Sunday, December 19, 2004

Vani Mahal, 18/12/2004, 6.30 P.M

கச்சேரி எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடைய ஜனரஞ்சகம் தேவைப்படுகிறது. பெரும்பாலும், ஜனரஞ்சகமாக கச்சேரி செய்பவர்கள் மேல் 'இசையை dilute செய்கிறார்' என்ற குற்றச்சாட்டைக் காணலாம். நிறைய விவகாரம் வைத்து பாடும் பலர் பிரபலமேயடையாமல் போய்விடுவார்கள். ஜனரஞ்சகமாகவும் பாடி, அதே சமயத்தில், சம்பிரதாயங்களை மீறாமலும் இருந்து பாமரரையும் பண்டிதரையும் திருப்திப் படுத்தும் வண்ணம் கச்சேரி செய்ய சிலரால்தான் முடிகிறது. இந்த சிலரில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ¤ம் ஒருவர். நேற்று ஒரு 'child prodigy'-இன் கச்சேரி கேட்ட inertia-வில் இன்று மாண்டலின் கச்சேரிக்கு ஜீ.என்.செட்டி தெருவில் இருக்கும் வாணி மகாலுக்கு விரைந்தேன்.

டிசம்பர் 2000-க்குப் பிறகு வாணி மஹாலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. நடுவில் அரங்கம் renovate செய்யப்பட்டது என்பது மாத்திரம் தெரியும். ஆனால் இத்தனை அழகாக மாறியிருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. வாத்தியக் கலைஞர்களுள் சிலர் கச்சேரிகளுக்குத்தான் அரங்கம் நிரம்பும். அந்த சில கச்சேர்¢களுள் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் கச்சேரியும் ஒன்று. அரங்கில் அடித்துப் பிடித்து நான் நிழைவதற்கும், almost full-house-க்கு முன் ஸ்ரீநிவாஸ் பேகடா வர்ணத்தை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கு முன்னும், எந்த கிருதியை வாசிக்கப் போகிறார், அந்த கீர்த்தனை அமைந்த ராகம், அது யாருடைய சாஹித்யம், என்பதையெல்லாம் அறிவித்துவிடுகிறார் ஸ்ரீநிவாஸ். கச்சேரிகளில் ராகத்தை கண்டுபிடிப்பது என்பது சுகமான விஷயம். கீரவாணியா/சிம்மேந்திர மத்யமமா என்கிற போராட்டத்தில் ஈடுபட்டு, ஒருவழியாய் முடிவுக்கு வருவதில் தனி சுகம் இருக்கிறது. 'காங்கேயபூஷணி', 'பிரதாபவராளீ' போன்ற ராகத்தை எல்லாம் அறிவித்தால் பரவாயில்லை. மோகனத்தையும், கமாஸையும் அறிவித்து ராகம் கண்டுபிடிப்பதில் இருக்கும் சுகத்தை ரசிகர்களுக்கு ஸ்ரீநிவாஸ் மறுக்காமல் இருக்கலாம்.

ராகம் கண்டுபிடிப்பதில் இருக்கும் சுகம் சிற்றின்பம் என்றால், அவர் வாசிப்பைக் கேட்பது பேரின்பம். சிற்றின்பத்தை ஸ்ரீநிவாஸ் நமக்கு மறுத்துவிட்டாலும், பேரின்பத்தை அளிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. 'வர்ணம்' என்ற சொல்லே பரவசப்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆயிரம் பட்டாசுகள் வாங்கினாலும், காலையில் எழுந்தவுடன் சரவெடி ஒன்றை வைத்துவிட்டுதான் மற்றதைப் பார்க்கிறோம். அந்த வகையில் ஆயிரம் பாடல்களில் இருப்பினும், வர்ணங்களைக் காட்டிலும் கச்சேரியை ஆரம்பிபதற்கு தோதான ஒன்று இல்லையென்றே கூறலாம். 'இந்த சால' வர்ணத்திற்குப் பின், brisk ராகங்களில் ஒன்றான ஸ்ரீரஞ்சனியில் அமைந்த பாபநாசம் சிவன் கிருதியான 'கஜவதனா கருணா சதனா' பாடலை எடுத்துக் கொண்டார். (Sriranjani seems to be a strong favourite of Shrinivas. In the last 4 concerts I have attended, he has played Sriranjani thrice) நல்ல அரபியக் குதிரைகளின் சீரான ஓட்டத்தைப் போல ஸ்வர்ப்ரஸ்தாரம் செய்து கச்சேரியைக் களைகட்ட வைத்தார்.

ஸ்ரீரஞ்சனியைத் தொடர்ந்த கமாஸ் நல்ல contrast-ஆக அமைந்தது. விளம்ப காலத்தில் ஸ்ரீநிவாஸ் 'ப்ரோசேவாரெவருரா'-வை இழைத்துத் தள்ளியபின் பட்டணம் சுப்ரமண்ய ஐயரின் 'கோரின வரமு' என்கிற ராமப்ரிய ராகக் கீர்த்தனையை, ஒரு short and sweet ஆலாபனைக்குப் பின் எடுத்துக் கொண்டார். கமாஸ¤ம் ராமப்ரியாவும் மாண்டிலனிலிருந்து சுரந்து அரங்கை நிரப்பிய போது, சற்று முன்பு அதி-துரிதமாய் கட்டுக்கடங்காத காளை போன்ற இசையை எழுப்பிய அதே மாண்டலினா இத்தனை விஸ்ராந்தியுடன் ஒலிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீநிவாஸ் ஸ்ரீரஞ்சனி ராகத்துக்கும், கிரணாவளி ராகத்துக்கும் ஸ்வரப்ரஸ்தாரம் அதி-அதி-துரித காலங்களில் (break neck speed) ஸ்வரங்கள் வாசித்து, உச்சஸ்தாயியில் ஒருமுறை நிறுத்தி, மறுபடியும் வேகம்பிடித்து, மகுடம் வைத்து ஸ்வரப்ரஸ்தாரத்தை முடிப்பது, முதலில் கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும், அடிக்கடி இவ்வாறு செய்வது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. (பல முறை ஸ்ரீநிவாஸைக் கேட்டிருக்கும் எனக்குத்தான் இவ்வாறு சலிப்பாக இருக்கிறது, கூட்டம் இந்த மாதிரி வாசிக்கும் பொழுதெல்லாம் அப்ளாசை அள்ளி வீசுகிறது). ஸ்வரம், நிரவல், ஆலாபனை எல்லாம் ராகபாவத்தை வெளிப்படுத்தும் வகைதான். மிதமான வேகத்தில் ஸ்ரீநிவாஸ் வாசிக்கும் பொழுது சொட்டும் (bha)பாவம் எல்லாம், அதி துரித ஸ்வரங்களைக் கண்டாலே பாவமாய் ஒதுங்கிக் கொள்கிறது. போன சீஸனில் விஸ்தாரமாய் அரங்கெங்கும் அவசரமே இல்லாமல் படரவிட்ட 'தோடி' ஆலாபனையும், இந்தக் கச்சேரியில் வாசித்த ராமப்ரியாவும்தான் என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் நிற்குமே தவிர, அதிவேக அசகாயசூரத்தனங்கள் எல்லாம் அந்த நிமிட அப்ளாஸோடு abscond ஆகிவிடும். ஸ்ரீநிவாஸ¤ம் இதை உணராமல் இல்லை. பாவத்தை எதிர்பார்ப்பவருக்கு பாவம் சொட்டச் சொட்டவும், மாண்டலினில் சர்க்கஸ் வேலைகள் பார்க்க வந்தவருக்கு அதற்கேற்றார் போல அதி-துரிதமாகவும் வாசித்து அனைவரையும் திருப்திப்படுத்திவிடுகிறார்.

முதல் ஒன்றேகால் மணியில், அதி-துரிதம் அதற்குக் contrast ஆக அதி-பாவம், சுத்த மத்யமம்/ப்ரதிமத்யம ராகங்கள், ஆதி/ரூபகம்/கண்ட சாபு தாளங்கள், தமிழ்/தெலுங்கு கீர்த்தனைகள் என்றெல்லாம் வெரைட்டி காட்டிவிட்டு, பிரதான ராகமாக மோகனத்தை எடுத்துக் கொண்டார். மோகனம் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுதே பரவசமாகயிருக்கிறது. அப்படியிருக்க, மோகனம் ராகம் என்றால் அழகு எவ்வளவு கொட்டிக் கிடக்கும்? அதைக் கேட்கையில் எவ்வளவு பரவசம் ஏற்படும். எங்கே சர்க்கஸ் வேலைகளில் இறங்கி, அதி வேகமாய் வாசிக்கிறேன் என்று மோகனத்தின் 'மோகன' ரூபத்தை காட்டாமல் விட்டுவிடுவாரோ என்று நான் பயந்து கொண்டிருக்கையில், மிக மிக பொறுமையாய், அழகு சொட்ட சொட்ட ராக ஆலாபனையை விஸ்தாரமாகச் செய்தார் ஸ்ரீநிவாஸ். ஸ்ரீநிவாஸின் மாண்டலின் அமைப்பு இதற்லு பெரிதும் துணை புரிகிறது. பொதுவாக stringed instruments-இல் ஒரு முறை மீட்டினால், அந்த ஒலி விரைவில் அடங்கிவிடும். அதனால் அடிக்கடி மீட்ட வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக வாசிக்க முடியாது. ஸ்ரீநிவாஸின் மாண்டலினில் விசேஷ அமைப்பு, அவர் ஒரு முறை மீட்டுவிட்டு, ராகத்தின் பல சஞ்சாரங்களை தொடர்ந்து பல கணங்கள் வாசித்துக் கொண்டே இருக்கத் தோதாய் அமைந்திருக்கிறது. நாதஸ்வரத்தில் ராகம் வாசிக்கும் பொழுது, தொடர்ந்து சங்கதிகள் பெருக்கெடுத்த வெள்ளமாய் தடங்கில்லாமல் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம். அதைப் போன்ற சங்கதிகளையெல்லாம் மாண்டலினில் அடக்கி மோகன ராகத்திற்கு மூழு justice செய்தார். ழ்ழ்ங்காங்கே மேற்கத்திய இசையின் தாக்கத்தையும் லேசாக தூவியது வெகு அழகு. ஆலாபனை முடிந்து, தியாகராஜரின் 'மோகன ராமா' (ஆதி தாளம் 2 களை) வாசித்தார். கீர்த்தனை முடிந்ததும், நிரவலே செய்யாமல் ஸ்வரப்ரஸ்தாரத்தில் இறங்கியதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்.

வயலினில் பக்கவாத்யம் வாசித்த ஸ்ரீநிவாஸ ராவுக்கு ஒரு special சபாஷ். சென்ற சீசன் முழுவதும் சுமாரான வயலின் வித்வானை பக்கவாத்யமாக வைத்துக் கொண்டதில், ஸ்ரீநிவாஸ் அடக்கியே வாசிக்க வேண்டியிருந்தது. இவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமலும், ஸ்வரங்களில் கணக்கு வைத்து வாசிக்கும் பொழ்து கோட்டை விட்டும் நிறையவே படுத்தினார்கள். ஸ்ரீநிவாஸ ராவின் பக்கவாத்யம் மாண்டலினை நிழலெனத் தொடர்ந்தது. அவர் செய்த ஆலாபனைகளும் மெச்சும் வகையிலேயே இருந்தது. மிருதங்கம், கடம், மோர்ஸிங் என்று லய-பக்கவாத்திய கும்பலே மேடையில் இருந்த போதும், அவர்களது வாசிப்பு கீர்த்தனைகளின் பொழுது subdued-அகவே இருந்தது. தனி ஆவர்தனத்தின் பொழுது அதற்கெல்லாம் சேர்த்து வைத்து கலக்கிவிட்டார்கள்.

இந்த சீசனில் இன்னொரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தனி ஆவர்த்தனத்தின் பொழுது போண்டா சாப்பிட எழும்பும் கூட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடரும் என்றும் நம்புவோம். தனி ஆவர்த்தனத்தின் பொழுது தஞ்சாவூர் முருகபூபதி ஆதி தாளம் இரண்டு களையைப் பல permutation-களில் வாசித்து, கதி பேதம் செய்து கண்ட நடையில் தனது முதல் ரவுண்டை முடித்தார். அவரைத் தொடர்ந்த கட வித்வான் (டி.எச்.சுபாஷ்சந்திரன்) , வழக்கமாய் ஆரம்பிப்பது போல சதுஸ்ர நடையில் ஆரம்பிக்காமல், மிருதங்கக்காரர் முடித்த கண்ட நடையை அப்படியே வாங்கி அதிலிருந்து அழகாக சதுஸ்ரத்திற்கு மாறி, கடத்திற்கே உரிய மின்னல் வேக நடைகளை வாசித்தார். ஸ்ரீரங்கம் கண்ணன் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் கட வித்வான் எங்கு விட்டாரோ அங்கிருந்து எடுத்து தன் மோர்சிங்கில் பல ஜாலங்கள் காட்டி நடையை மீண்டுமொருமுறை கண்ட நடைக்கு மாற்றி தனி ஆவர்த்தனத்தின் விறுவிறுப்பை ஏற்றினார். மாண்டலின் ஸ்ரீநிவாஸ¤ம் கடனுக்கு தாளம் போடாமல், தனி ஆவர்தனத்தை அனுபவித்து, தாள வாத்தியக்காரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். சில ரவுண்டுகளுக்குப் பின், குறைப்பை சமத்திற்கு வாசித்து, அழகாய் முத்தாய்ப்பு வைத்து, பல்லவி இடமான அரை இடத்தில் முடித்தார்கள்.

தனி ஆவர்த்தனத்தைத் தொடர்ந்த 20 நிமிடங்களில் சிந்து பைரவி, தர்பாரி கானடா, மாண்ட் போன்ற துக்கடாவுக்கேவுரிய ராகங்களில், சில பாடல்களும், சாய் பஜன்களும் வாசித்து. அண்மையில் அமரரான எம்.எஸ்-இன் நினைவாய் 'குறையொன்றுமில்லை' வாசித்துவிட்டு மங்களம் வாசித்தார்.

இந்த சீஸன் முதல் இரண்டு நாளிலேயே களை கட்டிவிட்டது. நாளைக்கு ஞாயிற்றுகிழமை, குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகளுக்காவது செல்ல வேண்டும். பார்க்கலாம்!

[பி.கு: சாதரணமாகவே என் தட்டச்சில் பிழைகள் அதிகம் வரும். தினமும் கச்சேரி முடிந்து வந்து அவசர அவசரமாய் எழுதுவதால், இந்த கட்டுரைகளில் தட்டச்சு பிழைகள் எக்கச்சக்கமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். தயவு கூர்ந்து பொர்த்துக் கொள்ளவும்.]

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 12:02 PM, Blogger Jayaprakash Sampath said...

//இந்த சீசனில் இன்னொரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தனி ஆவர்த்தனத்தின் பொழுது போண்டா சாப்பிட எழும்பும் கூட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.//

:-) :-) :-)

 
At 9:09 PM, Blogger writerpara said...

ராம்,

இந்த வயதில் உன் ஞானமும் வெளிப்பாட்டு நேர்த்தியும் வியக்கவைக்கின்றன. நீ பெரிய ஆளாக வரவேண்டும். என் வாழ்த்துகள்.

 

Post a Comment

<< Home