Wednesday, December 29, 2004

பாடாத பாட்டெல்லாம்

விஜய் சிவாவின் கச்சேரிகளுக்கு வேறெதற்காகக்ச் செல்லாவிடினும், அவர்பாடும் கீர்த்தனைகளைக் கேட்பதற்காகவே செல்லலாம். இன்று வேறு யாருமே பாடாத, மணி மணியாய் இருக்கும், பல கீர்த்தனைகளைப் பாடுபவர் விஜய் சிவா. ராயப்பேட்டையில் இருக்கும் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில், வலையப்பட்டி நாதலயா ட்ரஸ்ட் நடத்தும் இசை விழாவில், 4.30 மணி ஸ்லாட் விஜய் சிவாவுக்கு. நான் செல்லும் பொழுது, 'சரோஜ தள நேத்ரியை' முடித்துவிட்டு, சங்கீர்ண ஜாதி அட்ட தாளத்தில் ஒரு திருப்புகழைப் பாடிக் கச்சேரியை முடித்துக் கொண்டிருந்தார் ஒரு இளம் வித்வான்.

அந்தக் கச்சேரி முடிந்ததும், சரியாக 4.30-க்கு மேடையேறி, 4.35-க்கு 'கணநாயகம் பஜேஹம்' பாடலை ருத்ரப்ரியாவில் ஆரம்பித்தார். (என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமி, நான் 'பூர்ண ஷட்ஜமம்' என்று குறித்துக் கொளவதைப் பார்த்து, தீக்ஷதர் கிருதினா ருத்ரப்ரியானுதான் சொல்லணும் என்றார்.) ருத்ரப்ரியாவில் கல்பனை ஸ்வரங்கள் சரங்களாய் விஜய் சிவாவின் வாயிலிருந்தும், எம்பார் கண்ணனின் வில்லிருந்தும் பெருக்கெடுத்த வண்ணம் இருந்தன. ருத்ரப்ரியாவைத் தொடர்ந்து, ஆலத்தூர் சகோதர்கள் அடிக்கடிப் பாடிய, 'எந்துகு நிர்தய' பாடல் ஹரிகாம்போஜியில் தொடர்ந்தது. (காம்போஜி கோலோச்சும் இந்தக் காலத்தில், யார் ஹரிகாம்போஜியெல்லாம் பாடுகிறார்கள்.)

ஒரு ராகம் கேட்டால் கிடைக்கும் நிறைவை வார்த்தைகளில் சொல்வது கடினம். சில சமயம் 1 மணி நேரம் கேட்டால் கூட நிறைவேற்படுவதில்லை, சில சமயம் 10 நிமிடத்திலேயே நிறைவேற்பட்டுவிடுகிறது. விஜய் சிவா பாடிய முதல் மூன்று ராகங்களும் (ருத்ரப்ரியா, ஹரிகாம்போஜி, உசைனி) 20 நிமிடத்துள் பாடப்பெற்றன. விறுவிறுப்பான மத்யம காலத்தில், இரண்டு தீக்ஷதர் கீர்த்தனைகள், 1 தியாகராஜர் கீர்த்தனையை அழகாகத் தேர்வு செய்து, அதில் தேவையான அளவு ஸ்வரப்ரஸ்தாரமும் ஆலாபனையும் செய்து கச்சேரியை களை கட்ட வைத்தார். இதற்கு பக்கபலமாக எம்பார் கண்ணனின் வயலின் வாசிப்பும், மனோஜ் சிவா மற்றும் புருஷோத்தமனின் தாள வாத்திய வாசிப்பும் இருந்தன.

சப் மெயினாக சிம்மேந்திரமத்யமத்தை எடுத்துக் கொண்டு, வெகு நாளாக பிரதி மத்யம ராகத்தைக் கேட்க ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கு இது கர்ணாம்ருதமாக இருந்தது. இது கீரவாணியா, ஷண்முகப்ரியாவா என்றெல்லாம் குழப்பாமல் எடுத்த எடுப்பிலேயே சிம்மேந்திர மத்யமம் தெளிவாகத் தெரியும்படி அழகாக பாடினார். எம்பார் கண்ணனின் response, விஜய் சிவா உருவாக்கிய விறுவிறுப்பைக் மேலும் ஏற்றி, மின்னல் வேகத்தில் பறக்கும் ஸ்வர அம்புகளை உதிர்த்துத் தன் வில் வித்தையைப் பறை சாற்றினார். ஆலாபனையைத் தொடர்ந்து, 'குஹ சரவண பவ' என்னும் மற்றொரு அரிய கீர்த்தனையைப் பாடி, நிரவல் ஸ்வரம் செய்து முடிக்கும் பொழுது, நான் விரும்பும் கிரிக்கெட் அணி முதல் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்தால் எழும் மனநிலையை ஏற்படுத்தியது. இன்னும் ஸ்லாக் ஓவர்ஸில் விளாசுவதுதான் பாக்கி. (சிம்மேந்திரமத்யம கீர்த்தனை செய்ய ஆரம்பித்த பொழுது மனோஜ் சிவாவின் மிருதங்கத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டது, அடிக்கடி மிருதங்கத்தின் தொப்பியை சரி செய்த வண்ணம் இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தனது முயற்சியைக் கைவிட்டு வாசிக்க அதே நிலையில் வாசிக்க ஆரம்பித்தார். திருச்சி சங்கரன், காரைக்குடி மணி போன்ற சீனியர் வித்வான்கள் கச்சேரி மேடையிலேயே ஒரு spare மிருதங்கம் வைத்திருப்பதன் அவசியம் அப்பொழுதுதான் எனக்கு விளங்கியது. மனோஜ் சிவாவுக்கும் விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.)

சப் மெய்னுக்கும், மெய்னுக்கும் இடைப்பட்ட காலமான 2 நிமிடத்தில், இன்னொரு அரிய ஷ்யாமா சாஸ்த்ரியின் தோடி ராகக் கிருதியன 'கருணாலனி'-யைப் துரித காலத்தில் பாடினார். கச்சேரியின் பிரதானமாக சங்கராபரணத்தை எடுத்துக் ஒண்டார் விஜய் சிவா. போன சீசனில் நான் சென்ற இடத்திலெல்லாம் காம்போஜி ஒலித்தது போல இந்த வருடம் சங்கராபரணம் துரத்துகிறது. இருந்தாலும், சங்கராபரணம் அப்படி ஒன்றும் அலுப்பை ஏற்படுத்தக் கூடிய ராகம் அல்ல. அதுவும் விஜய் சிவா நிதானமாக, விஸ்தாரமாக, இழைத்து இழைத்துப் பாடும் பொழுது அப்படியொன்றும் கேட்க கஷ்டமாக இல்லை. (இருப்பினும், அவருக்கு முன் அந்த மேடையில் கச்சேரி செய்தவரும் சங்கராபரணத்தையே பிரதானமாகப் பாடியதை மனதில் கொண்டு வேறேதும் பாடியிருக்கலாம்.) ஆலாபனையை மெதுவாக வளர்த்து உச்சஸ்தாயியை அடைந்ததும், அதுவரை உருவாக்கிய ரதத்தில் இரண்டு அரபிய குதிரைகளைக் கட்டியது போல, அவர் குரலிலிருந்து புறப்பட்ட புரவி வேக பிருகாக்கள், சங்கராபரணம் என்ற தேரை இழுத்துக் கொண்டு அரங்கெங்கும் ஓடின. ஆலாபனையின் போதே என்ன பாட்டு பாடுவார் என்று பலர் அனுமானித்துக் கொண்டிருக்கையில், எல்லார் அனுமானத்தையும் பொய்யாக்கி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் விஜய் சிவா.

சுத்தாநந்த பாரதியின் 'துக்கிய திருவடி' பாடலை இந்நாளில் கேட்பது துர்லபம். மதுரை மணி ஐயர் அந்த பாடலில் 'எத்தனையோ பிறவி' என்கிற இரு வார்த்தையை வைத்துக் கொண்டு செய்த நிரவல் காலத்தைக் கடந்து ரசிகர்களின் நெஞ்சில் நிற்கும். விஜய் சிவா இந்தப் பாடலை, பிரதோஷ வேளையில் (சுமார் 6.00 மணிக்கு) அரங்கமே மகிழ்ச்சியில் துள்ளியது. துர்திருஷ்டவசமாக, விஜய் சிவா சங்கராபரண ராகம் பாடி கீர்த்தனையைப் பாடி 'எத்தனையோ பிறவியில்' நிரவல் ஆரம்பிக்கும் பொழுது கச்சேரியை முடிக்க கைவசம் அரை மணி நேரம்தான் இருந்தது. அந்த அரை மணியில் கடைசி 10 நிமிடம் துக்கடாவுக்கும் 5 நிமிடம் தனி ஆவர்த்தனத்துக்கும் போக, எஞ்சிய நேரத்தில் எவ்வளவு நன்றாகப் பாட முடியுமோ அவ்வளவு நன்றாகத்தான் பாடினார். ஆனாலும் கேட்டவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பாடியிருக்கலாமே என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்கும். என்னதான் 280 ரன் நல்ல ஸ்கோர் என்றாலும், கடைசி 10 ஓவரில் 60 ரன் மட்டுமே அடித்தால் கொஞ்சம் நிறைவில்லாமல்தானே போகும்? (அவசர அவசரமாக வாசித்த தனியைப் பற்றிக் குறிப்பிடும்படியாகச் சொலல் ஒன்றுமில்லை).

துக்கடாவில் கூட Vintage Musiri Special 'என்றைக்கு சிவ கிருபை' பாடலைப் பாடி, கர்நாடக இசையின் பொற்காலத்தை நினைவுபடுத்தினார். அடுத்த கச்சேரி செய்ய வேண்டிய டி.வி.சங்கரநாராயணன் க்ரீன் ரூமுக்குள் பிரவேசித்துவிட, ஒரு விருத்தத்தைப் பாடி, திருப்புகழுடன் கசேரியை முடித்துக் கொண்டார் விஜய் சிவா. அடுத்த சீஸனில் (முடிந்தால் இந்த சீஸனிலேயே) விஜய்சிவாவின் ஒரு 3 மணி நேரக் கச்சேரிக்குச் செல்ல வேண்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home