லய விந்யாசத்தையும் அற்புதமாய் வெளிப்படுத்தினார்.

கல்பனை ஸ்வரத்துக்குப் பின் தஞ்சாவூர் முருகபூபதி ஒரு short and sweet தனி ஆவர்த்தனம் வாசித்தார். அதிக ஜிகினா வேலைகள், அதீதமான வேகமெல்லாம் இல்லாமல், ஆங்காங்கே கொஞ்சம் மிஸ்ரம், கொஞ்சம் திஸ்ரம் எல்லாம் தொட்டுக் கொண்டு அழகாக வாசித்தார். கடைசியில் வைத்த கோர்வை ரொம்பவே சாதாரணமாக இருந்தது, கொஞ்சம் complex-ஆக வைத்திருக்கலாம். தனி ஆவர்தனத்துக்குப் பின் சுசரித்ரா ராகத்தின் சாயையைக் காட்டிவிட்டு கோடீஸ்வர ஐயரின் 'வேலும் மயிலும்' கீர்த்தனையைப் பாடினார். (இதுவும் புத்தகத்தைப் பார்த்துதான் புரிந்தது.) கமாஸ் ராகத்திலும், யமுன கல்யாணியிலும் துக்கடா பாடிவிட்டு. பைரவியில் பரமசிவனின் மேல் ஒரு விருத்தம் பாடினார், அதனை ஸ்ரீராம்குமாரும் அழகாக வயலினில் follow செய்ய, விருத்தம் ஹிந்தோலத்தில் தொடர்ந்தது. ஆனால், விருத்தத்தின் நாயகன் இப்பொழுது நாரயணனாக மாறிவிட்டார். இதென்னடா புதுமை என்று நான் வியந்து கொண்டிருக்கையில், 'மா ரமணன்' ஈர்த்தனையை ஆரம்பித்தார். சிவன், விஷ்ணு இருவர் மேலும் எழுதப்பட்ட பாபநாசன் சிவன் கீர்த்தனையை சஞ்சய் எடுத்துக் கொண்டவுடந்தான், அந்த விருத்தத்தின் காரணம் புரிந்தது.

concert review என்று சொல்லிவிட்டு குற்றம் கண்டுபிடிக்காவிட்டால் எப்படி? கச்சேரிக்கு 200 ரூபாய் டிக்கெட் வாங்கிப் போகும் ஆசாமிகள் மிகக் குறைவு. 30 ரூபாய் டிக்கெட்டுக்குதான் கூட்டம் அதிகமிருக்கும். ஜெர்மன் ஹாலில் முப்பது ரூபாய் டிக்கெட்டுக்குரிய கடைசி வரிசைகள் முழுவதும் பல தகர நாற்காலிகள் நெருக்கி நெருக்கிப் போடப்பட்டுள்ளன. இதனால், ரசிகர்களின் ஒவ்வொரு அசைவின் பொழுதும் தகரம் தரையின் கிரீச்சிடும் நாராசம் நமை இடைஞ்சலில் ஆழத்திக் கொண்டே இருக்கிறது. அடுத்த சீஸனுக்குள் இந்த நிலைமை மாறும் என்று நம்புவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home