Wednesday, December 22, 2004

திருவாரூரும் தியாகராஜனும்

21/12/2004, OST @ Krishna Gana Sabha, 4.00 P.M

திருவாரூர் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பிரம்மாண்டமன கோயிலும், அங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தியாகராஜப் பெருமானும்தான். தியாகராஜன் என்கிற பெயருக்கும் அவ்வூருக்கும் இருக்கும் உன்னத பந்தம், சங்கீத மும்மூர்த்திகளுள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளால் பலப்பட்டது. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இன்றைய நிலையில் தியாகராஜனின் கசேரிக்குச் சென்றால் திருவாரூர் உடனில்லாதபடிப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். நான் சொல்லும் தியாகராஜன், பிரபல வித்வான் ஓ.எஸ்.தியாகராஜன். நான் குறிப்பிடும் திருவாரூர் ஊரல்ல, மிருதங்க வித்வான் ஸ்ரீ திருவாரூர் பக்தவத்ஸலத்தைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

கச்சேரி முழுவதும் தோய்வில்லாமல் பாடுவது, ஜிகினா வேலைகளைத் தவிர்த்து ராக பாவத்துக்கு முக்கியம் அளிப்பது, சாஹித்யத்தை சிதைவில்லாமல் பாடுவது என்றெல்லாம் OST-இன் கச்சேரிகளில் பல நல்ல விஷயங்கள் இருப்பினும், நம்மை அதியெல்லாம் ரசிக்க விட வேண்டுமே. 'Bang-the-vessel-um' என்று இணையத்தில் ஒருவர் திருவாரூர் பக்தவத்ஸலத்தின் வாசிப்பை வர்ணித்திருந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை. என்னதான் பெரிய மிருதங்க வித்வானாக இருக்கட்டும், பாடகர் ஆலாபனையின் பொழுது மிருதங்கத்தில் ஸ்ருதி சேர்ப்பது அத்தனை நாகரீகமாக இல்லாததோடன்றி நாராசமாகவும் இருக்கிறது. ஏதோ ஒருமுறை செய்தால பரவாயில்லை, எல்லா ராகங்களின் போதும் கொஞ்சம் ரவையை எடுத்துத் தொப்பியில் சேர்த்து, 'தொம் தொம் தொம்' என்று ஆசைதீர அறைய வேண்டியது. ஓ.எஸ்.டி எப்பொழுது எல்லாம் உச்சஸ்தாயித் தொட்டு ஒரே ஸ்வரத்தில் கொஞ்ச நேரம் நிற்கிறாரோ அப்பொழுது மட்டும், 'சபாஷ், பலே' போன்ற வார்த்தைகளை அவுத்து விட வேண்டியது, மத்தபடி, தானுண்டு, தன் கையுண்டு, மிருதங்கத்தின் தொப்பி உண்டு, ரசிகர்களின் காது உண்டு என்று சமர்த்தாக இருந்தார் பக்தவத்சலம். பாடகர் பாடாவது கொஞ்சம் பரவாயில்லை, வயலின் வித்வான் வி.வி.ரவியின் பாடு பெரும் திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அவர் வாசிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல் அப்படி ஸ்ருதி சேர்த்தாரா அல்லது 'நீ வாசித்தது போதும், சீக்கிரம் முடி' என்று மறைமுகமாகச் சொல்ல நினைத்தாரா தெரியவில்லை. மிருதங்கத்தைப் போட்டு அந்த அடி அடித்தார் (கவனிக்கவும்: அடித்தார் என்கிறேன், வாசித்தார் என்று சொல்லவில்லை). இப்படியெல்லாம் ஆலாபனையின் பொழுது ஸ்ருதி சேர்த்துவிட்டு, ஆலாபனை முடிந்ததும் வேறு ஒவ்வொரு முறையும் மிருதங்கத்தை திருப்பி வைத்து கல்லால் தட்டி தட்டி வலந்தலைப் பக்கத்தை ஸ்ருதி சேர்க்கிறார். பக்தவத்ஸலம் வாசித்தாரானால் வாத்யத்தில் அத்தனை முறை ஸ்ருதி பிசகி மறுபடியும் சேர்க்க நேரிடாது, அவர் போட்டு அடிக்கிற அடியில் தனது அழுகையை, இந்த ஸ்ருதி விலகல் மூலம் மிருதங்கம் காட்டிவிடுகிறது. இத்தனைக்கும் கச்சேரி முழுவதும் ஒரே மிருதங்கத்தில் கூட வாசிக்க வில்லை. பாதி கச்சேரிக்கு ஒரு மிருதங்கம், அடுத்த பாதிக்கு மற்றொன்று. (அந்த புது மிருதங்கத்தை எல்லோருக்கும் இடைஞ்சலாகும் வகையில் ஸ்ருதி சேர்க்கும் நற் காரியத்தை பக்தவத்சலத்தின் சிஷ்யர் செய்தார்.)

இந்தத் தொந்தரவுகளையெல்லாம் மீறி கச்சேரி ரசிக்கும் படியாக இருந்தது. அன்னமாச்சாரியாரின் ஹம்சத்வனி ராகப் பாடலில் (வந்தேஹம்) தொடங்கி, தியாகராஜரின் 'விநாயகுனி' பாடலில் முடிக்கும் வரை, OST-இன் இசை தங்கு தடையின்றி பொங்கி வழிந்த வண்ணம் இருந்தது. 2.30 மணி நேராத்துக்குள் எக்கெச்செக்கமாய்க் கீர்த்தனைகளைத் திணிக்காகமல், ஏழே ஏழு கீர்த்தனைகளைப் பாடினார். வி.வி.ரவியின் வயலின் வாசிப்பும் கச்சேரியின் வெற்றிக்கு பெரிதும் பலம் சேர்த்தது. கச்சேரி தொடங்கும் முன்பு, கௌரி மனோஹரி ராகத்தைப் பாடுமாறு என்னுடைய request-ஐ வைத்தேன். ஒரு ரசிகனின் கோரிக்கையை புறக்கணிக்காது, கௌரிமனோஹரியில் ஆலாபனை, கல்பனை ஸ்வரம் எல்லாம் பாடி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். கௌரி மனோஹரியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணி படிப்படியாக வளர்ந்து, பெரும் காட்டாறாய் மாறி (அதிகம் ஆளில்லா) அரங்கையே நனைத்தாள். OST, தனது பலம், விளம்ப காலக் கீர்த்தனைகளிலும், அவசரமில்லாத ஆலாபனைகளிலும்தான் இருக்கிறது என்பதை நன்குணர்ந்து, தனக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, அதற்கேற்றார் போல கீர்த்தனைகளைத் தேர்வு செய்து கொள்கிறார். ஜெயதேவரைப் பற்றி ஊத்துக்காடு வெங்கடகவி எழுதியுள்ளப் பாடலான 'பத்மாவதி ரமணம்', தியாகராஜரின் தேவகாந்தாரி ராகப் பாடலான ('க்ஷீர ஸாகர' அல்ல) 'விநராதா' மற்றும் அன்றைய main ராகமான சங்கராபரணத்தில் அமைந்த 'எதுட நிலசிதே'-வும் இதற்குச் சான்று.

சங்கராபரணம், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்கும் தங்கமாய் OST-யின் கையில் மாறியது. அதை வைத்து அழகியதொரு ஆபரணத்தை உருவாக்கி அதை அப்படியே வயலினிஸ்ட் வி.வி.ரவியிடம் கொடுக்க, அவர் அந்த ஆபரணத்திற்கு இன்னும் நிறைய அலங்காரங்களை நுணுக்கமாக செய்தார். வெறும் தங்கம் சங்கரன் அணியக்கூடிய 'சங்கராபரணமாய்' அரை மணி நேரத்தில் உருமாறியது. ஓ.எஸ்.டி-இன் சாஹித்ய சுத்தத்தைப் பற்றி போன வருடமே சொல்லியாகிவிட்டது. (மரத்தடி.காம்-இல்படிக்கலாம்). ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும்படி ஓ.எஸ்.டி பாடிக் கொண்டிருக்கையில், பாடலில் எந்த வரியை நிரவலுக்கு எடுத்துக் கொள்வார் என்று அனுமானித்துக் கொண்டிருந்தேன். 'தரான தொரகனி பராகு நாயெட' என்ற சரணத்தின் வரிகளைதான் நிரவலுக்கு எடுத்துக் கொள்வார் என்று நான் நினைத்ததற்கு மாறாக, 'கால் இடம் தள்ளி' எடுப்பு இருக்கும் அனுபல்லவியை எடுத்துக் கொண்டார். ஆலாபனையில் உருவான தங்க ஆபரணத்தில் பொன்னும் மணியும் முத்தும் பதித்தார்போல நிரவலும் ஸ்வரமும் அமைந்தது. அதனைத் தொடர்ந்த தனி ஆவர்த்தனத்தை அப்படிச் சொல்வதற்கில்லை. வேகம் வேகம் வேகம், அதை அடைய சத்தம் சத்தம் சத்தம். கஞ்சிரா வாசித்த பி.புருஷோத்தமன் என்ன செய்வார் பாவம், மிருதங்கக்காரரை ·பாலோ பணீதானே ஆக வேண்டும், அவரும் தனது கஞ்சிராவை முடிந்தவரை அறைந்தார். சதுஸ்ர நடையை திஸ்ரத்துக்கு மாற்றி அதிலேயே குறைப்பும் செய்தார்கள். சமையத்தில் மிருதங்கம் நையாண்டி மேளம் போல ஒலித்தது. தனி ஆவர்த்தனம் முடிந்ததும் பலத்த கைதட்டல், அது தனி ஆவர்த்தனம் முடிந்ததற்கா அல்லது நன்றாக இருந்ததற்கா என்பதை நாமறியோம்.

இந்த அற்புதமான கச்சேரி நேற்றைய தின சந்தோஷத்தின் தொடக்கம்தான். அதனைத் தொடர்ந்த பேரானந்தத்தையும், அதை வஞ்சனையின்றி வழங்கிய சஞ்சய் சுப்ரமண்யத்தைப் பற்றி விரைவில்.....

பின் குறிப்புகள்:
1)
kutcheribuzz.com போன வெள்ளியன்று மட்டும்தான் கச்சேரிக்கு இடைஞ்சலாய் அவர்களது daily update-ஐ விநியோகம் செய்தார்கள், மற்ற நாளெல்லாம், 2-3 பேர் சபா வாசலில் விநியோகம் செய்கிறார்கள்.

2) சமுத்ரா பத்திரிகை போன வருட புத்தகங்களையே இந்த வருடமும் வைத்திருப்பதாக எழுதியிருந்தேன். அது மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் மாத்திரம்தான் போல. இன்று முத்ராவில் நவம்பர் 2004 இதழ் வரை அடுக்கி வைத்தொருந்தார்கள். தவறான செய்திக்கு மன்னிக்கவும்.

3) போன வாரம் நான் கேட்டுக் கொண்டது இறைவன் காதுக்கு எட்டிவிட்டது போலும். ஆல் இந்தியா ரேடியோவும் தூர்தர்ஷனும் இப்பொழுது கொஞ்சம் ரெக்கார்டிங்குகளை வெளியிட்டிருக்கின்றன. மியூசிக் அகாடெமியில் இசை விழாவைத் தொடக்கி வைத்த ஜஸ்டிஸ் பக்தவத்சலமும் நிறைய ரெக்கார்டிங் வெளியிடுமாறு ஆல் இந்தியா ரேடியோவை விண்ணப்பித்துள்ளார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home